Thursday, March 31, 2011

என் அரசியல் கனவு 1

தமிழ் நாட்டுல நடக்குற அரசியல் அசிங்கங்கள பார்த்து ஒரு பக்கம் வெறுப்புல நொந்து நூடுல்ஸ் ஆகி கெடக்குது மனசு. ரொம்பவே வெளிப்படையா அடிச்சிக்கிறாங்க, நேத்து வரைக்கும் எதிர் நிலையில இருந்துட்டு பதவி வரும்னா இன்னிக்கு அவங்க கூடவே நின்னு சிரிச்சு போஸ் குடுக்குறாங்க, கொள்ளை அடிக்கலாம்னா சட்டத்தையே மாத்துறாங்க இல்லைன்னா புது சட்டத்தையே உருவாக்குறாங்க, தலைவனோட குடும்ப ஆளுங்கதான் கட்சியோட முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்களா இருக்காங்க, அடிச்ச கொள்ளைய மறைக்க எவனை வேணும்னாலும் தற்'கொலை' பண்றானுங்க, மக்கள் முன்னாடி என்ன பேசுறோம்னே தெரியாம வீரா வேசமா பேசுறானுங்க - அதுக்கு கை தட்ட மக்களும் இருக்காங்க, கொள்ளையடிச்சதுல கொஞ்ச பணத்த செலவழிச்சு ஓட்டுக்கு காசு குடுக்குறாங்க. வெளியில 'மக்களுக்காக'-ன்னு சும்மா சொல்றது (அது வெறும் டயலாக்-தான்னு மக்களுக்கும் தெரியுது ஆனா கவலைப்பட ஆளில்லை), ஆனா பண்ற அத்தனையும் பணம் பணம்... பணத்துக்காக மட்டுந்தான். அதனால என்னோட விருப்ப அரசியல் மாற்றங்ககளை இங்க கனவு காண போறேன்.
==========
எங்கள் அரசியல் இயக்கத்தின் பெயர் 'கனவு'க் கட்சி.

எம் இயக்கத்தின் வரலாற்றை சுருக்கமாக சொல்கிறேன்: இந்த இயக்கம் தோன்றியது 'கனவு' ஆண்டில். நடந்து கொண்டிருக்கும் அரசியல் அசிங்கங்களை கண்டு மனம் பொறுக்காமல் மாற்று காண விரும்பிய வெறும் 40 இளைஞர்களால் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மவுனமாக நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்த நம் இயக்கம், அரசியல் மாற்று தேடும் இளைஞர்களை ஒருங்கிணைத்து எப்போதும் அவர்களை தொடர்பில் வைத்து இயக்கத்தை பெரிதாக வளர்த்து வந்தது.

எம் இயக்கத்தின் மேல் மட்ட உறுப்பினர்கள், நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கண்காணித்து, தேவையானபோது ஒன்று கூடி, அலசி ஆராய்ந்து  அதன் தீர்வுகளை வடித்து அறிக்கை மூலம் ஊடகம் வாயிலாக தெரிவித்து வந்துள்ளார்கள். அக்கிரமங்களை எதிர்த்து வீதியில் நின்று போராடி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்ததாலும், போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களை அவதிக்குள்ளாக்க விரும்பாததாலும், அவை அனைத்தும் வெறும் விளம்பரக் கருவி மட்டும்தான் என்பதாலும் இவ்வியக்கம் இதுவரை அத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததில்லை. பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கி, அடிதடிகளுக்கு வாய்ப்பாக அப்படி ஓரிடத்தில் கூடி யாரையாவது கண்ணா பின்னாவென்று திட்டி கூக்குரலிட்டுவிட்டு பின் (எதுவுமே நடக்காத போதும்) அப்போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்து பிரிந்து செல்வதில் எம் இயக்கத்துக்கு உடன்பாடில்லை.

அப்படி நடந்த அக்கிரமங்களுக்கு அரசியல் தீர்வுகளையும், இனி அப்படி நடக்காமலிருக்க செயல் திட்டங்களையும் அறிக்கையாக அந்தந்த நேரத்தில் எம் இயக்கம் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. இப்போது அவை அனைத்தும் கோர்வையாக (தொகுதி வாரியாக) "2006-2011 பிரச்சினைகளும் 'கனவு'க் கட்சியின் தீர்வுகளும்" என்ற புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

தற்போது முதன்முதலாக எம் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தேர்தலை சந்திக்கிறது. இது இன்னுமொரு அரசியல் கட்சி அல்ல என்பதை எங்களின் கடந்த ஐந்து ஆண்டுக்கான செயல்பாடுகளே விளக்கும்.
எம் கட்சிக்கு என்னைத் தலைவனாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எமது கட்சி இந்த 2011 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. எங்களை எதிர்த்து நின்று தேர்தலை சந்திப்பவர்களை பற்றியோ அவர்களின் அரசியல் / பண பின் புலங்களைப் பற்றியோ எந்த விவரமும், கவலையும் எங்களுக்கு இல்லை.

எங்கள் கட்சி வேட்பாளர்களின் தகுதியானது பின்வரும் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது (ஜாதி மற்றும் சொத்து மதிப்பு ஒரு வரை முறை அல்ல):
1. பட்டப் படிப்பு படித்தவர்
2. சரளமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச, எழுத தெரிந்தவர்
3. 25 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்
4. இதற்கு முன் இருமுறைக்கு மேல் எம் கட்சி சார்பிலோ அல்லது பிற கட்சி சார்பிலோ போட்டியிடாதவர்
5. குற்றப் பின்னணி இல்லாதவர் - அதாவது இதுவரை தண்டிக்கப் படாதவரும், காவல் துறையில் எவ்வித விசாரணையும் நிலுவையில் இல்லாதவராகவும் இருப்பவர்
6. தான் போட்டியிடும் தொகுதியில் நிரந்தரமாக (தேர்தலுக்கு பிறகும்) வசிப்பவர்
7. தேர்தல் பணிக்காக கட்சிப் பணத்தைத் தவிர ஒரு பைசா செலவிட முன்வராதவர்

எம் கட்சியின் 2011 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையின் சாராம்சங்கள்:
--> கட்சியின் முதல்வர் வேட்பாளராக 'கனவு உறுப்பினர்' அறிவிக்கப்படுகிறார். அவர் 'கனவு' தொகுதியைச் சார்ந்தவர். அவர் கடந்த 4 ஆண்டுகளாக எம் இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் 1996-ல் M.Sc. கணிதம் முடித்தவர். கடந்த வருடம் முடியும் வரை ஒரு கணித ஆசிரியராக அதே ஊரில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். அவருக்கு தற்போது வயது 38.

--> அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு அலுவலக கோப்புக்களும் மாநில அளவில் ஒரியங்கு சேமிப்பில் (centralized storage) கொண்டு வரப்படும்.

--> அரசு அலுவலகங்களையும் சாலைகளையும் நேரடி ஒளி-ஒலி கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

--> அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைபேசி மூலம் நேர-முன் அனுமதி பெரும் முறை அமல்படுத்த வகை செய்யப்படும். அதன் படி, தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று, பொதுமக்கள் நேர விரயமின்றி அந்த அரசு அலுவலகத்தில் தங்கள் வேலையை முடித்து வர வழிவகை ஏற்படுத்தப்படும். முன் அனுமதி பெற்றிருந்தும் அலுவலர் சந்திக்காவிட்டால் அந்த அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

--> போராட்டம் என்ற பெயரில் நகர எல்லையிலோ அல்லது முக்கிய சந்திப்புகளிலோ ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

--> அனைத்து வணிகர்களும் (சிறு வணிகர்கள், கடைகள் உட்பட) தங்களை வணிகர்களாக பதிவு செய்ய வழி செய்யப்படும். அவர்கள் எந்த வித சிறு பரிவர்த்தனையும் கணினியில் பதிந்து ரசீது வழங்க வேண்டும்.

--> விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு எலக்ட்ரானிக் விவசாய அடையாள அட்டை வழங்கப்படும். விவசாய அட்டை வழங்கும் முன் அந்த விவசாயியின் விவசாய நிலங்களின் விவரங்களும், அவற்றின் மதிப்புகளும், நிலத்திற்கான முறையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு பதிவு செய்யப்பட விவசாயியிடமிருந்தும் அரசாங்கமே குறிப்பிட்ட அளவு விலைபொருட்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் வாங்கிக்கொள்ளும்.

--> மின்சாரத்திகான உற்பத்தி செலவும் விநியோக செலவும் பல மடங்காக இருக்க அதன் மூலமான வருவாய் மிகவும் மோசமாக இருக்கிறது. வருவாயை பெருக்கும் வகையில் மின்சார உபயோகத்திகேற்ப அதன் கட்டணம் மாற்றியமைக்கப்படும். மட்டுமின்றி மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு மணி நேரத்திகும் உபயோகத்திலிருந்து குறிப்பிட்ட கட்டணம் கழிக்கப்படும். மேலும் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழி செய்யப்படும். இது ஒரு நீண்டகால செயல் திட்டமென்பதால் அதுவரை பாட்டரிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

--> விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தடையற்ற இலவச மின்சாரம் வீணாக்கப்படுவதை தடுக்க மீட்டர் பொருத்தி உபயோகத்தின் அளவு கண்காணிக்கப்படும்.

--> குறைந்த செலவில் தூய்மையான குடிதண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

--> அரிசிக்கான மானியத்தை குறைத்து மற்ற உணவுப் பொருள்களின் மானியங்களை உயர்த்துவது (ரேஷன் கடை மூலம்). ரேஷன் அட்டைகளை அவரவர் வருவாய்க்கேற்ப வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது இயலாத பட்சத்தில் ஒரு குடும்பம் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை மானிய விலையில் வாங்க முடியாமல் செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும்.

--> வீடின்றி தவிப்போர், கூரை வீடுகளில் வாழ்வோர் மற்றும் வீதிகளில் வசிப்போருக்கான இருப்பிட குறைகளை தீர்க்க எங்கள் கட்சி பல நிலைகளில் விவாதித்தும் யோசித்தும் வருகிறது. விரைவில் தீர்வுகள் எட்டப்பட்டு செயல் திட்டம் அறிவிக்கப்படும்.

--> அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத்தொகை இரட்டிப்பாக்கப்படும், மேலும் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். வருடா வருடம் ஏலம் மூலம் கம்பெனிகளுக்கு காப்பீடு புதுப்பிக்கப்படும்.

--> அவசர சேவை 108 வாகனங்கள் இரட்டிப்பாக்கப்படும்.

--> தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் வங்கிக் காசோலைகள் மூலம் மட்டுமே மாணவர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். நேரிடையாக எக்காரணம் கொண்டும் பணமாகவோ வேறு விதமாகவோ கட்டணம் செலுத்துவதோ வாங்குவதோ கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

--> அரசு தினசரி வேலை வாய்ப்பு மையங்களை அமைத்து அனைத்துவித தினசரி வேலைகளுக்கு பணியாளர்களையும் முதலாளிகளையும் ஒருங்கிணைக்கும். 18 வயதைத் தாண்டிய வேலை வேண்டுவோரும், அன்றைய வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் இதில் குறைந்த அளவில் பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ/மானவியரின் தந்தைக்கும் தாய்க்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்த மையங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுக் கொள்ளலாம்.

--> காவல்துறை முறைப்படுத்தப் படும். அந்தந்த மாவட்ட கலெக்டரின் நேரடி ஒளி-ஒலி கண்காணிப்பில் அனைத்து காவல் நிலையங்களும் கொண்டுவரப்படும். ஒரு இயக்கமோ, கும்பலோ, தனி மனிதனோ பொது மக்கள் அல்லது பொது சொத்திற்கு இடைஞ்சல் / சேதம் தரும் எந்த செயலையும் காவல் துறை அனுமதிக்காது, அவர்களை கடுமையாக தண்டிக்கும். நேர முன்-அனுமதி பெரும் முறை காவல் துறை அலுவலகங்களுக்கும் பொருந்தும். பொதுமக்கள் யாரும் காவல் நிலையத்தில் காத்திருக்க தேவை இருக்கா வண்ணம் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

--> அனைத்து நகரங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும். மழை, வெயில் காலங்களில் நகரத்தை தூய்மையாகவும் நீர் தேங்காமலும் காத்திருக்க வழிகள் ஏற்படுத்தப்படும்.

--> அனைத்து காண்டிராக்ட்களும் வெளிப்படையான மட்டுமே ஏலம் விடப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அத்திட்டத்தின் கணக்கு வழக்குகள் மக்களுக்கு வெளியிடப்படும்.

--> அனைத்து முக்கியமான பேருந்து மற்றும் ரயில் சந்திப்புகளில் அரசே சுத்தமான இலவச பொது கழிப்பிடங்களை அமைத்து பராமரிக்கும்.

--> அரசின் செயல் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள கட்டணமற்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ள இலவச கால் சென்டர்கள் அமைக்கப்படும். மேலும் அனைத்து அரசு அலுவலக பயன்பாடு மற்றும் என்ன பிற சந்தேகங்களையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் சந்திக்க நேர முன்-அனுமதியும் இதன் மூலமே பெறலாம்.

--> போலி சட்டசபை மரபுகள் தூக்கி எறியப்பட்டு, உண்மையான சபை முறைகள் காக்கப்படும்.

--> எம் கட்சி கூட்டங்களிலோ, எங்கள் உறுப்பினர் வெற்றி பெற்றால், அதன் பின் வரும் அரசு விழாக்களிலோ எந்தவித ஆடம்பர அலங்கார கட் அவுட்டுக்களும் இடம் பெறாது.

--> வானொலி, பத்திரிக்கை, தொலைகாட்சிகளுக்கு அதன் நிகழ்ச்சி வரைமுறைகள் வகுக்கப்படும். செய்திகள், கலை, பொழுதுபோக்கு, விவாதம், விவசாயம், அரசியல், கல்வி, மருத்துவம் என அனைத்து வகைகளுக்கும் குறிப்பிட்ட பகுதிகள் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.

தவிர, ஒவ்வொரு வேட்பாளரும் தான் போட்டியிடும் தொகுதிக்கான தேர்தல் கொள்கை அறிக்கைகளை தொகுதி வாரியாக வெளியிடுவார்கள் - அவற்றில் அத்தொகுதிக்கான தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல் திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றை அத்தொகுதி உறுப்பினர் வெற்றி பெற்றால், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வரா விட்டாலும் வெற்றி பெற்ற அவர் சார்ந்த அந்தத் தொகுதிக்கு அத்திட்டங்களை நிறைவேற்றுவார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன இவை அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறோம். மேலும் விவரங்களுக்கு "2006-2011 பிரச்சினைகளும் 'கனவு'க் கட்சியின் தீர்வுகளும்" புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் எங்களின் திட்டங்களின் நோக்கங்களை உணர்ந்து பாதாளத்தில் கிடக்கும் நம் மாநிலத்தை நிமிரச் செய்ய எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.
==========

-சமுத்ரன்

Friday, March 18, 2011

2167 to 2011 - காலம் கடந்து தண்டனை (சிறு கதை)

2011, மார்ச் 20. ஞாயிறு காலை 8 மணி. சுதாகரன், அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள தன் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி மற்றும் 2 மகள்களும் அதே வீட்டில் அவருடன் வசித்து வருகின்றனர். சுதாகரன் தன் குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து இப்போது 3 வருடங்கள் ஆகின்றன.

அவர் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. சுதாகரன் அந்நேரத்தில் யாரையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கவில்லை, சுதாகரன்தான் தன் நண்பரை சந்திக்க அவர் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தார். எனவே குழம்பியவாறே தூக்கக் கலக்கத்தில் கதவின் சிறு துளைக் கண்ணாடியில் வெளியே நிற்கும் ஆளை பார்க்கிறார். வெளியே வித்தியாசமான கெட்டப்பில் அடையாளம் தெரியாத ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.

சுதாகரன் கதவைத் திறந்து, "how can I help you?" என்று கேட்கிறார். வந்தவர் "நீங்கள் தமிழிலேயே பேசலாம். என் பெயர் Jack Tommy FDU10584, நான் 2167-ம் ஆண்டிலிருந்து வருகிறேன்" என்கிறார். சுதாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
<>
சுதாகரன்:
sorry, நீங்க எதோ தப்பான address-க்கு வந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன், யார பாக்கணும்?
Jack:
இல்லை இல்லை. திரு சுதாகரன், நான் உங்களைத்தான் பாக்க வந்தேன்
சுதாகரன்:
ஒகே. என்ன விஷயம்?
Jack:
 நான் செய்த ஒரு தவறுக்கு தண்டனையா இங்கு வந்திருக்கிறேன்
சுதாகரன்:
புரியலையே
Jack:
சுருக்கமா சொல்றேன்... நீங்கள் குடும்பத்துடன் இந்நேரம் காரில் வெளியில் கிளம்பி இருக்க வேண்டும், சரிதானே?
சுதாகரன்:
ஆமா, ஏன் கேட்குறீங்க? அத பத்தி உங்களுக்கு என்ன?
Jack:
இல்லை, எனக்கு தகவல் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன், அதனால்தான் கேட்டேன்.
சுதாகரன்:
புரியல, அதுக்கு எதுக்கு என்னை கேக்குறிங்க?
Jack:
மன்னிக்கணும், எனக்கு இந்த தண்டனை புதிதென்பதால் சிறு பதற்றத்தை உணர்கிறேன். உட்கார்ந்து நிதானமாக பேசலாமா?
சுதாகரன்:
sure sure, உள்ள வந்து உட்காருங்க. இப்ப சொல்லுங்க...
Jack:
அதாவது நான் பிறந்தது 2049 ஜூன்ல. இப்போ எனக்கு 27 வயசாகுது
சுதாகரன்:
கொஞ்சம் இருங்க, இதை புரிஞ்சுக்க சிரமமா இருக்கு. நீங்க சொல்றது உண்மைன்னா, இப்போ 2011 ல நீங்க எப்பிடி?
Jack:
அதான் சொன்னேனே, நான் செய்த ஒரு தவறுக்கு தண்டனையா Time dilation மூலமா 2011க்கு என்னை அனுப்பி இருக்காங்க
சுதாகரன்:
ம். நீங்க பாக்குறதுக்கு வயசுல ரொம்ப சின்னவரா தெரியுது. அப்புறம் காதுல ரவுண்டா எதோ இருக்குதே!
Jack:
ஆமா, டியுப்ல இருந்து குழந்தை வெளிவந்த உடனே பெயரோட சேத்து ஒரு புது எண் குடுத்திடுவாங்க. எனக்கு FDU10584. கூடவே அந்த குழந்தை காதுல இந்த மாதிரி கருவிய பொருத்திடுவாங்க. செயற்கைக்கோள் மூலமா இந்த கருவிய வச்சு அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவையும், தடுப்பு மருந்துகளையும் அரசாங்கம் தீர்மானிக்கும்
சுதாகரன்:
எதுக்காக அப்பிடி
Jack:
ஏன்னா, புதுப்புது வகையான கிருமிகள் வந்துட்டே இருக்குறதால நாம இருக்குற இடம், சுழ்நிலைய கண்காணிச்சு அதுக்கேற்ற மருந்துகள குடுத்துட்டே இருப்பாங்க. அரசாங்கம் தீர்மானிக்கும் உணவும் மருந்தும் நான் அப்போது எங்க இருக்கேனோ அங்கேயே வந்துடும். எங்க உடம்புல ஏற்படக் கூடிய புதிய மாற்றங்களையும் அரசாங்கம் இது மூலமா கண்காணிக்கும். எங்களோட அவசர உதவிக்கும் இதே கருவிய பயன்படுத்த முடியும். என்னோட ஒவ்வொரு அசைவையும் அரசாங்கம் கண்காணிச்சு, அதை சேமிச்சு வைக்க முடியும். அதன் மூலமா ஒரு குறிப்பிட்ட நேரத்துல நான் எங்க என்ன பண்ணிட்டு இருந்தேன்னும் கண்டுபிடிக்க முடியும். ஆனா நான் பேசுறத கண்காணிக்க முடியாது
சுதாகரன்:
பிறப்பு இறப்பு இதெல்லாம்?
Jack:
குழந்தை வேண்டும் என்றால், கணவனும் மனைவியும் அரசாங்கத்திடம் விண்ணபிக்க வேண்டும்; அதற்கு அவர்கள் இருவரும் 21 வயதுக்கு மேலும் 35 வயதுக்குள்ளும் இருக்க வண்டும். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று அரசாங்கம் carrying-tube ல் எங்கள் அணுக்களை செலுத்தி, நம் விருப்பப்படி குழந்தை ஆணோ / பெண்ணோ, அதற்கேற்ற மருந்துகளை செலுத்தி, கருவை உருவாக்குவார்கள். நாமாக கருத்தரித்து குழந்தையை உருவாக்க முடியாது. எனக்கும் 2 குழந்தைங்க இருக்காங்க, என்னோட விருப்பப்படி முதலாவது பெண் குழந்தை, ஏன் காதலி விருப்பப்படி ரெண்டாவது ஆண் குழந்தை. இறப்பில் எந்த மாற்றமும் இல்லை, உங்களைப் போலதான்
சுதாகரன்:
ஆச்சர்யமா இருக்கு. உங்களை பாக்குறதுக்கு எதோ மிஷின் மாதிரி இருக்கு
Jack:
ஹா ஹா. இதே காரணத்த சொல்லி, இப்போ அங்க (2167) பல பேர் போராட்டங்களும் பண்ணிட்டுதான் இருக்காங்க, ஆனா நான் அப்படி நினைக்கல
சுதாகரன்:
ஏன்?
Jack:
இது எல்லாமே எங்க நல்லதுக்குதான் பண்ணி இருக்காங்க, யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் நம்ம விருப்பப்படி இருந்தால் எந்த சிறு பிரச்சினைகளும் இல்லை
சுதாகரன்:
நீங்க பாக்குறதுக்கு தமிழன் மாதிரி இல்லியே, எப்பிடி இப்பிடி அழகா தமிழ் பேசுறிங்க?
Jack:
எனக்கு 12 மொழிகள்ல எழுத, படிக்க, பேசவும் தெரியும். நாம் விரும்பிய மொழிகளை முழுமையாக கற்றுக்கொள்ள அனைத்து வசதிகளும் internet-ல் உள்ளது
சுதாகரன்:
ஓ, ஆச்சர்யம்தான். உங்களுக்கு எழுதக் கூட தெரியுமா?
Jack:
எழுதுவதென்றால் எங்களுக்கு type பண்ணுவது மட்டும்தான். உங்களைப் போல் எழுதுவதற்கு எங்களுக்கு அவசியமில்லாமல் போய் விட்டது, அனைத்து வேலைகளுக்கும் கருவிகள் உள்ளன. என் தோழர்கள் யாருக்கும் பேனாவில் நீங்கள் எழுதுவதுபோல் எந்த மொழியிலும் எழுதத் தெரியாது
சுதாகரன்:
நீங்க சொல்றது ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமா இருக்கு. ஆமா... இப்போ எப்பிடி, எதுக்கு 2011க்கு வந்திருக்கீங்க?
Jack:
நான் என்னோட வாகனத்தை ஓட்டிட்டு போகும்போது தெரியாம ஒரு தவறு செய்துவிட்டேன். அதிக பட்ச அபராதம் விதிக்கப்பட்டதால் நான் செய்தது சிறு தவறுதான் என நீதிமன்றத்தில் வாதிட்டேன். அது வெறும் சிறு தவறல்ல என்றும் அது எனக்கு புரிய வேண்டுமென்றும் கூறி, Feel-Impacts-through-Time-Dilation தண்டனை மூலம் என்னை இங்கு அனுப்பி விட்டார்கள்
சுதாகரன்:
நீங்க சொல்றத கேட்டா எனக்கு பயமா இருக்கு. இப்பிடி எதுவும் நான் கேள்விப்பட்டதே இல்ல. அதென்ன தண்டனை?
Jack:
ஒருத்தர் செய்த சிறு தப்பும் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணரனும்னு அவரோட மூலையில காலத்தை உணரும் செல்களோட அளவுகோள மாற்றும் ஊசி போட்டு நினைவுகள திருப்பி இப்பிடி ஒரு குறிப்பிட்ட கடந்த காலத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி அங்கு நடந்ததை பார்த்து தன் தவறை உணரும் படி தண்டனை குடுப்பாங்க
சுதாகரன்:
ஆச்சர்யமா இருக்கே! வேற என்ன மாதிரி தண்டனை எல்லாம் குடுப்பாங்க?
Jack:
தெரியாமல் செய்யும் தவறுக்கு இந்த மாதிரி நேரில் உணர்ந்து  புரிந்துகொள்ளும் தண்டனையும், தெரிஞ்சே செய்யும் தவறுக்கு, குறிப்பிட்ட காலம் மருந்து மூலம் அசைவுகளை செயலிழக்க வைக்கும் வரை தண்டனைகள் உண்டு. அனைத்தும் மருந்துகள் மூலம்தான்
சுதாகரன்:
அப்படி என்ன தவறு செஞ்சிங்க?
Jack:
சிக்னலில் சிவப்பு விளக்குக்கு மாறும்போது நிற்காமல் சென்றுவிட்டேன்
சுதாகரன்:
இதெல்லாம் ஒரு matter-ஆ?
Jack:
நானும் இதேதான் சொன்னேன். அதுக்குதான் என்னை இங்க அனுப்பிட்டாங்க. நான் இன்று மாலைதான் வந்தேன், ஆனால் அது 7 மணி நேரம் தாமதம் என உணர்ந்து 7 மணி நேரம் முன்னோக்கி சென்று இப்போ வந்திருக்கிறேன்
சுதாகரன்:
இங்க வந்து என்ன பண்ணுவீங்க?
Jack:
நான் பண்ணின மாதிரியே சிறு தப்பால நடக்கபோற கொடூர விபத்தை நான் பார்க்க வேண்டுமாம்
சுதாகரன்:
accident-ஆ? யாரு பண்ண போறா?
Jack:
நீங்கதான்...
சுதாகரன்:
நானா?
Jack:
ஆமா, உங்க car-ஐ இன்னிக்கு நான் பின் தொடர்ந்து வரப் போகிறேன். நீங்க இன்னிக்கு உங்க நண்பர் வீட்டுக்கு போகும்போது நீங்க பண்ற சிறு தப்பால நடக்கப்போற விபத்த பார்த்து உணரத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்... (சுதாகரன் மயங்கி விழுகிறார்...)
சமுத்ரன்

Thursday, March 17, 2011

கங்குலி - the great golden days

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சு விறுவிறுப்பா மேட்ச் எல்லாம் நடந்திட்டிருக்கு. அலுவலகத்துல நண்பர்ங்க எல்லாம் ரொம்ப ஆர்வமா சச்சின் செஞ்சுரி போடணும், இந்தியா ஜெயிக்கணும்னு வேண்டி விரும்பி ஒரு வெறியோட பாத்துட்டிருக்காங்க. இது நம்ம நாட்டுல ரொம்ப சகஜம்தான்.

நானும் ஒரு காலத்துல இப்பிடி வெறியா பாத்துக்கிட்டிருந்தவந்தான். ஆனா இப்போ எல்லாம் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் (இந்தியாவே ஆடினாலும்) எனக்கு வெறும் பெட்டிச் செய்தியாயிடுச்சு. எப்பவாவது கிரிக்கெட் பாக்க உக்காந்தாலும், மனசு அநியாயத்துக்கு நடுநிலையா இருக்கும். எந்த அணி நல்லா வெளையாடுறாங்களோ அந்த அணி ஜெயிக்கணும்னு பார்ப்பேன். எதிரா இந்தியாவே வெளையாடினாலும் அத பத்தி கவலை எதுவும் சுத்தமா இருக்குறதில்ல (யார் ஜெயிச்சாலும் தோத்தாலும் பெருசா பாதிப்பு இருக்குறதில்ல). இப்பிடித்தான் கடந்த ஒரு வருஷமா இருக்கேன்.

இப்பிடி இந்திய அணி மேலயும் கிரிக்கெட் மேலயும் எனக்கு இருந்த வெறி இப்ப இல்லாம போனதுக்கு ஒரே காரணந்தான் - கங்குலி.


கிரிக்கெட் பத்தி எனக்கு தெரியாத நாட்கள்ல எனக்கு அதைப்பத்தி சொல்லி குடுத்த நண்பன் பயங்கர சச்சின் வெறியன். 1996-ல அவன் மூலமாதான் நான் கிரிக்கெட் பாக்க கத்துக்கிட்டேன். ஆனா எனக்கு சச்சின் மேலயும் அவர் ஆட்டத்து மேலயும் பெருசா ஈர்ப்பு வரல, ஆனா அவர் கூட ஒப்பனிங் வந்த கங்குலியோட ஆட்டமும் அந்த முகமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதுவும் ஸ்பின் பவுளிங்ல ஒரு ஸ்டெப் எறங்கி வந்து சிக்சர் அடிக்கும் ஸ்டைல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

கங்குலி பேட்டிங் பண்ணுறப்ப மட்டுமில்லாம பீல்டிங், பவுலிங் பண்ணும்போதும் அவரோட நடை, பாவனை எனக்கு ரொம்பவே பிடிச்சுபோச்சு. ஆனா என்னோட நண்பர்ங்க பல பேருக்கு கங்குலிய சுத்தமா பிடிக்காது. அவங்க கூட பல தடவ பயங்கரமா சண்டை வந்திருக்கு. :) ஒரு சீசன்-ல அவர் சுத்தமா பார்ம் இல்லாம இருந்தப்போ எல்லாரும் கங்குலிய கிண்டல் பண்ணி வருத்தெடுத்தாங்க, அப்பல்லாம் எனக்கு சண்டை போட விஷயம் இல்லாததால அமைதியா போயிருக்கேன். ஆனாலும் அவர என்னால வெறுக்க முடியல. திரும்ப பார்முக்கு வந்து பட்டய கெளப்பனும்னு வேண்டிக்குவேன்.


அப்புறமா அவர் கேப்டனா ஆனதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் டீமுக்கே ஒரு கெத் வந்துச்சு. எவனும் நம்ம அணிகிட்ட வம்பு வளர்க்க முடியாது, தல 'தில்'லா அங்கயே பதிலடி குடுக்கும். 'தல'ய பத்தி தெரியாம வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டவங்க நெறைய பேர் (அவர் எப்பவுமே "அன்புக்கு அன்பு, அடிக்கு அடி" பாலிசிதான். ) :)

சச்சின மட்டுமே நம்பி இருந்த நம்ம டீமுக்கு யுவி, ஷேவாக், கெய்ப், ஜாஹீர், ஹர்பஜன், தோனி இப்பிடி பல பேர மேட்ச் வின்னர்ஸ்-ஆ ஆளாக்கின பெருமை கங்குலிக்கு உண்டு. எல்லாத்துக்கும் மேல மேட்சுல இந்தியா ஜெயிச்சுடுச்சுன்னா, அவரோட மொகத்துல ஒரு தெனாவட்டு இருக்குமே, ச்சே! சான்ஸே இல்ல.

இப்பிடி எல்லாம் கங்குலிய ரசிச்சு ரசிச்சு பாத்துபுட்டு, அவர கேவலமா வெளிய அனுப்பி வச்சா எப்பிடி ஏத்துக்க முடியும்? அவர் இல்லாத ஒரு இந்திய அணிய 'நம்ம' அணியா என்னால யோசிக்க முடியல. 'தல' பல பாலிடிக்ஸ் பண்ணுனார்-னு தெரியும். ஆனா அதையும் தாண்டி அவர ரசிச்சேன். வெற்றி கேப்டனா தொடர்ந்து வளம் வரணும்னா அரசியல் பண்ணாம முடியுமா? அவரோட முழு ஆளுமையில இந்திய கிரிக்கெட் அணி இருக்குறது புடிக்காதவங்க, கேவலமான அரசியல் பண்ணி அவர வெளியில அனுப்பிட்டு, தன்னோட கண்ட்ரோல்-ல இருக்கக் கூடிய கேப்டன போட்டுக்கிட்டு வெறும் பணம் பண்ணும் வெளையாட்டா ஆக்கிட்டானுங்க. கங்குலியோட இந்த நெலமைய சச்சின் ரசிகர்ங்க எல்லாம் ஒரே குஷியா பாத்தாங்க. ஆனா எனக்கு 'தல'ய எப்பவும் ஒரு 'கெத்'தோடவே பாத்து பழகிட்டு, அவர அந்த நெலமையில பாக்கவே பிடிக்கல. அந்த நெலமைக்கு அவர ஆளாக்குன இந்திய கிரிக்கெட் அணிய சுத்தமா வெறுத்துட்டேன். போகப் போக கிரிக்கெட்டே பிடிக்காம போச்சு.


அப்புறம் மேட்ச் பிக்சிங் பிரச்சினை வேற. எது உண்மையான போட்டி, எது டிராமான்னு கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு கிரிக்கெட்ல பணம் வெளையாடுது. இப்போ எல்லாமே வெறுத்துடுச்சு. இதெல்லாம் சேந்து இப்போ இந்தியாவும் பாகிஸ்தானும் வெளையாடுற கிரிக்கெட் போட்டிக்கும், ஸ்ரீலங்கா தென் ஆப்பிரிக்கா வெளையாடுற கிரிக்கெட் போட்டிக்கும் எந்த வித்தியாசமும் என்கிட்ட இல்ல.எவன் ஜெயிச்சா என்ன, எவன் செஞ்சுரி அடிச்சா என்ன-ன்னு மனசு எதையும் கண்டுக்குறதே இல்ல. அது பல விதங்கள்ல நல்லதுதானன்னு நமக்கும் ரொம்பவே நிம்மதி. :)



கங்குலிய அவ்ளோ ஆக்ரோஷமா பாத்து பழகிட்டு, அவரோட இந்த பேட்டிய பாத்தா அவர் இவ்ளோ அமைதியானவரான்னு தோனுச்சு. அது இன்னும் அவர புடிச்சுப் போச்சு. ச்ச, திரும்ப கங்குலி விளையாடினா அதுவும் இந்தியாவுக்கு கேப்டனா விளையாடினா எப்பிடி இருக்கும்? ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.

-சமுத்ரன்

Friday, March 4, 2011

சிங்கப்பூர் to இந்தியா - பிப் 2011

இந்தியாவுக்கு குடும்பத்தோடு வெகேஷன் போயிட்டு வந்தோம்.

பிப் 1ம் தேதி 20 நாள் லீவுல நான் இந்தியாவுக்கு போனேன். எனக்கு ஒரு மாதம் முன்னாடியே மனைவியும் நிரஞ்சனும் ஊருக்கு போயிட்டாங்க. பொங்கலுக்கு முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனதுல ஊர்ல எல்லாரும் ரொம்ப குஷியாயிட்டாங்க. என்னோட இந்த பயணத்தின் குறிப்புகள்தான் இந்த பதிவு.

சென்னை:
சிங்கப்பூர்ல இருந்து நான் சென்னைக்கு போனது ஒரு செவ்வாக்கெழம. இருந்தாலும் அன்னிக்கு முழுக்க சௌந்தர் எனக்காக லீவு போட்டுட்டு (அப்பிடித்தான் சொன்னான், எனக்கே கொஞ்சம் டவுட்டாத்தான் இருக்குது), சென்னைல நான் விருப்பப்பட்ட எடத்துக்கு சந்தோஷமா பைக்ல கூட்டிட்டு போனான். ஆனா என்ன, விடாம ஆபிஸ்ல இருந்து போன் மேல போன் போட்டு இவன்கிட்ட சந்தேகம் கேட்டுகிட்டே இருந்தாங்க; போன் பண்ணின அத்தனையும் பொண்ணுங்க (இல்ல, எல்லாமே ஒரே பொண்ணுதானா? - தெரியல!). நீ கெலப்புடா நண்பா. சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம் - எனக்கு டிரெஸ் 3 செட் எடுக்கனும்னு சொன்னேன், சௌந்தரே கடைக்கு கூட்டிட்டு போயி செலக்ட் பண்ணி குடுத்தான் ("அதான பாத்தேன், நீங்க எப்ப இவ்ளோ அழகா செலக்ட் பண்ணினிங்க?" - டிரெஸ்ஸ பாத்துட்டு மனைவியோட கமென்ட் இது). நன்றிடா நண்பா! ரொம்ப நாள் (3-4 வருஷம்) கழிச்சு சென்னைய சுத்தினது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துது. சென்னைய பல விஷயங்கள்ல கடந்த 4 வருஷமா மிஸ் பண்றேன். சென்னை இன்னும் அப்பிடியே இருக்குது (சில இடங்கள்ல புதுசா overbridge வந்திருக்கிறதத் தவிர), அங்கங்க மெட்ரோ டிரெயின் வேலை நடந்துட்டு இருக்குது.

அன்னிக்கு சாயங்காலம், சென்னைல இருந்த மத்த சில நண்பர்களோட (7G, சுரேஷ் & விவேக்) சேர்ந்து, மவுன்ட் ரோட்டுல இருந்த ஒரு வித்தியாசமான ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு ('பில்'ல என்னோட தலையில கட்டிட்டாங்க), அவசர அவசரமா என்னை பஸ் ஏத்தி விட்டுட்டான் நண்பன் (இதுல உள்குத்து எதுவும் இல்லங்க, லேட்டாயி போச்சு... அதனால அவசரமா போனாத்தான் பஸ்ஸ பிடிக்கமுடியும், அதத்தான் அப்பிடி சொன்னேன்). நடுவுல சில தமிழ் நாவல்/புத்தகங்கள வாங்க முயற்சி பண்ணோம், ஆனா ராத்திரி பத்து மணிக்கு மேல ஆனதால வாங்க முடியல. :(

பெங்களூர்:
ஓரிரு நாள் என்னோட கம்பெனி வேலை விஷயமா பெங்களூர் போனப்போ, பெங்களூர் நண்பர்கள் குடும்பங்களையும் சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. ஒரு நாள் ராஜா வீட்டுலயும் இன்னொரு நாள் மாதேஷ் வீட்டுலயும் தங்கி அவங்க கூட பேசிக்கிட்டிருந்தத மறக்கவே முடியாது. பெங்களூர் நண்பர்களோட குடும்பங்களும் என் குடும்பமும் ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே மிஸ் பண்றதால, இந்த சந்திப்பு முழுக்க நெகிழ்ச்சியாவே இருந்துது. பூபாலன், சுந்தர், பாபு, பரத், முத்துக்குமார் குடும்பங்களெல்லாம் மாதேஷ் வீட்டுல சந்திச்சுகிட்டோம், அப்புறம் அங்கேயே எல்லாரும் ஒண்ணா சேர்ந்து டின்னர் சாப்பிட்டோம். எல்லாரும் என்னை பாக்கத்தான் வந்தாங்க(அப்பிடித்தான் சொன்னாங்க)-ன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. "அடுத்த தடவ பெங்களூர் வர்றப்ப மனைவியையும் குழந்தையையும் கூட்டிட்டு வராம வந்தா நடக்குறதே வேற"-ன்னு எல்லாரும் ஒரே மாதிரி சிரிச்சுகிட்டே மிரட்டினாங்க. "சரி"ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், பாப்போம். அன்னிக்கு ராம் 'ஆபிஸ் மீட்டிங்'ன்னு எஸ்கேப் ஆயிட்டான், ஆனா அவன் ஊருக்கு வந்தப்ப, அவனை ரோட்டுலயே மடக்கி ரெண்டு பேரோட மொத்த குடும்பமும் சந்திச்சுகிட்டோம். :) நண்பர் ராஜசேகர் என்னை சந்திச்சப்ப, அவர் ரெண்டொரு நாள்ல அப்பா ஆகப்போற குஷியில இருந்தாரு (இப்போ ஆயிட்டார், வாழ்த்துக்கள்).

மாதேஷ் புண்ணியத்துல அவரோட பைக்க எடுத்துகிட்டு பெங்களூரை வழக்கம் போல சுதந்திரமா வளம் வந்தேன்... (நன்றி மாதேஷ்). சென்னைய ரொம்ப நாள் கழிச்சு பாக்குறப்ப மனசுக்கு ஒரு இதமான அனுபவம் தருதுன்னா பெங்களூர் வேற ஒரு இதமான அனுபவமா இருந்துது. ஆனா ரெண்டு ஊரும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஊர், ரெண்டையும் இப்ப மிஸ் பண்ண வேண்டியதாப் போச்சு.

சொந்த ஊர்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே நாள்ல ரொம்ப தூரம் (200+ கி.மீ.) எழுதிங்கள் அழைப்புக்காக (மனைவிக்கு) பைக்ல சுத்திவர வேண்டியிருந்துச்சு, அது ரொம்ப கஷ்டமா இருந்துது. அப்பா சித்தப்பா, மாமாவெல்லாம் எப்பிடி சர்வ சாதாரணமா பைக்ல ரொம்ப தூரம் போயிட்டு வந்து மத்த வேலையையும் பன்றாங்கன்னு ஆச்சர்யமா இருந்துது. சொந்தக்கரங்களோட வீடுகளுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் போனேன். ஒவ்வொரு வீட்டுக்கு போகும்போதும் சின்ன வயசுல அங்க வெளையாடின நியாபகம் வந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு, நானாவே வீட்ட சரியா கண்டுபிடுச்சு போயி பேசி அழைப்பு சொல்லிட்டு வந்தது நல்ல அனுபவமா இருந்துச்சு. வரிசையா எல்லாரோட வீட்டுக்கும் போனதுல, ஆரம்ப உபசரிப்பு + விசாரிப்புகள்ல எல்லாரும் ஒரே மாதிரின்னு நல்லா புரிஞ்சுது. ஆனா பேச்சுலயும் பழகுறதுலயும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சிலர் நான் சின்ன பையனா இருந்தப்ப என்கிட்டே பேசின மாதிரியே இப்பவும் பேசினாங்க, அவங்க கூட என்னால இயல்பா பேச முடிஞ்சுது, சிலர் புதுசா மரியாதை குடுத்து பேசினாங்க, அவங்க கூட இயல்பா பேச கொஞ்சம் தயக்கம் இருந்தது. எனக்கு இது புதுசு + ஒரு நல்ல அனுபவம். (முக்கிய குறிப்பு: மனைவி வழி சொந்தங்களிடம் வழக்கம்போல் மரியாதை அதிகமாக இருந்தது :))

பிப் 16-ல் நண்பரின் திருமணமும், அதை ஒட்டி அதற்கு முந்தின நாள் நடந்த மனைவியின் எழுதிங்களும் ரொம்ப சிறப்பாகவே நடந்தது மனதுக்கு மிகப்பெரிய சந்தோஷமாக அமைஞ்சுது.

சுற்றும் முற்றும்:
மத்தபடி இந்த தடவ காருலயும் பைக்லயும் மூலைக்கு மூல செம சுத்து சுத்தியாச்சு. இருந்தாலும், ஒரு தடவை உள்ளூரிலும், ஒரு தடவை பெங்களூருக்கும் நானாவே பிளான் பண்ணி பஸ்சுல போனேன். ஏற்கனவே பல தடவ போயிருந்தாலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பின்னாடி இப்ப நம்ம அனுபவம் எப்பிடி இருக்குதுன்னு பாக்குறதுக்காக அப்பிடி செஞ்சேன். :( பெரிய வருத்தந்தான் மிஞ்சிச்சு. வீட்டத்தவிர வெளியில எதையும் வாங்கி சாப்பிட பயம்மா இருக்குது. இன்னும் சில நூறு வருஷமானாலும் நம்மளால ஒரு சுகாதாரமான, தொந்தரவில்லாத சுற்றுப்புரத்த உருவாக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி. மக்கள் பொது இடத்துல தேவையில்லாத முரட்டுத்தனத்தோடவும், குறுகிய மனசோடவும் இருக்குறாங்க. :(

மக்கள் ஏற்கனவே தேர்தல் மூடுக்கு வந்துட்டத பரவலா பாக்க முடிஞ்சுது. யாரு யாருகூட கூட்டணின்னு ஆர்வமா பாத்துட்டு இருக்காங்க. எங்க ஏரியாவுல கொங்கு நாடு கழகம் எப்பவும் இல்லாம இப்போ ரொம்பவும் எழுச்சியோட இருக்குறது தெரிஞ்சுது (இது நல்லதா கேட்டதா?).

ஷாப்பிங் பண்ண, ஈரோடுல மார்கெட் ஏரியாவ நல்லா சுத்திவர வேண்டியிருந்துச்சு. சிங்கப்பூர்ல நல்லா நடந்து பழகிட்டதால, ரொம்ப சுலபமா அங்க அத்தன வெயில்லயும் நடக்க முடிஞ்சுது. ஈரோடுல டிராபிக் பயங்கரமா அதிகமாயிடுச்சு, சென்னை மாதிரி டிராபிக் இருக்குது. ஒரு 100 ரூபாய வச்சுகிட்டு கொஞ்சூண்டு ஸ்நாக்ஸ் சாப்பிடுறத தவிர ஒண்ணுமே பண்ண முடியாது - கொடுமைதாங்க. தொட்டதெல்லாம் நான் நெனச்சத விட பயங்கரமா வேலை ஏறிப் போயி கெடக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

சிங்கப்பூர் திரும்பும்முன்:
தோட்டத்துக்குள்ள திறந்த வெளி வீடு, நிரஞ்சனுக்கு வெளையாடுறதுக்கு ஜோடி, தெனமும் சில சொந்தக்காரங்கள பாக்குறது + பேசுறது, ஏதாவது சின்ன சின்ன வேலை, ஆபிஸ் கிடையாது, பைக் / கார்ல சுத்துறது-ன்னு நல்லா அனுபவிச்சாச்சு. இப்பிடி ஊர்ல 20+ நாள் ரொம்ப பிஸியா எல்லார் கூடயும் ஜாலியா இருந்துட்டு, மறுநாள் சிங்கப்பூர் கெளம்புறத நெனச்சப்ப எனக்கும் மனைவிக்கும் கஷ்டமாயிருந்துச்சு. ஆனா, அம்மா ஆப்பரேஷன் நல்ல படியா நடந்தது, அம்மா கூடவே மனைவி இருந்து பாத்துக்கிட்டது, என் தங்கச்சி திவ்யா தெரட்டி, நண்பரின் கல்யாணம், மனைவி எழுதிங்கள்னு ரொம்ப முக்கியமான விழாக்கள் சிறப்பா நடந்தது, அதுல சொந்தங்கள் எல்லாரையும் பாத்து, சந்தோஷமா பேசினத யோசிச்சப்ப, நிம்மதியா சிங்கப்பூர் திரும்ப ஆர்வமாயிடுச்சு. ஆனாலும் அம்மா, பாட்டி, அத்தைக்கெல்லாம் நாங்க ஊருக்கு கெளம்பறப்ப ரொம்ப வருத்தமாயிடுச்சு, மூணு பேருமே அழுதிட்டாங்க. குறிப்பா நிரஞ்சன பிரியத்தான் அவங்களுக்கு மனசில்ல. இன்னும் நாலஞ்சு மாசத்துல அடுத்த டிரிப் வர்றதா அவங்கள சமாதானப் படுத்திட்டு, நாங்க ஜாலியா பிளைட் ஏறிட்டோம்.

- சமுத்ரன்