Sunday, January 30, 2011

கவிதைச் சிதறல்கள் 31-01-2011

இடம் பொருட்டில்லை

செய்யும் செயல் தடையில்லை

பிற மனிதர்கள் துணையில்லை

மாபெரும் கும்பலிலும் அறிதில்லை

ஒரு சிறு பார்வை போதும்

நாங்கள் பேசிக்கொள்ள!

**************

போன வருஷம் உனை பெண் பார்க்க வந்தோம்

வழியனுப்பும்போது யாருக்கும் தெரியாம ஓரக்கண்ணுல

'போயிட்டு வாங்க'ன்னு நீ எனைப் பார்த்த பார்வையில

என்னை மொத முறையா முழுசா தொலைச்சேன்

என் உயிரையே உருக்குன அதே ஓரக்கண் பார்வை இப்ப மறுபடியும்...

வெட்கத்தில் இருவருமே தொலைந்து போனோம்!

உறுதியான (+ve) கருச் சோதனை ரிப்போர்ட் என் கையில்!

***************

அவளுக்கு பிடிச்சா மாதிரி மஞ்ச கலர்ல

அசத்தலா ஒரு சுடிதார் வாங்கினேன்

கண் சிமிட்டலில் நன்றி சொல்லி அதை வாங்கிக்கொண்டாள்

மறுநாள் கோயிலுக்கு பச்சை நிற சேலையில் தயாரானாள்

"சேலை, அதுவும் பச்சை நிறம்னா உங்களுக்கு பிடிக்கும்னு சொன்னீங்களே?"

***************

பாக்காத மாதிரி நான் உன்ன பாக்குறதும்

அது தெரிஞ்சும் நீ என்னை பாக்காத மாதிரி பாக்குறதும்

எத்தனை சுகம் - அந்நாட்கள் திரும்ப வருமா?

நீயே என்னவளாய் அடுத்த ஜென்மத்திலும் வந்துவிடு...

***************

"இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க..."

"பொய்"

"இல்லடா, நீ உண்மையிலேயே அழகாத்தான் இருக்க..."

"எனக்குத் தெரியும், அது பொய்"

"சரி, பொய்ன்னே வச்சுக்கோயேன்"

<ஐயோ... அம்மா... அது அப்பிடி இல்ல...>

***************

நண்பன் திருமணத்திற்கு மனைவியுடன் நுழைகிறேன்

"எல்லாரும் பாக்குறாங்க, கைய விடுங்க"

யாருமே எங்களை கவனிக்கிறதா தெரியல

"அட, நீதான் என் கைய புடிச்சிருக்க..."

சிணுங்கலாய் ஒரு கிள்ளு!

அட, எதையுமே நேரா சொல்ல மாட்டிங்கறாங்க்கப்பா!

***************

-சமுத்ரன்

Friday, January 7, 2011

சிதறல்கள் 8-01-2011

* 2010 ம் ஆண்டுல மெகா ஊழல்கள், இன அழிப்புன்னு சமூக வாழ்க்கையில சில கசப்பான சம்பவங்கள். 2011 ஆம் ஆண்டுல அந்த மாதிரி எதுவும் இல்லாம எல்லாருக்கும் சிறப்பா இருக்கணும்னு இறைவன வேண்டிக்கிறேன். 2011 ல சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது - சட்டசபை தேர்தல், உலகக் கோப்பை கிரிக்கெட்னு முதல் ஆறு மாசம் விறு விறுன்னு இருக்கும்.

* மனைவியும் மகனும் ஊருக்கு போயிட்டதால சிங்கப்பூர் ரொம்பவே போர் அடிக்குது... சில சமயம் ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதுவும் அவங்க ஊருக்கு போன அடுத்த 2 நாள் என்னவோ மாதிரி ஆயிடுச்சு. இப்போ ஆபீஸ்ல நெறைய வேலை இருக்குறதுனால, வேற எதையும் நெனைக்க டைம் இல்ல, அதனால முன்ன விட இப்போ கொஞ்சம் பரவாயில்ல.

* நான் தனியா இருக்குறதால வீட்டுல டின்னர் சமைக்கிறத தவிர வேற எந்த வேலையும் இல்ல. ஆபிஸ்ல இருந்து லேட்டா வந்தாலும் சமைச்சு சாப்பிட்டுட்டு கொஞ்சம் மத்த விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியுது (இல்லைன்னா என் பையன் கூட விளையாடிட்டே மணி ராத்திரி 1 ஆயிடும்).

* போன வருஷம் வாங்குன புத்தகங்கள (சிறு கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறு, இப்பிடி...) படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.
--> சுஜாதாவோட "நிர்வாண இரவுகள்" நாவல் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஒரு திரில்லர் கலந்த துப்பறியும் கதைதான் அது. கதை சொல்லும்போது பல விஷயங்கள சுஜாதா நமக்கே தெரியாம சொல்லிடறார். அவரோட மத்த நாவல்/கதைகள் கண்டிப்பா வாங்கப் போறேன்.

-->பாலகுமாரனோட "அவரும் அவளும்" நாவல் பாதி படிச்சேன், ஆனா அவர் அளவுக்கதிகமா கதையில ஆன்மீகம் பேசுறார், அது எனக்கு ஒரு அளவுக்கு மேல பிடிக்கல/ஜீரணிக்க முடியல. அது மட்டுமில்லாம அந்த நாவல்லையே வெளியாகுற அவரோட (கேள்வி) பதில்கள் சில அபத்தமா இருக்குறதால, அவர் கதைய படிக்கும்போது அந்த தாக்கம் கொறையுது. மத்தபடி ஒரு சின்ன விஷயத்த வச்சுகிட்டு கதா பாத்திரங்கள் மூலமா பல விஷயங்கள சொல்றார், வித்தியாசமா இருக்குது. அந்த விஷயங்கள அசை போட்டுட்டு இருக்கேன், கதைய மேல படிப்பேனா மாட்டேனான்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்.

-->ஆப்ரஹாம் லிங்கனோட வாழ்க்கை வரலாற்ற படிச்சு முடிச்சுட்டேன் (ரொம்பவும் விரிவாவும் இல்ல, ரொம்ப சுருக்கமாவும் இல்ல), கறுப்பின அடிமைத்தனத்தையும் அவங்க விடுதலைக்காக அவர் போராடினதையும் சுவாரஸ்யமா அதனாசிரியர் பாலு சத்யா சொல்லி இருந்தார். அவரோட எதுக்காகவும் நெனச்சத விட்டுக்கொடுக்காத வாழ்க்கை நிச்சயமா யாரையும் பிரம்மிக்க வைக்கும்.

-->சுருக்கமான வடிவுல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் வாழ்க்கை வரலாற மருதன் எழுத்துல படிச்சேன். சுதந்திரப் போராட்டத்துல ஆரம்பத்துல காந்தியோட இருந்துட்டு பின்னாடி அவரோட அஹிம்சை அணுகுமுறை பிடிக்காம, தனி ஆளா ஒரு ராணுவப் படைய உண்டாக்கி அதுக்கு மத்த தலைவர்ங்க அங்கீகாரம்/அனுமதி/உதவி கிடைக்காம வெளிநாடுகள்ல தங்கி தன் நாட்டுக்காக போராட அவர் பட்ட கஷ்டங்கள படிச்சப்ப, அப்பப்பா. அவரோட கடைசி நாட்கள் ரொம்பவும் கொடுமையானவைன்னு படிக்கிறப்போ நிச்சயமா யாராலையும் அழாம இருக்க முடியாது. நேதாஜி பத்தி அதுல விடுபட்ட இன்னும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆவலாயிடுச்சு.

-->அப்பறம் ஹிட்லர் பத்தி ரொம்ப விரிவான வாழ்க்கை வரலாறு படிக்க நேரம் கெடச்சுது (அந்த கடைசி இருண்ட பக்கங்கள படிக்க இன்னும் எனக்கு மனசு வரல, அதனால அது மட்டும் பாக்கி இருக்கு இன்னும்). ஹிட்லர் வளர்ந்த விதம், ராணுவ அதிகாரியான உடனே அவனுக்கு இருந்த தைரியம், வெற்றிக்கான வெறி, ஆட்சிய பிடிச்ச விதம் வரைக்கும் அசத்தல்தான். ஆனா அதுக்கப்புறம் முக்கியமா அந்த படுகொலைகள மட்டும் செய்யாம இருந்திருந்தா இந்நேரம் அவன உலகமே கொண்டாடி இருக்கும், அப்படிப்பட்ட ஒரு மன திடமும், செயல் திறனும் கொண்ட ஒரு தேர்ந்த அரசியல் சாணக்கியனாவும் இருந்திருக்கான்.

--> எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இசையமைப்பாளர் இளையராஜாவோட "பால்நிலாப் பாதை" படிச்சேன். தமிழ் இசை வரலாற்றின் பொக்கிஷமானவரின் சில சுய பக்கங்களே இந்த புத்தகம். அவரோட பாடல் வரிகள் போல எளிமையான நடையில் படிக்க இயல்பா இருக்குது. ஆனா தத்துவமா எழுதித் தள்றார். நெறைய முக்கியமான விஷயங்கள அவருக்கே உரித்தான ஸ்டைல்ல பகிர்ந்துகிட்டிருக்கார்.
"MSV அண்ணாகிட்ட இத்தன படங்களுக்கு இசைய வாங்கினவங்க இப்போ அவர விட்டுட்டு என்கிட்ட வராங்கன்னா, அது என்னோட இசைக்காக இல்ல, என் இசைக்கு கெடைக்கிற கை தட்டுக்காக, இதே நாளைக்கு வேற ஒருத்தருக்கு அதிகமா கை தட்டு விழுந்தா அவன் பின்னாடிபோயிடுவாங்க, அதனால இந்த சினிமா காரங்கள நான் என்னைக்குமே சுத்தமா மதிச்சதில்ல"
"மத்த இசையமைப்பாளர்கள ஏன் நான் பாராட்டுறதில்லைன்னு கேக்குறாங்க, என்கிட்ட எதுக்கு அப்படி எதிர்பாக்குறாங்கன்னு தெரியல. பாராட்டுரவனோட தகுதி ஒரு படைப்பளியோட தகுதிய நிர்ணயிக்குதுன்னா அது என்ன மாதிரி செயல்னு தெரியல"
இந்த மாதிரியான கடும் வாதத்தை உண்டாக்கக் கூடிய தன் எண்ணங்கள கடுமையாவே சொல்லி இருக்கிறார். அப்பறம் கேட்கும் எவரையும் மயக்கும் "காதலின் தீபம் ஒன்று" என்ற  பாடலை இசையமைத்த பின்னணி ரொம்பவே சுவாரஸ்யம் + ஆச்சர்யம். புத்தகத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை.

-->இப்போ The Da Vinci code (Dan Brown) படிச்சுட்டு இருக்கேன். இதுதான் என்னோட முதல் ஆங்கில நாவல் வாசிப்பு அனுபவம். இந்த நாவல ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சேன், ஆனா அப்போ சுத்தமா ஒண்ணும் புரியல, ரெண்டு பக்கம் கூட தாண்டாம வச்சுட்டேன். நண்பன் ராஜா வலுக்கட்டாயமா இந்த புத்தகத்த படிக்க சொல்லி வாங்கி என்கிட்ட குடுத்தனுப்பிட்டான், அதனால அப்படி என்னதான் இருக்குன்னு பாப்போமேன்னு படிக்க ஆரம்பிச்சிருக்கேன், நல்லாத்தான் போகுது... 20 அத்தியாயங்கள படிச்சு முடிச்சிட்டேன், ரொம்பவே சுவாரஸ்யமா போகுது... நானும் ஒரு ஆங்கில நாவல படிப்பேன், அதையும் என்னால தமிழ் நாவல் மாதிரியே புரிஞ்சுக்க/ரசிக்க/அனுபவிக்க முடியும்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு. இருந்தாலும் பல வார்த்தைங்க நான் கேள்விப்பட்டதே இல்ல, அர்த்தமும் வெளங்கல, ஆனாலும் கதை புரியுது...

* கடந்த காலங்கள்ல புத்தகங்கள் வாசிக்கிறதுன்னா என்னை பொறுத்த வரைக்கும் (பாடப் புத்தகங்கள தவிர) குமுதம், விகடன் இப்பிடித்தான் இருந்துச்சு. போன வருஷம் எதோ ஒரு உந்துதல்ல புத்தகங்கள் வாங்கினேன் (நன்றி மாதேஷ்). அதை நேரம் கெடைக்கும்போது படிக்க ஆரம்பிச்சேன். இப்போ அது ஒரு ஆர்வமா வளந்திருக்கு (டி.வி பாக்குறத இப்பல்லாம் ரொம்பவே கொறச்சிகிட்டேன்). வேற புத்தகங்கள் எதுவும் படிச்சா அதையும் இங்க சொல்றேன்.
 
* இன்னிக்கு எந்திரன் 100வது நாள் விழா கொண்டாட்டம் சிங்கப்பூர்ல நடக்குது. ரொம்ப சிறப்பான முறையில நடக்கப் போறதா செய்திகள். சிங்கப்பூர்ல ஒரு படம் 100 நாள் ஓடுறது சாதாரணம் இல்ல, அதுவும் எந்திரன் 13 தியேட்டர்ல ரிலிஸ் பண்ணி இருந்தாங்க. அந்த கொண்டாட்டத்துல நானும் கலந்துட்டு 3வது முறையா படத்த பாக்க போறேன். :)

பின் சேர்க்கை: எந்திரன் 100 வது நாள் விழா இங்க சிங்கப்பூர் ரெக்ஸ் தியேட்டர்ல ரொம்ப சிறப்பா கொண்டாடினோம். தியேட்டர் அலங்கரிக்கப் பட்டிருந்ததிலையே திட்டார் ஓனர் ஏக குஷியில் இருக்கார்னு நல்லா தெரிஞ்சுது. ரசிகர்களுக்கு கேக், சாக்லேட், கட் அவுட் + பாலாபிஷேகம்னு சிங்கப்பூர்ல மினி தமிழ்நாட்ட கொண்டு வந்துட்டாங்க. அவ்ளோ பெரிய தியேட்டர்ல அன்னிக்கு ஷோ பாதி புல். வழக்கமா தியேட்டர்ல முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட (பக்கத்துல இருக்குறவங்க கூடயும்) பேச மாட்டோம், ஆனா எனக்கு இந்த தடவ அங்க இருந்த எல்லாரு கிட்டயும் சகஜமா பேச முடிஞ்சுது, எல்லாருமே மத்தவங்ககிட்ட (எங்கிட்டயும்) நல்லா பேசினாங்க. என் பக்கத்துல உக்காந்திருந்த அன்பர், படத்துல பாடல் வந்தப்போ கூடவே (மத்தவங்கள தொந்தரவு பண்ணாம) ரொம்ப நல்லா பாட வேற செஞ்சார். ரொம்ப நாள் பழகின பிரண்ட்ஸ் கூட உக்காந்து படம் பாத்தா மாதிரி இருந்துச்சு. மேக்கிங் ஆப் எந்திரன் பாத்துட்டு, இப்ப படத்த (3வது தடவ) பாத்தப்ப பல விஷயங்கள கவனிக்க முடிஞ்சுது. இந்த விழா பத்தி தகவல் கொடுத்த கிரிக்கு நன்றி...
மேலும் விவரங்களுடன் கொண்டாட்ட புகைப்படம் வீடியோ  இங்கே!

வர்ட்டா?

-சமுத்ரன்