Sunday, July 18, 2010

மலேஷியா சுறுப்ப பயணம் - பகுதி 2

மொத நாள் கோலாலம்பூர சுத்தி பாத்துட்டு, அன்னிக்கு ராத்திரி பஸ்ல ஏறி 'லங்காவி' தீவுக்கு கெளம்பினோம். மனசுக்குள்ள ஒரு கேள்வி -> ஏறக்குறைய ரெண்டர நாள் அந்த தீவுல என்ன பண்ணப் போறோம்? அப்பிடியே பஸ்ல நல்லா தூங்கியாச்சு. அடுத்த நாள் காலங்கத்தால ஒரு கடலோரத்துல கொண்டு போயி வுட்டான். அங்கிருந்து கப்பல் (ferry) வழியா அந்த தீவுக்கு போனோம். 
கப்பல்ல போறது ரொம்ப புதுசா இருந்துச்சு. ஒரு தீவ முன்ன-பின்ன பாத்தது வேற இல்லியா, அதனால அத பாக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ferryல போவும்போது மதேஷும் சுந்தரும் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க (எனக்கு கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க, நெறையவே பொறாமைங்க). தூங்கிப் பார்த்தேன்! தூக்கம் வரல (எப்பிடி வரும்?), கேமராவ தூக்கிட்டு புறப்பட்டுட்டேன். கொஞ்ச நேரம் பாத்தேன், அவங்க கடலைய நிறுத்தின பாடில்ல (நமக்குதான் யாரும் உருப்பட்டா புடிக்காதே). கிட்ட போயி, "வெளில வந்து பாருங்க, பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு"-ன்னேன். உடனே கடலைய உட்டுட்டு அவங்களும் ஆளுக்கு ஒரு கேமராவ கைல எடுத்துகிட்டாங்க (முத்து... எப்பிடிடா? என்னமோ போடா).

லோக்கல் டூர்-னாலே பலவிதமான angle-ல படம் (படுத்தி) எடுப்போம், இங்க வந்து சும்மாவா இருப்போம்?. background-ல கடல்... ஆளாளுக்கு போஸ் குடுக்க ஆரம்பிச்சோம். கூட வந்தவனெல்லாம் ஒரு மாதிரியா எங்கள பாக்கற வரைக்கும் பலவிதமான போஸ்ல போட்டோ எடுத்தோம். ("கொஞ்சம் சிரிங்க", "இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க", "பின்னாடி glar அடிக்குதுங்க, இந்த பக்கம் தள்ளி வாங்க"-ன்னு ஒண்ணுமே இல்லாததுக்கு வழக்கம்போல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?!). இதுல வேற, நான் ஒருத்தன்கிட்ட என் கேமராவ குடுத்து 'என்னை ஒரு போட்டோ எடு'-ன்னு கேட்டேன், (வேற வழி இல்லாம) அவனும் எடுத்தான்.

ஒரு மணி நேரத்துல தீவுக்கு போயாச்சு (மணி காலைல 8). 'லங்காவி' தீவோட மொத்த சுற்றளவு சுமார் 60 கி.மீ. இருக்கும்னு சொன்னாங்க. வாடகைக்கு ஒரு காரை எடுத்துட்டு (அதுக்கே 2 மணி நேரம் ஆயிடுச்சு)  நாங்க புக் பண்ணி இருந்த ஓட்டலுக்கு போனோம். குளிச்சு, லஞ்ச் முடிச்சுட்டு கெளம்பி நேரா Cable Car-க்கு கெளம்பினோம். போற வழி என்னமா இருக்குது... அந்த தீவு முழுக்க அப்பிடித்தான். சும்மா பச்ச பசேல்னு பாக்குறதுக்கே கண்ணுக்கு இதமா இருந்துச்சு. மனசுக்கும் சாந்தமா அவ்ளோ அமைதியா இருந்துது. அந்த ஊரு மக்களும் ரொம்ப வெகுளியா இருக்காங்க. அருமையான இடம்ங்க.

சரி, Cable கார்க்கு வருவோம். Cable கார்ல நம்மள ஏத்திக்கிட்டு கீழ இருந்து ஒரு பக்கா ஒயரமான மலைக்கு இழுத்துட்டு போறாங்க பாருங்க... பட்டாசு போங்க. செம த்ரில். அத பத்தி சொன்னா புரியாதுங்க, அனுபவிச்சு பாக்கனும். அதுல போவும்போது தலை, கை, கால் எல்லாம் ஒரு மாதிரி 'கிர்ர்ர்ர்'-ன்னு ஆவுது (தண்ணி போட்டா இப்பிடித்தான் இருக்குமோ?), காது அடைக்குது, நெஞ்சுல ஏதோ பண்ணுது - ஆனாலும் அது நல்லாத்தான் இருக்குது.

சுந்தர் என்னை மாதிரியே பயம் இல்லாத மாதிரி முகத்த வச்சுகிட்டு வந்தார். ஆனா மாதேஷ் முகத்துல நல்ல பயம், இதையே சாக்கா வச்சு அவரோட மிஸ்ஸஸ்ஸ அப்பப்போ அணைச்சுகிட்டார் (இதுக்காகவே அவர் பயந்தா மாதிரி நடிச்சாரோ?). ஆனாலும் அவர் பயந்து நடுங்குரத பாக்கவே ஜாலியா இருந்துச்சு. என் நேரம்!!! என்னோட மிஸ்ஸஸ்ஸ கூட்டிட்டு போக முடியாம போச்சு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... சரி, அத உடுங்க ம்ம்ம், அவனவன் கவலை அவனவனுக்கு பெருசு.

கம்பி ஏதாவது அறுந்து, கார் அவ்ளோ ஆழத்துல கீழ விழுந்தா நாங்கெல்லாம் என்ன ஆஆஆஆ....ஆவோம்னு (?!) ஒருத்தர் மாத்தி ஒருத்தர் (ரொம்பவே நெகட்டிவா) பேசிகிட்டே போனோம், அது ஜாலியாவும்(?!) இருந்துச்சு. என் பக்கத்துல உக்காந்திருந்த சுந்தர் 'உம்'-ன்னே வந்தார். ஏன்னா, அவரோட மிஸ்ஸஸ் அவர் பக்கத்துல உக்காந்தா கார் பாலன்ஸ் இருக்காதுன்னு பிரிச்சு எதுத்தாப்ல இருந்த சீட்ல உக்கார வச்சுட்டோம் (ஹல்லோ, இதுல எந்த பிளானும் இல்லைங்க). இருந்தாலும் அவர், அவரோட மிஸ்ஸஸ் பயப்படுறத பாத்து உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டா மாதிரி தெரிஞ்சுது, ஆனா வெளில காட்டிக்கல (பத்த வைக்க பாக்குறியே, பரட்ட). அப்பிடியே ஒரு கால் மணி நேரம், ஒரு மலை மேல போயி எறக்கிவுடுறாங்க (அப்பாடா-ன்னு இருந்துச்சு).

அவ்ளோ ஒயரத்துல இருந்து எங்க பாத்தாலும் அடர்ந்த காடுகள் + மலைகள் + கடல் + கடல் நடுவுல மலை மலையா தீவுகள். என்னமா இருக்குது போங்க. அங்க இருந்து திரும்பவும் Cable கார்ல ஏறி அதுக்கும் அந்தப்பக்கம் இருக்குற இன்னொரு மலை மேல கொண்டு போயி விட்டாங்க. அட.... நம்ம அஜித்தோட பில்லா படத்துல வர்ற arrow bridge அங்கதாங்க இருக்குது... அதுவும் ரெண்டு பெரிய மலைங்களுக்கு நடுவதான் இருக்குது. அந்த பாலத்துல நடக்கும்போது பாலம் லேசா ஆடுது, அதனால மொதல்ல நடக்குறதுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு, அப்புறமா பழகிடுச்சு. பாலத்துல ஒரு ரவுண்டு போனது நல்ல அனுபவம்.

கடைசியா, Cable கார்லயே ரொம்ப பாதுகாப்பா திரும்ப கீழ கூட்டிட்டு வந்து விட்டுடுறாங்க. மொத்தமா இதுக்கு கட்டணம் 25 மலேஷியா ரிங்கிட்தான் (இந்திய மதிப்புல சுமாரா 350 ரூபாய்). அனுபவிக்கிறதுக்கு என்னமா செஞ்சு வச்சிருக்கானுங்க, நம்ம ஊர்ல இப்பிடி எல்லாம் என்னைக்குதான் வர்றதோ?

அப்புறமா ஒரு கடற்கரைக்கு போனோம். அங்க கொஞ்ச நேரம் அப்பிடியே எதுவும் பேசாம உக்காந்திருந்தோம். சில கொழந்தங்க அந்த கடற்கரை மணல்ல வெளையாடுறத பாத்துட்டு இருந்தேன். என்னடா கொஞ்ச நேரமா சத்தத்தையே காணோம்னு திரும்பிப் பாத்தா, மதேஷும் சுந்தரும் ஆளுக்கொரு பக்கம் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட "கண்ணும் கண்ணும் நோக்கியா"-ன்னு ரொமான்ஸ்ல எறங்கிட்டாங்க. கூப்பிட்டு பாத்தேன், அதுக்கு மாதேஷ், "முத்து, பீச்ச சுத்தி பாக்கனும்னு சொன்னீங்கள்ல, போயிட்டு வாங்க"-னாரு. "நான் எப்பங்க அப்பிடி சொன்னேன்???". பதில் இல்ல. சரி, டூர் வந்துட்டு இதெல்லாம் சகஜம்னு மனச தேத்திக்கலாம்னு பாத்தா, நம்ம பொலப்புதான் இவிங்கள பாத்து பொறாமைப்படுறதுலையே போயிரும்போல இருக்கே. நீங்களே கொஞ்சம் என் நெலமைய யோசிச்சு பாருங்க. இதுக்குதான், சௌந்தர் / சீனி / கோபால் -ன்னு யாரையாவது கூட வாங்கடான்னு கூப்பிட்டேன். எல்லாருமே கடைசில கால வாரிட்டாங்க. அப்பறம் வேற என்ன பண்றது? அவரு சொன்னா மாதிரியே நான் 'பீச்'-அ ஒரு ரவுண்டு வந்தேன். அவங்களாவே ஒரு வழியா எந்திருச்சு வந்தவுடனே (எவ்......ளோ நேரம்?) 'டின்னர்'க்கு கெளம்பிட்டோம்.

ஆனா, அன்னிக்கு மத்தியானம் உலகத்துக்கே தெரிஞ்ச முக்கியமான ஒரு விஷயம் எங்களுக்கு மட்டும் அது வரைக்கும் தெரியவே தெரியாது. அன்னிக்கு மதியம் 3 மணிக்கு மலேஷியா முழுக்க சுனாமி எச்சரிக்கை விட்டிருக்காங்க, அப்புறமா வாபஸ் வாங்கிட்டாங்களாம். விஷயம் தெரிஞ்சதும் 'பக்'-ன்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் காலைல 'Island Hopping'-க்கு கெளம்பினோம். ஒரு சின்ன மோட்டார் படகுல (பத்து பேர் உக்காந்து போறா மாதிரி இருக்குது) அந்த தீவ சுத்தி கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு சரியான மழை. ரொம்ப நேரமா மழை பின்னி எடுக்குது. இப்போதைக்கு நிக்கிறா மாதிரியும் தெரியல. நாங்களும் 'என்னடா இது'-ன்னு பொலம்பிகிட்டே படகுல ஏறினோம். 

கடல்ல பயங்கர அலை. எதையும் கண்டுக்காம படகோட்டி வேகமா படக ஓட்றான். சொல்லனுமா? படகு அப்பிடியே air-ல பறந்து உழுவுது, அப்புறம் அடுத்தடுத்த அலைமேல ஏறி திரும்ப ஒரு ஆட்டு ஆட்டி உழுவுது. கேப்பே இல்லாம ஆட்டுன ஆட்டுல, உசுர கைல புடிச்சுட்டு, பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டோம். ஆனா அந்த படகோட்டி, எதையும் கண்டுக்கல. 'எப்பிடியும் இன்னிக்கு ஆப்புதாண்டி'-ன்னு தோனுச்சு. இப்போ நெனச்சா கூட பயங்கரமா இருக்குது. ஆனா கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அலை எதுவும் இல்லை, அங்க அமைதியா படகு போச்சு. அப்பிடியே கொண்டு போயி ஒரு கரைல எறக்கி விட்டான்.

அந்த சின்ன கடற்கரைல, மணல் வெள்ளையா இருக்குதுங்க, கடற்கரை ரொம்ப அழகா இருந்துச்சு. அங்க மக்கள் யாருமே இல்லை. ஆனா நாங்க போனதுக்கப்புறம் சிலர் வந்தாங்க. எல்லாருமே எங்கள மாதிரி சுற்றுலா வந்தவங்கதான்.

எங்க பாத்தாலும் மலை தீவுங்கதான் (ஒவ்வொரு மலையும் ஒரு தீவு). அந்த கடல் + வெள்ளை மணல் + கடற்கரை + மழை + மலை (தீவு) + மலை மேல இருந்த மேகங்கள் எல்லாமா சேந்து பாக்குறதுக்கு சும்மா சொர்க்கம் மாதிரி இருந்துச்சு. செம்ம குஷியாயிட்டோம். மழைக்கு நாங்க போட்டிருந்த முக்காட்டை எல்லாம் எடுத்து தூர போட்டுட்டு, free-யா மழைல நனைஞ்சுகிட்டு கடல்ல குதிச்சுட்டோம். மனசு கொழந்தையா மாறிடுச்சு (அடடா இதையெல்லாம் ஆராயக்கூடாது... அப்பிடியே ஒரு flow-ல சொல்லிட்டேன்). நீச்சல், குதிக்கிறது, ஓடுறது-ன்னு நல்லா ஆட்டம் போட்டோம்.

நேரம் போகப் போக அந்த இடம் இன்னும் அழகா தெரிஞ்சுது. அந்த எடத்த விட்டு வர்றதுக்கு எங்களுக்கு மனசே இல்லங்க. 1 மணி நேரம் கழிச்சு திரும்ப எங்கள படகு மூலமா  fresh water lake-ன்னு ஒரு எடத்துல கொண்டு போயி விட்டான். அந்த ஏரி மலைகளுக்கு நடுவுல இருக்குதுங்க. நாலு பக்கமும், மலை அந்த மலைகளுக்கு வெளிய கடல், உள்ள இந்த ஏரி. இந்த ஏரியோட தனித்துவம் என்னான்னா, நாலு பக்கமும் கடல் இருந்தாலும், இந்த ஏரி தண்ணி உப்பு கரிக்காது. இந்த ஏரில பெடல் போட், நீச்சல் எல்லாமே போலாம், ரொம்ப பாதுகாப்பாவும் இருந்துச்சு. இந்த ஏரில இருக்குற ஒரு மலை பாக்குறதுக்கு கர்பினிப்பெண் படுத்திருக்குறா மாதிரி இருக்குது (கீழ படத்த பாருங்க).

மறுபடியும் அப்பிடியே படகுல சுத்தி காட்டிட்டு, திருப்பி கொண்டு வந்து விட்டுட்டாங்க. அது வரைக்கும் மழை பெஞ்சுட்.........டே இருந்துச்சு.

மீதி நேரத்துல ரெண்டு கடற்கரை, ஒரு கோயில்னு ஒரு ரவுண்டு வந்துட்டு அடுத்த நாள் அங்கயிருந்து மனசே இல்லாம பினாங்கு தீவுக்கு மாதேஷ் குடும்பமும் நானும் புறப்பட்டோம் (சுந்தர் குடும்பம் அப்படியே சிங்கப்பூருக்கு விமானம் ஏறிட்டாங்க).2 நாள் போனதே தெரியலங்க.

லங்காவி தீவு பற்றிய சில பல குறிப்புகள்:
1. எந்த பக்கம் போனாலும் அழகுதான். கடற்கரை, பசுமை, அமைதி, சுத்தம், சுகாதாரம் இப்பிடி அடுக்கிகிட்டே போகலாம். எங்களுக்கு அங்க இருந்து கெளம்ப மனசே இல்லைங்கறதுதான் உண்மை.
2. அந்த தீவுக்கு வந்தவுடனே, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கிட்டு நாமலே ஓட்டிக்கிட்டு தீவுக்குள்ள போறதுதான் நல்லது. இந்திய டிரைவிங் லைசன்ஸ் வச்சிருந்தாலே போதும், காரை வாடகைக்கு எடுக்க முடியும். டிரைவிங் ரூல்ஸ்ம் இந்தியா மாதிரிதான் (ஆனா போலிஸ் அப்பிடி இல்லிங்க, ஜாக்கிரதை). கார் இருந்தா அங்க நாம நெனச்ச நேரத்துக்கு நெனச்ச எடத்துக்கு கார எடுத்துகிட்டு போயிட்டே இருக்கலாம். செலவும் கம்மி. டேக்ஸி எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. காரை ஒரு புரோக்கர்கிட்ட பேரம் பேசித்தான் வாடகைக்கு எடுக்ககனும், அதுக்குன்னே அங்க நெறைய பேர் இருக்காங்க. ரெண்டு பேர் மட்டுமே போனா, பைக் கூட வாடகைக்கு எடுத்துக்கலாம். அது இன்னும் செலவு கம்மி. நாங்க, 5 பேர் போறா மாதிரி ஒரு காரை (sentra) ஒரு நாளைக்கு 130 மலேஷியா ரிங்கிட்டுக்கு வாடகைக்கு எடுத்தோம்.

3. நெறைய தமிழ் மக்கள் இருக்குறாங்க. சில பேர் ஓட்டல்லயும் சில பேர் சிறு தொழில் செஞ்சுகிட்டும் வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்குறாங்க.
4. இங்கயும் விவசாயம் இருக்கு, பூர்வீக மக்கள் நெறையவே இருக்காங்க. அவங்களெல்லாம் ரொம்ப வெகுளியா இருக்குறாங்க.
5. மலேசியாவுக்கும் 'லங்காவி' தீவுக்கும் எந்த விதமான ரோடு பாதையும் இல்ல. எது/யார் வந்தாலும் போனாலும் விமானம் மூலமாகவோ, இல்ல கப்பல் மூலமாகவோதான் வரணும் போகணும்.
6. இந்த தீவுக்கு தினமும் நெறைய சுற்றுலா பயணிகள் வர்றாங்க. அதுவும் ஜோடியாதான் வர்றாங்க (அதனால அவங்க எப்பவும் ரொமான்ஸ் மூடுலதான் இருக்குறாணுங்க). நம்மள பொறுத்த வரைக்கும், தனியா போனாலும் சரி இல்ல ஜோடியா போனாலும் சரி, ஒரு 2-3 நண்பர்கள் / உறவினர்கள் குடும்பம் சேந்து gang-ஆ போனா நல்லா enjoy பண்ணலாம்.
7. ஜாலியா வெளையாடுறதுக்குன்னு நெறைய games / options இருக்கு. ஆனாலும் எதுவுமே செய்யாம சும்மா ஒரு கடற்கரையில அப்பிடியே உக்காந்து இருக்குறதுகூட இங்க இனிமையா இருக்கும்ங்க.
8. லங்க்காவி தீவுன்னாலே கழுகுதான் ரொம்ப பேமஸ். அந்த மலை தீவுகள்ல நெறைய கழுகுகள் இருக்குன்னு நினைக்கிறேன். அதோட நினைவா அங்க பிரம்மாண்டமான கழுகு சிலை ஒன்னு வச்சிருக்காங்க. அந்த சிலையோட வடிவமும் அத வச்சிருக்குற இடமும் அட்டகாசமா இருக்குதுங்க.

பினாங்கு தீவு மற்றும் புத்ரஜெயா நகரம் பற்றி அடுத்த பகுதியில்...

-சமுத்திரன்

No comments:

Post a Comment