Friday, October 30, 2009

என் நண்பர்களைப் பற்றி ஓரிரு வரிகள்

அம்மா: எதையும் சொல்ல தயங்க தேவையில்லாத என் முதல் நண்பர்.  என்னை முழுவதுமாக புரிந்துகொண்ட, யாருக்காகவும் எதற்காகவும் என்னை விட்டுகொடுக்காத, என்மேல் கண்ணாபின்னாவென்று பாசத்தையும் செல்லத்தையும் கொட்டும் எனக்கே எனக்கான நண்பர்.

அப்பா: நான் விரும்பியதை செய்ய முழு மனதோடு அனுமதித்து, முழுமையாக நம்பி என்னை ஆதரிக்கும் என் மிகச்சிறந்த நண்பர் (நான் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கு்வோம்). அவரது முன்னெச்சரிக்கைக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் அடிமை. பலவிதங்களில் எனது ரோல் மாடல்.

மனைவி: சிறந்த தோழி, இந்தப்பெண்ணைப்போல் திருமணத்திற்கு முன் யாரும் என் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் நானும் காதல் வயப்பட்டிருப்பேன். எங்கள் குடும்பத்துக்கு கடவுளின் வரம்.



Cousin திவ்யா: அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கும் அவள்தான் குட்டி தேவதை. எங்கள் செல்லத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அண்ணனுக்காக எதையும் செய்பவள், புத்திசாலி. எங்களின் உயிர்.

ரூபகா: சகோதரியாகவே (அக்கா) அறிமுகமானவர், பல வழிகளில் என்னை பக்குவப்படுத்தியவர். அரட்டை அடிப்போம், அது சண்டையில்தான் போய் முடியும். ஒரு சண்டை முடிவுக்கு வந்த சில நிமிடங்களில் அடுத்த சண்டையில் தீவிரமாக இருப்போம். ஆனால் அந்த சண்டையும் சில நிமிடங்கள்தான் நீடிக்கும் - "சண்டை-சமாதானம்-திரும்ப சண்டை-திரும்ப சமாதானம்". ஒரு நாள் சண்டை இல்லை என்றால் எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிடும். இன்று குடும்ப பொறுப்புகள் வந்துவிட்டதால் அதிகமாக பேசிக்கொள்வதில்லை, எனவே சண்டை இல்லை.

கோகிலா: என்னைப் பக்குவப்படுத்திய இன்னொரு நண்பி. எதையும் positive-ஆக எடுத்துக்கொள்ளும் மனமுடையவர். நான் அடிக்கும் ஜோக்குக்கும் சிரிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர். தன்னை வருத்தியாவது பிறர் மனம் புண்படாமலிருக்க முயல்பவர். எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறனுடைய சிறந்த உழைப்பாளி. என்னை நன்றாக புரிந்தவர் (நான் எப்போது பொய் சொல்வேன், நான் எப்போது உண்மை சொல்வேன் என்பது உட்பட).

ராஜா: எங்கள் பிணைப்பு பற்றி எனக்கு உண்மையில் சொல்லத் தெரியவில்லை. சுருக்கமாக சொன்னால், என் பூர்வ ஜென்ம புண்ணியம் இவனுடன் எனக்கான பழக்கம்.


சௌந்தரராஜன்: ரஜினி-கமல் நட்பிற்கு போட்டி எங்கள் இருவரது நட்பு. வெள்ளை மனம் மற்றும் வெளிப்படையாக பேசுவதன் பலனை இவனிடம்தான் கற்றுகொண்டேன். பல சமயங்களில் எனக்கு தோள் கொடுத்து என்னுடன் நின்றவன். எங்களுக்குள் போட்டியும் பொறாமையும் இருந்தாலும் அது எங்கள் நட்பை பாதித்ததில்லை. என்னால் நிச்சயமாக ஒன்றில் மட்டும் இவனுடன் போட்டி போடவே முடியாது - அதுதான் அவனது இரக்க குணம். இவனுடன் சண்டை போட்டதில்லை ஆனால் பேசாமல் இருந்திருக்கிறோம். எனக்குள் ஒருவன்.



ராம்குமார்: அனைத்து விதங்களிலும் எனக்கு (மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும்) உறுதுணையாக இருப்பவன். சோர்ந்தபோதெல்லாம் தன் நண்பர்களை தோள் கொடுத்து தூக்கி விடுபவன். Very active person. நான்கூட அவனிடம் சில சமயங்களில் கோபப்பட்டுள்ளேன், ஆனால் அவன் என்னிடம் கோபப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. தன்னால் இயன்றதை செய்ய எப்போதும் தயாராக இருக்கும் திறந்த மனமுடையவன். எங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே தைரியசாலி மட்டுமல்ல மிகுந்த திறமைசாலியும் கூட. இவனிடம் இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நட்புக்கு இவன் இலக்கணம் என்றால் அது மிகையில்லை.

விஜயபாரதி: எங்களுக்குள் பலவிதங்களில் ஒற்றுமைகள் உண்டு. எனது ரசனையுடன் முற்றிலும் ஒத்துப்போனவன். இருவரும் பங்காளிகள், ஆனாலும் சண்டையிடாத பங்காளிகள். :) கல்லூரி முடித்த பின்னும் இருவரும் ஒன்றாகவே பல ஊர்களை சுற்றிக் கொண்டிருந்தோம். நண்பர்கள் கூடி இருக்கும்போது இவனது நக்கல் ஆரம்பிக்காதவரை மட்டுமே situation நமது கண்ட்ரோலில் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமானவன்.

சீனிவாசன்: பள்ளி நாட்கள் தொட்டு என்னுடன் பழகி வருபவன். கல்லூரிக்கு சென்றபின் சில வருடங்கள் தொடர்பில் இல்லாமலிருந்து பின் சென்னையில் இணைந்தோம். பிறர் தயவின்று தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என மன உறுதி கொண்டவன். எனது நலன் விரும்பிகளில் முக்கியமானவன். என்னுடனான நட்புக்கு மிகுந்த மதிப்பளிப்பவன் (நன்றிடா நண்பா). என்னிடமுள்ள நல்ல-கெட்ட விஷயங்களை நயமாக எடுத்துச்சொன்னவன். எனது வளர்ச்சியில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.

மாதேஸ்வரன்: குடும்ப நண்பர். அவரும் அவரது குடும்பமும் அனைத்து விதங்களிலும் எங்கள் குடும்பத்துடன் ஒத்துப்போனவர்கள். குறுகிய காலத்திலேயே நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். மணிக்கணக்காக அதிகாலை 3 மணி வரைகூட குடும்பத்துடன் சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். அதிராமல் எப்போதுமே சாந்தமாக பேசுபவர். திறமைசாலி மட்டுமல்லாது தகவல் களஞ்சியமாக வலம் வருபவர் (அதனால் எனக்கு அவர்மேல் அளவுகடந்த பொறாமை உண்டு). தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் மனமுடையவர். இவரை யாரும் எந்த உதவிக்காகவும் எந்த நேரத்திலும் அனுகலாம் என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் சொல்லாமல் சொல்பவர். இவர் என் நண்பர் என சொல்லிக்கொள்வதிலேயே எனக்கு நிறைய பெருமை.



குறிப்பு: இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள், என்னுடனும் என் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகிய நண்பர்களைப் பற்றி மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

நீங்கள் அனைவருமே எனது பொக்கிஷங்கள். உங்களின் உதவியும், ஊக்கமும், ஆதரவும், அரவணைப்பும் இல்லையென்றால் இன்று இந்த நிலையில் நானிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை வணக்கமாக செலுத்துகிறேன். நம் பிணைப்புக்குக் காரணமான நம்  உறவுக்கும், நட்புக்கும் என் வணக்கங்கள்.

-முத்துக்குமார்.

Tuesday, October 27, 2009

பிளாக் எழுதி நான் சாதித்ததென்ன?

இது என்னை பரிசோதிச்சு எனக்கு நானே எழுதும் பதிவு. ம்... பிளாக் எழுத ஆரம்பிச்சு ஒரு மாத காலம் ஆவுது. ஆரம்பிச்ச புதுசுல நான் எழுதுன சில பதிவுகளை நண்பர்கள் ஆர்வமா படிச்சுட்டு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததை நம்ம்ம்ம்ம்பி, அடுத்தடுத்த பல பதிவுகளை அரங்கேற்றினேன். பதிவுகளை அரங்கேற்றிவிட்டு படிக்க சொல்லி மெயில் அனுப்பினேன். படித்தாரில்லை, மெயிலுக்கு பதிலுமில்லை.

சரி எல்லாரும் பிஸி போலன்னு 2 நாள் பொறுத்திருந்து பார்த்துட்டு சௌந்தருக்கு போன் செஞ்சேன் (அவந்தான் மாட்டினான்). அப்பிடியே அவன உட்கார வச்சு படிக்க வச்சேன். அன்னையோட அவன் internet பக்கமே வர்றதில்ல, இன்னைக்கு வரைக்கும் 4 நாள் ஆச்சு. அப்பயாவது எனக்கு புரிஞ்சுதா? இல்லை. அடுத்து சீனிவாசன் onlineல் வந்தான். அவனை அப்படியே அமுக்கி என் பிளாக்கிற்கு இழுத்து பதிவுகளை படிக்க வச்சேன். நல்லா இருக்கு ஆனா நீ ஏன் சினிமா அரசியல் ஏதாவது interesting (?!)ஆ எழுத மாட்டேங்குற?-ன்னு டீசன்ட்டா சொல்லி பாத்தான். "அப்பிடி இல்லடா சீனி"-ன்னு ஒரு பத்து நிமிஷம் விளக்கம் குடுத்தேன். அன்னைல இருந்து அவன் நடுசாமத்துக்கு அப்பறந்தான் பூனை போல் onlineல் வர்றான். அப்பவும் நான் அவன புடிச்சு "சீனி, புதுசா பதிவு போட்டிருக்கேன்டா"-ன்னு ஆரம்பிச்சேன், "நீ இன்னும் தூங்கலியாடா"-ன்னான். அப்பவும் எனக்கு புரியல. அவனும் internet கனெக்ஷனையே கட் பண்றத பத்தி யோசிப்பதாக தெரியுது. ஆனாலும் என் பிளாக்ல இது வரைக்கும் பின்னூட்டம் இட்ட ஒரே ஆள் சீனிதாங்குற பெருமை (??) அவனுக்கு உண்டு.

அடுத்து மாதேஸ். எப்போதும் அலுவலகம் வீடு என்றில்லாமல் தமிழ் பிளக்கிலேயே வாழ்றவர். வீடு மாற்றிய பின் internet கனெக்ஷனுக்கு விசாரிச்சுட்டிருந்தார். நான் பிளாக் தொடர்ந்து எழுதுறதை தெரிஞ்சுட்டவர் "internet வீட்டுல எதுக்குங்க வீணா, நீங்க இந்தியா வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே கனெக்ஷன் வாங்கலாம்"னு சொல்றார் (ஏன்னா இந்தியா வந்துட்டேன்னா பிளாக் எழுத மாட்டேன் இல்ல?). சரி ஆபீஸ்-ல எப்பவுமே பிளாக் தான் படிப்பாரே அங்கயாவது என்னோட பிளாக் படிக்கலாமே-ன்னு போன் பண்ணி கேட்டேன், போன் நம்பரையே மாத்தற யோசனையில இருக்குறதா சொன்னார். என் புத்திய என்ன சொல்ல? அப்பவும் புரியல.

அப்புறம் ராம். நான் அனுப்புற வீடியோ லிங்கை அரை மணி நேரம் பார்த்து இமெயிலுக்கு பதில் அனுப்புவான் ஆனா என்னோட பிளாக் படிச்சியாடான்னா "பிஸியா இருக்கேன்டா, இந்த வீக் என்ட் ட்ரை பண்றேன்"னான். ட்ரை பண்றானா? என்ன எல்லாரும் ஒரே பிஸியா இருக்காங்கன்னு நெனச்சுட்டு என்னோட பதிவ திருப்பி திருப்பி நானே படிச்சு பார்த்து "எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இடத்துல ஒரு இன்டெரெஸ்டிங் ட்விஸ்ட், எப்பிடிடா முத்து, உன்னால மட்டும்?"ன்னு மெச்சிட்டு இருந்தேன். அப்புறம் கணேஷ்க்கு போன் பண்ணேன், "என்னப்பா பதிவு எதாவது படிச்சியா?"-ன்னு. "நான் இன்னும் படிக்கல, ஆனா எங்க அப்பாக்கு லிங்க்க அனுப்பி வச்சேன், என்னடா எதோ ஒரு home sick கிறுக்கி வச்சிருக்கறத எல்லாம் எனக்கு அனுப்பிட்டு இருக்கன்னு கேட்டார்"னான். "சரி நான் அப்புறம் பேசுறேன்"-னு நானே போன வச்சுட்டேன்.

நாம யாரு, மெயில் அனுப்புறத நிறுத்தறதா இல்ல. ஆர்வத்துல என்னோட offshore teamக்கு அநுப்புன  official இமெயில்ல கூட பிளாக் லிங்கை போட்டு அனுப்பிட்டேன்னா பாருங்களேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு offshore teamலருந்து ஒருத்தர் 'என்ன language இது'ன்னு ரிப்ளை பண்ணார் (அவருக்கு தமிழ் பறைய வரும், but படிக்க அறியில்லா), அப்பதான் தெரிஞ்சுது நான் ரொம்ப ஆர்வக்கோளாறுன்னு. "சரி, நம்ம டீம்லதான் ஒரு தமிழ் ஆளு இருக்காரே, அவர் எங்க?"-ன்னேன். "ஓ அவரா, இப்போதான் ஒரு நிமிஷம் முன்னாடி தலைவலின்னு பர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு போறார்"னாங்க. "எதுவும் சொன்னாரா?"-ன்னு ஆவலா கேட்டேன் "ஆமா, முத்து எப்போ இந்தியா வருவார்?"-ன்னு கேட்டுட்டு போனார்னாங்க, அப்போதான் எனக்கு கொஞ்சம் பொறி தட்டுச்சு நம்ம பிளாக்க ஓப்பன் பண்ணியிருப்பாரோன்னு.

இப்ப கூட சௌந்தருக்கு போன் பண்ணினேன் , "எங்கடா இருக்க?"ன்னேன், "வீட்டுக்கு போயிட்டிருக்கேன் தோ பக்கதுல போயிட்டேன்?"னான். "அது ஒண்ணுமில்ல, கவிதை ஒண்ணு எழுதினேன் படிக்க ஆளே இல்லடா, வந்து படிடா"ன்னேன், "வீட்டுக்கு வந்தா படிக்கிறேன்"னான், "வீட்டுக்கு வர எவ்ளோ நேரம்டா ஆகும்னேன்", "ஆபீஸ்ல இன்னிக்கு புரடக்ஷன் மூவ் இருக்கும் போல இருக்கு, நான் இப்போ திரும்பி ஆபீஸ்க்கு போறேன்"ன்னான் (நான்தான் கெடச்சனாடா உனக்கு? - அவன் மனசாட்சியும் கூடவே பேசுச்சு). "திடீர்னு என்னடா உனக்கு புரடக்ஷன் மூவ்"னு கேட்டேன், "இல்லடா இப்போதான் நெனப்பு வந்துச்சு, நானே அப்புறம் உனக்கு போன் பண்றேன் நீ பண்ணாத உனக்கு எதுக்கு வீண் சிரமம்..."ன்னு டொக்னு போன வச்சுட்டான். அட, அப்பகூட இந்த பாழா போன புத்திக்கு தெரியலங்க.

ஆனா இப்போ என் மனைவிக்கு போன் பண்ணி பிளாக்ல புதுசா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு ஆரம்பிச்சேன், முடிக்க கூட இல்ல - "ஏங்க... மாமா பேசுறாங்களாம்"னு எங்க அப்பாகிட்ட போன குடுத்துட்டு "அப்புறமா பேசுறேன்னு சொல்லிருங்க மாமா, நான் சமையல் செய்யபோறேன்"னுட்டு போயிட்டா, மத்தியானத்துல என்ன சமையல் பண்றாங்கன்னு யோசிக்கும்போதுதாங்க இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது. புரிஞ்சுட்டிருக்கும்போதே எங்க அப்பா போன்ல "சொல்லு ராஜா"ன்னாங்க. அது வந்துங்கப்பா பிளாக்ல புதுசா ஒரு கவிதைய பதிவா போட்டிருக்கென்னேன். எங்க படி பார்ப்போம்னாங்க, படிச்சேன். நல்லா இருக்கே இப்பவே வந்து பிரிண்ட் போட்டுட்டு வர்றேன்னு கிளம்பி 20 கி. மீ பஸ்ஸுல வந்து பிரிண்ட் போட்டுட்டு போறாங்க. அவருக்காவது புரிஞ்சுதே என்னோட தவிப்புன்னு இப்போதான் கொஞ்சம் நிம்மதி.

இது எல்லாத்துலயும் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னன்னா நான் எப்போ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னாலும் சரின்னு உக்காந்து படிக்கிறது ரூபகா மட்டும்தான். என்மேல அப்பிடி என்ன பரிதாபமோ தெரியல.

இவங்கள எல்லாரையும் தண்டிக்க ஒரே வழி நான் தொடர்ந்து எழுதனும், எழுதனும் எழுதிட்டே இருக்கனும். இதவிட்டா அவங்கள பழி வாங்க வேற வழியே இல்ல.

Monday, October 26, 2009

365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌




குழலும் யாழும் கசந்து 365 நாட்கள் முழுதாய் கடந்துவிட்டன‌
எங்கள் அன்புச் செல்லமே இன்று உன‌க்கு பிறந்த நாள்

உறவுமுறை பெயர் சொல்லி எப்போதாவது நீ அழைத்ததும்
-(அம்மா, அப்பா, தாத்தா, மாமா, அத்தை)
உருகி உருகி திரும்பச் சொல்லக் கேட்கும்போது நீ காட்டும் பிகு என்ன

உன் அசைவும் அழுகையும் எமக்கு தலைப்புச் செய்தியென்றானபின்
அரசியலும் அறிவியலும் பெட்டிச் செய்தியானதில் வியப்பென்ன

அயர்ந்து வீடு சேர்கையில் 'அப்பா' என தவழ்ந்து நீ என் மடி சேர்கையில்
நான் அடைந்தது ஆனந்தத்தின் உச்சம் அன்றில் வேறென்ன

நீ உறங்குகையில் மறுபக்கம் ஓடிச் சென்று கட‌மைக்காக‌ ஒளி கொடுத்து
உன் குறும்புகளை தரிசிக்க‌ சூரியனும் முன்னமே உதயமாவதென்ன‌

அழுகைக்குப்பின் அரவணைப்பை அறிந்த நீ இப்போது
அழுது அழுதே வேண்டியதை சாதிக்கும் குறும்பென்ன

கரும்புகூட‌ கசக்கும் என்றால் இவ்வுலகமும் நம்புமா
உன் மழலையைக் கேட்ட‌பின் அதே உலகம் மறுக்கவும் இயலுமா

கள்ளமில்லா உன் வெடிச்சிரிப்பு எம் புத்துணர்ச்சிக்கு உரமானவை
காட்சியில்லா அழகு ஓவியங்கள் கைகளால் காற்றில் நீ வரைபவை

உன் குரல் வழியே வார்த்தெடுக்கலாம் பலப்பல‌ ச‌ந்தங்கள்
உன் வரவு எமக்குச் சொன்னது ஆயிரமாயிரம் சங்கதிகள்

உன் கண்சிமிட்டலில் மதிமயங்கிய கதையை என்னிடம் தினமும் சொல்லுது நிலவு
உனை நிதமும் கைகளில் ஏந்திட ஏங்கும் இந்த மனதுக்கு வேறேது உலகு

உனக்கு வாழ்த்து சொல்ல வழி செய்த இந்த இணைய வழி கடிதத்துக்கு எம் நன்றி!
காரணம் எதுவாயினும் இந்த இடைக்கால பிரிவைக் கொடுத்த காலத்துக்கும் எம் நன்றி!

அன்பு மகனுக்கு முதல் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

-முத்துக்குமார்

Sunday, October 25, 2009

என்னை மன்னித்துவிடு - சிறுகதை

சேகரும் மலர்விழியும்  ஒரே கம்பெனியில் வேலை செய்யும் நீண்ட நாள் நண்பர்கள். ஒரு மாலை வேலையில் shopping சென்றுவிட்டு நடந்துகொண்டே அவர்களது உரையாடல் (மலர்விழிதான் ஆரம்பித்தாள்):

"டேய், உன்கிட்ட ஒண்ணு கேட்பேன், நீ உண்மைய சொல்லனும்..."

"ஒண்ணு என்ன ரெண்டு கூட கேளு,என்னிக்கு நான் பொய் சொல்லி இருக்கேன்?"

"அது சரி. காலேஜ்ல நாம பழக ஆரம்பிச்சதிலருந்து, இப்போ ஆறு வருஷம் ஆச்சு. இத்தன நாள் பழக்கத்துல என்ன தெரிஞ்சுகிட்ட?"

"ஒரு பொண்ணுகூட ரொம்ப நாள் பழகுறது கஷ்டம்னு தெரிஞ்சுகிட்டேன்."

"ப்ச்! சீரியஸ்-ஆ கேக்குறேன்ல, சொல்லுடா."

"அப்ப நான் சொன்னது  ஜோக்குங்குற.... "

"கடி போடாத, சொல்லு."

"சரி, நீ என்ன தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லு, அத base பண்ணி நான் சொல்றேன்."

"எப்பவும் கிண்டலும் கேலியும் பண்ணிட்டு எல்லாரையும் சந்தோஷமா வச்சிருக்குறது உன்கிட்ட ரொம்ப பிடிக்கும். எனக்கு personal-ஆ சந்தோஷத்தையும் சோகத்தையும் பகிர்ந்துக்க ஒரு நல்ல தோழன் கிடைச்சிருக்கான்னு புரிஞ்சுகிட்டேன்."

"அப்டியா யாரு அது, எனக்கு தெரியாம?"

"எப்ப பாத்தாலும் உனக்கு வெளையாட்டுதான். படுத்தாம, என்னை பத்தியாவது என்ன நினைக்கிறேன்னு சொல்லேன்."

"என்னோட friends-ல நீ மட்டும்தான் பொண்ணு, உன்ன பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னாலும் என்னோட friends-ல உன்னை ரொம்ப பிடிக்கும்."

"உண்மையாவா?"

"நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல? நான் என்னிக்குமே பொய் சொன்னதில்லன்னு."

"ம்... ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு நெனச்சுட்டிருக்கேன், அது உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன், சொல்லட்டுமா?"

"என்ன, லவ்வா?"

"நான் ஆமான்னு சொன்னா நீ என்ன சொல்லுவ?"

"யாரந்த பாக்கியசாலின்னு கேட்பேன்."

"ம்... உங்க தாத்தா"

"அய்யய்யோ, அப்ப எங்க பாட்டி நெலம?"

"வெளையாடாத, வெக்கத்த விட்டு கேக்குறேன் சொல்லு..."

"அப்பிடி அவசரப்பட்டு உன்கிட்ட இல்லாததை எல்லாம் விட்டுடாத, யோசிச்சு நாளைக்கு சொல்றேன்."

"டேய் என்ன அழ வைக்காத. இப்பவே சொல்லு. என்னால இந்த விஷயத்துல wait பண்ண முடியாது."

"தயவுசெஞ்சு அழ மட்டும் செய்யாத. என்னோட இந்த தயக்கத்துக்கான காரணத்த நாளைக்கு சொல்றேன், நீயே புரிஞ்சுப்ப."

......
அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமலேயே அவளை வழக்கம்போல் அவளது வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான். எப்போதும் சொல்லும் "bye" கூட அன்று சொல்லவில்லை அவள்.

எப்போதும் மனதில் பட்டதை உடனே சொல்லிவிடும் அவன் ஏன் யோசிப்பதாக சொன்னான் என அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை என்னை அவனுக்கு பிடிக்கவில்லையா? அவசரப்பட்டுவிட்டேனோ? அவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைக்கும்போதே அவளுக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது.

அடுத்த நாள் மலர்விழி அவளது இருக்கையில் இருக்க, சேகர் அவளின் டேபிள் மேல் அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கடிதத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டான்... ஒன்றும் புரியாமல் அவசரமாக அதனை எடுத்து படித்தாள்:

"உன்னை முதலும் கடைசியுமாக ஏமாற்றுவதற்கு sorry. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனால் நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே office-ல உன் பக்கத்திலிருக்கும் friend-டிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன், அவளை விட்டு வேறொரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதை உன் முகம் பார்த்து சொல்ல தைரியம் இல்லாமல்தான் இந்த லட்டர். என்னை மன்னித்துவிடு."

இதை அவள் எதிர்பார்க்கவில்லை, அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுகையை தீவிரப்படுத்துவது போல் அவள் அருகில் அமர்ந்திருக்கும் அகிலா "ஏன் அழற?" என்றாள். அவளை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள். இப்போது சேகர் அவள் அருகில் வந்தான். அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தி அவளிடத்தில் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி உள்ளுக்குள் குமுறினாள்.

இப்போது சேகர் பேசினான்: "ஆமா மலர், அதுல நான் எழுதி இருக்குறதெல்லம் உண்மைதான். ஆனா இது உனக்கு எழுதினதில்ல, அது அவங்களுக்கு எழுதின லட்டர்" என மலர்விழியிடம் இருந்து கடிதத்தைப் பிடுங்கி அவள் அருகில் அமர்ந்திருக்கும் அவள் friend அகிலாவிடம் கொடுத்தான். இப்போதுதான் மலர்விழிக்கு புரிந்தது சேகரின் விளையாட்டு. "டாய்....... உன்னை..." என்று அவள் கத்த, அவன் சிரித்தபடியே விலகி ஓட, மலர்விழி அவனைத் துரத்தினாள். அகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தபடி கையில் கடித்தத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

-சமுத்ரன்

Friday, October 23, 2009

திருவண்ணாமலை to திருச்சி...

கல்லூரி முடித்தபின் பல நாள் தேடலுக்குப் பின் வேலை தானாக ஒரு சிறு தனியார் நிறுவனம் மூலமாக என்னைத் தேடி வந்தது. சில காலம் (ஒரு மாதம் என நினைக்கிறேன்) சென்னையில் அந்த நிறுவனத்தில் website developer ஆக பணியாற்றினேன். அந்த காலகட்டம் கணினி வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கி இருந்ததால் என்னைப் போன்ற புதியவர்களுக்கு வேறு வகையான வேலை காத்திருந்தது. அதுதான் கற்பித்தல் பணி. என்னை ஒரு ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள இயலாவிட்டாலும், அந்த வேலை அப்படிப்பட்டதுதான். அப்போதுதான் JAVA program பிரபலமாகி வந்த நேரம், எனவே அதனை கல்லூரி மாணவர்களுக்கு கற்றுத்தரும் பொருட்டு என்னைப்போன்றவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அந்த தனியார் நிறுவனம் சார்பாக பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு குழுவில் (மூவர்) முதலாவதாக நான் சென்றது அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை. அதுவரை திருவண்ணாமலை பக்கம் நான் வந்ததில்லை. அருணாசலேஸ்வரர் கோயிலை தரிசிக்கும் வாய்ப்பும் அப்போதுதான் கிடைத்தது. தெய்வீகமான ஊர், ஆனால் அடிப்படை வசதிகளிலும், மக்களின் படிப்பறிவு மற்றும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய ஊர். எளிமையான ஆனால் பார்ப்பதற்கு கரடுமுரடான மக்கள். தொழிலாளர்கள் நிறைந்த ஊர் என்பதால் நிறைய தியேட்டர்கள், நிறைய குறைந்த விலை ஓட்டல்கள் உண்டு. அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. திருவண்ணாமலை சிறிய நகரம் என்றாலும் பேருந்துப் போக்குவரத்து அதிகம் கொண்டது. ஆந்திரா (சித்தூர், திருப்பதி), கர்நாடகா (பெங்களூர்) மாநிலம் செல்லும் பேருந்துகளும் மிக அதிகம்.


அருணை கல்லூரியைப் பொறுத்த வரை ஒரு பரந்த, செழிப்பான மற்றும் அழகான கல்லூரி. ஒரு மாணவனாக இருந்ததற்கும் இப்போது ஒரு பொறுப்புள்ள வேலைக்காக கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கும் மனநிலையில் பல வேறுபாடுகள் உள்ளதை அறிந்தேன் - உண்மையில் உள்ளுக்குள் நிறைய பயமே இருந்தது. எங்களுக்கு அக்கல்லூரியின் விடுதியில் தங்கவும் உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் நிறுவனத்தின் திட்டப்படி கல்லூரி முடிந்த பின், மாலையில் JAVA கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய மாணவர்களுக்கு அக்கல்லூரி வளாகத்திலுள்ள கணினிக்கூடத்திலேயே வகுப்புகள் நடைபெற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டுமே JAVA கற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பணி.

முதல் நாள். வகுப்பறையில் நுழைந்ததும், மாணவர்கள் எழுந்து "good evening sir" என்று சொன்னவுடன் மனதுக்குள் என்னவோ செய்தது. இதற்கு நான் தகுதியானவன்தானா? தெரியவில்லை... அப்போது ஒரு கணம் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். என்னை ஒரு ஆசிரியராக்கவே அவர் விரும்பினார் (ஏனென்றால் அவரும் ஒரு ஆசிரியர், என்னை அதற்காக வற்புறுத்தவில்லை), நான்தான் ஒரு பொறியாளனாக விரும்பி BE படித்தேன். இப்போது அவர் விரும்பிய மாதிரியே சில மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒரு விதத்தில் என் அப்பாவின் ஆசையையும் நிவர்த்தி செய்துள்ளேன்.

முதல் நாள் வகுப்புக்கு செல்லும் முன் ஏதேதோ பேச தயார் செய்தும் வகுப்பறையில் அதனை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை. "45 நிமிடம்தானே வகுப்பு எடுக்கப் போகிறோம், பார்த்துக்கொள்ளலாம்" என எண்ணியதில் மண் விழுந்தது. நான் தயார் செய்து வந்ததை முதல் பத்து நிமிடங்களுக்குள் எடுத்து முடித்துவிட்டேன். சற்றும் யோசிக்காமல் மீதி நேரத்தை என் பொது அறிவுக்கு எட்டியதை வைத்து முடிந்தவரை கோர்வையாக எடுத்தேன் (முதல் நாள் ஆயிற்றே, ஆசிரியர் சரியில்லை என்று அடுத்த நாள் இந்த மாணவர்களும் வகுப்பிற்கு வராமல் போய்விட்டல்?). ஆச்சரியம், அதுவரை தேமே என்று உட்கார்ந்து இருந்த மாணவர்களிடம் இப்போதுதான் புத்துணர்ச்சி தெரிந்தது. சரி, இதுதான் நமது பாதை என்று முடிவு செய்து கலந்துரையாடல் மூலம் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். என் அப்பா வகுப்பெடுப்பதை நான் சிறு வயதிலேயே பார்த்திருந்ததால் இது எனக்கு எளிதாக முடிந்தது என நினைக்கிறேன். அனாயசமாக அவர் வகுப்பெடுப்பதை பள்ளியில் அவருடன் சில நாட்கள் கூட இருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தமிழாசிரியராக வெறுமனே பாடத்தை மட்டும் நடத்தாமல் மாணவர்களுக்கேற்ற நகைச்சுவை கலந்து கண்டிப்பு குறையாமல் அழகாக வகுப்புகளை நடத்துவார். (சாதரணமாக அவர் யாருடனும் உரையாடும்போது் கூட அதில் சுவாரஸ்யம் கலந்திருக்கும்).

மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் என்பதால் அடுத்த வகுப்புக்கு தயார் செய்ய நிறைய நேரம் கிடைக்கும். அதேபோல் வார விடுமுறை நாட்களில் அதிகமாக தியேட்டருக்கும் ஓரிரு முறை கோயிலுக்கும் சென்று வந்தோம். சரியாக மூன்று வாரங்களில் என்னை திருச்சி ஜே ஜே கல்லூரிக்கு அதே வேலைக்கு மாற்றினார்கள்.

திருவண்ணாமலையப் போலவே திருச்சியும் தெய்வீகமான ஊர்.

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள். திருச்சி மக்களின் படிப்பறிவு, வாழ்க்கை தரம் ஆகியவை திருவண்ணாமலையை விட பன்மடங்கு அதிகம், நாகரிகமான மக்கள். வகுப்பை பொறுத்தவரை திருவண்ணாமலையின் கதையே இங்கும் தொடர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இன்னும் ஆர்வமாக வகுப்புகளை எடுக்க முடிந்தது. மாணவர்களுடனான புரிதல் அதிகம் என்பதால் சிரத்தையின்றி பாடங்கள் வேகமாக முடிந்தன. பின்னர் செமஸ்டர் விடுமுறையில் மாணவர்கள் அவரவர் ஊருக்கு சென்றுவிட்டதால் என்னை வேறு ஒரு கல்லூரிக்கு அனுப்ப என் நிறுவனம் தயாரான போது 'எப்படியும் ஆசிரியர் தொழில்தான் என ஆயிற்று, அதை ஊர் ஊருக்கு மாறி மாறி செய்யாமல் இங்கேயே சேர்ந்துவிட்டால் என்ன?' என எண்ணி நான் ஜே ஜே கல்லூரியிலேயே கல்லூரி ஆசிரியராக பணி மாறினேன். திருச்சி பிடித்துப்போனதும் ஒரு காரணம்.

என்னைப் பொருத்தவரை ஜே ஜே கல்லூரியில் பணியாற்றியபோது சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இல்லை. நான் அங்கு ஆசிரியராக சேர்ந்த சில நாட்களிலேயே என் நண்பன் சௌந்தரும் வந்து ஆசிரியராக சேர்ந்தான். நாங்கள் படிக்கும்போது கல்லூரியில் அடித்த லூட்டிக்கு நேரெதிராய் நடந்துகொண்டோம் (இது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?). அவனும் என்னைப்போலவே முதலில் வகுப்பறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டான், ஆனால் என்னைவிட விரைவாக சமாளித்துவிட்டான். நாங்கள் கணினிப் பிரிவை சார்ந்ததால் எங்களுடன் சேர்த்து மொத்தம் மூவர் மட்டுமே ஆண்கள், மற்ற ஆறு பேரும் பெண்கள். நல்ல நாளிலேயே நாங்கள் இருவரும் பெண்களிடம் பேசியதில்லை, இதில் இங்கே என்னடா சோதனை என இருவரும் புலம்பினோம். ஆனால் போகப்போக அந்த ஆறு பேரும் எங்களிடம் ரொம்ப இயல்பாக பழக அங்கு ஒரு நட்பு வட்டம் உதயமானது. அது மற்ற பிரிவு ஆசிரியர்களிடம் பொறாமைத் தீயை எண்ணையூற்றி வளர்க்கும் அளவுக்கு வளர்ந்தது வேறு கதை.

ஜே ஜே கல்லூரியில் பணிபுரிந்த போது நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள்:

1. நானும் சௌந்தரும் சமைக்க கற்றுக் கொண்டது, மேலும் எவ்வளவு கேவலமாக சமைத்திருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடவும், சாப்பிட்ட பின் கை கழுவுறோமோ இல்லையோ மறக்காமல் "சாப்பாடு நல்லாருக்குடா"ன்னு சொல்லவும் கற்றோம்.
2. அடுப்பு, சட்டி எதுவுமே இல்லாமல் (ஏன் கடலையே இல்லாமல் கூட) மணிக்கணக்காக கடலை வறுத்தெடுக்கக் கற்றது.
3. எனக்கு மிகவும் பிடித்த தேசிய மாணவர் படையில் (NSS) துணை பொறுப்பாசிரியர் பணியாற்றும் வாய்ப்பு. ~60 மாணவர்களுடன் தங்கிய அந்த 13 நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அதிலும் மேடையில் பல முக்கிய பிரமுகர்களின் முன் யதேச்சையாக அமைந்த எனது கண்ணிப் பேச்சு அனைவரின் பாராட்டை பெற்றது முக்கியமானது (வழக்கமாக அந்தப் பணியை செய்யும் பொறுப்பாசிரியர் அன்று அங்கு இல்லாததால் நான் பேசும்படி ஆனது).
4. கல்லூரிக்கென்று தனியாக இருக்கும் இசைக் குழுவினருடனான தொடர்பு. அவர்கள் ஒரு கச்சேரிக்கு தயாராகும் பாங்கை காண அவ்வளவு அழகாக இருக்கும் (அதில் உள்ள பல்வேறு சிரமங்களையும் அறிய முடிந்தது).
5. மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒரு போட்டியில், வழக்கம்போல் பலவித பந்தா செய்து பேட்டை பிடித்து நான் நிற்க, அம்பயர் (என் நேரம் அவனும் ஒரு மாணவன்), "சார், பேட்ட இப்பிடி திருப்பி புடிங்க சார்"-னு என் மானத்தை வாங்கினான்... "எல்லாம் தெரியும், வேணும்னுதான் இப்பிடி புடிச்சிருக்கேன், நீ பந்த போட சொல்லுப்பா"-ன்னு சமாளித்து தொலைத்தேன்.
6. கல்லூரியில் பணிபுரிவோர் சிலரின் குடும்பத்துடனான தொடர்பு. நானும் சௌந்தரும் போகுமிடமெல்லாம் தாயன்புடன் பழகுவோரின் தொடர்பு நிச்சயம் கிட்டும், இங்கேயும் அப்படியே.

7. கணினி பிரிவு ஆசிரியர்களுக்குள்ளே இருந்த ஒற்றுமை HOD கொடுக்கும் வேலையை முடிக்காமல் எல்லோருமாக சேர்ந்து டிமிக்கி கொடுப்பது முதல் தியேட்டர் சென்று படம் பார்ப்பது வரை இருந்தது.
8. என் நெருங்கிய நண்பன் ராஜாவின் சகோதரனை இழந்தது.
9. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் திருச்சி பேருந்தி நிலையத்தில் நின்றிருந்த சில கல்லூரி பெண்களை (ஜே ஜே கல்லூரியில் படிப்பவர்கள் என தெரியாமல்) லுக் விட்டபடியே கடந்து சென்றபோது அப்பெண்கள் எங்கள் இருவரையும் பார்த்து "good evening sir" சொன்னது ('நாங்க அப்பிடியே shock ஆயிட்டோம்' என்பதை சொல்லவும் வேண்டுமா?).
.... இப்படி இன்னும் பல.

"ஆக, பாடம் நடத்துவதைத் தவிர மற்ற எல்லாத்தையும் பண்ணி இருக்கீங்க"-ன்னு நீங்க நினைக்கிறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். நான் JAVA கற்றுக்கொடுக்கும்போது இருந்த சுவாரஸ்யம் கல்லூரி ஆசிரியரான பின் இல்லை, காரணம் - தியரியை அதுவும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து அதை வகுப்பில் ஒப்பிப்பது எனக்கு ஒத்துவரவில்லை (மென்பொருள் சார்ந்த அல்லது அதன் உருவக்கத்தில்தான் என் நாட்டம இருந்தது எனவும் வைத்துக் கொள்ளலாம்). சரியான வாய்ப்பு ஒன்று எனது மற்றொரு நெருங்கிய நண்பன் ராம்குமார் மூலம் என்னைத் தேடி வர, திருச்சி நண்பர்களின் வேண்டுகோளுக்கு மாறாக சென்னை வந்துவிட்டேன். அதன்பிறகு திருச்சி செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. "ஈரம்" படம் பார்க்கும்போது திருச்சியின் நினைவுகள் எனக்குள் வந்து சென்றது - என்ன ஒரு அழகான ஊர்.

Wednesday, October 21, 2009

நானும் நியூயார்க் போனேன்

நியூயார்க் - அமெரிக்காவின் இதயம், அதன் அழகைக் காண்பது என் நெடுநாள் கனவு
நகரம் உறங்கும் போதும் அதன் இருட்டிலும் கூட அவ்வளவு அழகு
நேரம், தனிமை, பணம் - இவற்றை எளிதில் தொலைக்க அலையும் மக்கள் கூட்டம்
அடர்ந்தது - அந்நகர வீதிகள், நாம் சென்றது குளிர்காலமாதலால் வெண்
பனியும் படர்ந்து சுளீரென நம் தோல்களை குளிரில் சுண்டி இழுத்தன

கப்பல் ஏறி வலம் வந்தோம், சுதந்திர தேவி சிலையின் அழகை ரசித்தோம்
இறங்கியே மெல்ல நடந்தோம், கடல் நடுவே அந்நகரத்தின் அழகில் மெய்சிலிர்த்தோம்
காற்றும் குளிரும் ஒரு சேர நம் உடம்பை உறைய வைக்க, அங்கே
கரையில் நடந்தது பற்றி சொல்லித் தெரிய ஏதுமில்லை


நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் வலம் வந்தேன் - கண்ணாடி மாளிகைகளாலான வீதிகள்.
மெழுகுவர்த்தியும், தனிமை தேடும் ஜோடிகளும் அங்கங்கே காபி கடை மேசைகளில்...
தனிமையோ அமெரிக்கர்களின் நாட்டுடைமை மட்டுமல்ல பிறப்புரிமையும் கூட! அதில்
கொடுமை யாதெனில் விருப்பப்பட்டோருடன் தனிமையை அனுபவிக்கலாம்! எனது
கொடுமையோ அப்போது அங்கே என்னவள் அருகில் இல்லை என்பதுதான்!

<மேலே உள்ள வரிகளில் இருந்து ஏதும் உணரமுடிகிறதா? ("அதுவே ஒரு மொக்கை, இதுல இது வேறயா?" என்றெல்லாம் உண்மையை வெளியே சொல்லக் கூடாது...) தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்>


<மேலே உள்ள வரிகளின் முதல் சில வார்த்தைகளை மட்டும் சேர்த்து படித்தால் ஒரு பாடல் வருமே.... அந்த தடித்த வார்த்தைகளை மட்டும் கோர்வையாக மீண்டும் படித்து பாருங்களேன் - ஏதோ என் புத்திக்கு தோன்றிய ஒரு புது முயற்சி...

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது... கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது...
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ...

அந்த பாடலின் சரணம் கீழே தொடருகிறது>

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீயில்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீயில்லை

விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீயிங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்கேயில்லை

நான் இங்கே நீயும்மங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் இங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எரும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்-என்று பூமி இருந்தும் இந்த தருனத்தில் குளிர்காலம் கோடையானதேனா
வா அன்பே நீயும் வந்தால் செந்தனல் கூட பனிக்கட்டி போலே மாறுமே

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)


திருமணத்திற்குப்பின் தனிமையில் இருப்போருக்கு மனதை இதமாக வருடும் பாடல். இப்பாடலை எழுதிய வாலியைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

-சமுத்ரன்

Tuesday, October 20, 2009

சமீபத்தில் நான் ரசித்த திரைப்படங்கள்


1. உன்னைப் போல் ஒருவன்: பேசும் படம், குருதிப்புனல் வரிசையிலான ஒரு கமல் படம். தொடர் தீவிரவாதங்களையும் அதற்குக் காரணமானவர்க‌ளை தண்டிப்பதில் சட்டத்தின் தாமதப் போக்கையும் காணும் ஒரு வெகுஜன இந்தியனின் மனப்போக்கை கதை பிரதிபலிக்கிறது.


பாடல்களே இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்து விடுவது படத்தின் விறுவிறுப்பிற்கு பலம். அங்கங்கே வசனத்தில் உள்குத்து அரசியல் புகுந்து விளையாடியிருக்கிறது (பல வகைகளில்). சில வசனக்களும், காட்சிகளும், பாத்திரங்களும் சர்ச்சையை உண்டுபண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன‌. குறிப்பாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க வைக்க கமல் சொல்லும் வசனம், ஒரு முஸ்லிம் தீவிரவாதி பேசுவதாக வரும் 'மோதிப்பார்' வசனம், மர்ம தொலைபேசி அழைப்பை trace செய்ய‌ க‌ணிப்பொறி வல்லுனர் ஒருவரை அழைக்க மோகன்லால் பேசும் வசனம், அந்த கணிப்பொறி வல்லுனரின் பாத்திரப் படைப்பு, இப்படி இன்னும் பல‌. கமல் தன் செயலை நியாயப்படுத்தி தன் தரப்பு பாதிப்புகளை சொல்லும் மிக முக்கியமான இடத்தில் வசனம் நம் மனம் ஒத்த விஷயங்களை விட்டுவிட்டு எதை எதையோ நோக்கிச் சென்று தடுமாறுகிறது. அந்த இடத்தில் வசனத்தில் தேவையான‌ கூர்மையில்லை. மோகன்லாலின் உடல் மொழி அற்புதம். இந்த படத்தில் கமல் நடிப்பை குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை. லாஜிக்கில் பல ஓட்டைகள். அதனாலென்ன, ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான படம்.

2. வண்ணத்துப்பூச்சி: நீண்ட நாட்களுக்கு முன்பே வெளிவந்த, யாருமே பார்த்திராத நாடகப்பாணியிலான ஒரு படம். ஆறு முதல் எட்டு வயதே இருக்கும் ஒரு பெண் குழந்தைதான் கதையின் மையம். சென்னையில் கதை துவங்குகிறது. வேலை வேலை என எப்போதும் பிஸியான அப்பா அம்மா, பெரும் வசதி படைத்த வெறும் இயந்திரமான வாழ்க்கை - இரண்டுமே அக்குழந்தைக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.

அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுமே தெரியாத அந்தக் குழந்தை, ஒரு விடுமுறையில் தன் தாத்தாவைப் பார்க்க அவர் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறாள். கரடு முரடான அதே சமயம் வெள்ளந்தியான‌ அக்கிராம மக்களுடன் இந்தக் குழந்தையின் பிணைப்பும், அதன் விளைவுகளும் என்பதே இப்படத்தின் கரு. நன்றாக வந்திருக்க வேண்டிய படம், அதன் நாடகத்தனத்தால் தத்தளிக்கிறது. ஆனாலும் வித்தியாசமான கள‌ம், அந்தக் குழந்தையின் குரல் மற்றும் நடிப்பிற்காக‌ ஒருமுறை பார்க்கலாம்.

3. திரு திரு துரு துரு: மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் படம். மில்லிய த்ரில்லிங் கலந்த, ஒரு கலகலப்பான 'feel good' காதல் கதை. மெளலியைத் தவிர அனைவரும் புதியவர்கள். ஆனால் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார்கள். குறிப்பாக நாயகி சர்வ‌ சாதாரணமாக நடித்திருக்கிறார்.

காட்சிகள் படு இயல்பாக நகர்கின்றன. நாயகனும் நாயகியும் காதல் வயப்படுவது ரொம்பவே யதார்த்தம். பாடல்களை படம் பார்க்கும்போது பிடிக்கவில்லை, மறுமுறை கேட்கும்போது பிடித்திருந்தது. திரைக்கதையில் அங்கங்கே தொய்வு, படத்தொகுப்பிலாவது சரி செய்திருக்கலாம். நாயகனும் நாயகியும் மிகப் பொருத்தமான தேர்வு. இருவருக்குமே நல்ல எதிர்காலம் உண்டு. ஒரு அழ‌கான‌ கைக்குழந்தையும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது பாராட்டத்தக்கது. வரவேற்கப்பட‌ வேண்டிய ஒரு நல்ல படம்.

4. நியூட்டனின் மூன்றாம் விதி: எஸ் ஜே சூர்யாவின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என ஒரு வைராக்கியத்தில் இருந்தேன், என் தனிமை இப்படத்தைப் பார்க்க வைத்தது.

எதிர்பார்த்தது போலவே படத்தின் ஆரம்பத்தில் அவரின் வழக்கமான பாணியில் காதல் காட்சிகள். ஆனால் போகப்போக கதை வேறு பாதையில் சென்றது எதிர்பாராத ஆச்சரியம். அதன்பின் படம் விறிவிறுப்பாகவே சென்றது. படமும் நன்றாகவே இருந்தது. பிறகு படம் ஏன் ஓடவில்லை என தெரியவில்லை (என்னை போலவே எல்லோரும் எஸ் ஜே சூர்யாவிற்கு பயந்து படம் பார்க்கவில்லையா எனத் தெரியவில்லை). சில இடங்களில் சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இன்னும் பார்க்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக பார்க்கலாம்.


5. ஈரம்: ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் + த்ரில்லர் படம்.

ஒரே சீரான திரைக்கதை. இந்த வகைப் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க போவதில்லை என்றாலும் காட்சிகளும் காரணங்களும் நம்பும்படி இருக்க வேண்டும். அந்த வகையில் இது ஏமாற்றவில்லை. சில இடங்களில் நாயகியின் கண்களே பேசுகின்றன, நல்ல நடிப்பு. அந்த போலீஸ் அதிகாரியின் நடிப்பும் தேர்ந்த நடிகரின் நடிப்பு போல இருந்தது. நாயகியின் கணவன் பாத்திரம் ஏதோ முழுமை பெறாதது போன்ற ஒரு உணர்வு. பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. மற்றபடி தாராளமாக பார்க்கலாம்.

6. யாவரும் நலம்: இதுவும் சஸ்பென்ஸ் + த்ரில்லர் வகை. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை. மாதவன் மிக நன்றாக நடித்துள்ளார்.

சில காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்றாலும், திரைக்கதை அமைப்பில் அவை காணாமல் போய் விடுகின்றன. இருந்தும் இந்த படம் ஏன் ரசிகர்களை முழுமையாக சென்றடையவில்லை எனத் தெரியவில்லை. முதல் பாதியில் நாயகனுக்கு மட்டும் lift இயங்க மறுப்பது, ஆணி அடிப்பதில் சிக்கல் போன்ற சில காட்சிகளின் தேவையற்ற நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த படத்தை ஒரு இரவு நேரத்தில் பார்த்துவிட்டு அந்த இரவு பயத்தில் தூக்கம் வராமல் தவித்தேன். த்ரில்லரை ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

-சமுத்ரன்

Wednesday, October 14, 2009

நாங்க ஆடுன கிரிக்கெட்

நானும் கிரிக்கெட்டில ஒரு சிறந்த batsman, fielder மற்றும் bowler-ங்க. ஹல்லோ, இப்பிடி எல்லாம் சிரிக்கப் பிடாது. சொன்னா பேசாம கேக்கனும் sorry படிக்கனும். படிங்க.

காலேஜ்ல நாங்க அப்போ 2nd year. எங்க Hostel நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து நேரம் போறதுகூட தெரியாம சாப்பிடாம கொள்ளாம கிரிக்கெட் விளையாடுவோம். ஆமாங்க கிரிக்கெட்தான். ஆனா கிரிக்கெட்னா கிரிக்கெட்டே இல்ல (ஷ் ஷ், இல்ல இல்ல, அய்யோ மேல படிங்களேன்), ஒரிஜினல் கிரிக்கெட்டுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். என்ன வித்தியாசம்னா? விளையாடுற இடம் 10 X 15 அடி - வேற எங்கயும் இல்ல, hostel room-தான். பந்து, கோலி குண்ட விட கொஞ்சம் பெரிசா இருக்கும், காத்தடிச்சா பறந்து போயிடும் அந்த அளவுக்கு 'கணமா' இருக்கும். hostel-க்கு வெளிய ரோட்ல கிடந்த தென்னமட்டைதான் எங்களுக்கு Bat. Hello, அப்பிடி எல்லாம் பக்காதிங்க. இதுக்கே இப்பிடி பார்த்தா எப்பிடி? மேல படிங்க.

Rules இதுதான் (இதுக்கெல்லாம் கமிட்டி எதுவும் கிடையாது, இத இங்க படிச்சுட்டு என்கூட விளையாடினவங்களே 'அப்படியா'-ன்னு கேப்பாங்கன்னா பாருங்களேன்!):
1. Stumpன்னு சொல்லி ஒரு பலகைய வச்சுடுவோம் (கிடைக்கிற பலகை, ஒல்லியா அகலமான்னு எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை), அந்த பலகைல பந்து பட்டுட்டா out
2. தொடர்ந்து 3 பந்து batல படாம உடம்புல பட்டுட்டா bowled - out (பின்ன, அருணை எல்லாம் எப்பிடிதான் out பண்றது?)
3. பந்து batல பட்டு நேரா சுவத்துல பட்டுடுச்சுன்னா sixer கிடையாது, அது out (இது செளந்தருக்காக கொண்டு வந்தது, ஆனா இந்த ruleனால நாந்தான் பல தடவ out ஆனேன்)
4. One pitch catch & straight catch - ரெண்டுமே out-தான்
5. பந்து sideல இருக்குற சுவத்துல உருண்டோடி பட்டா 2 runs
6. அதே பந்து உருண்டோடி bowler-க்கு பின்னாடி இருக்குற சுவத்துல பட்டா 4 runs (படிக்கிறது ஈஸி, வந்து ஆடிப் பாருங்க தெரியும்)
7. batsmanக்கு பின்னாடி இருக்குற சுவத்துல பந்து எப்படி பட்டாலும் எதுவும் கிடையாது
8. ஒருத்தன் Batting பண்றப்போ மத்த எல்லாரும் fielding பண்ணனும்
9. ஒரு ஓவருக்கு 6 பந்து (எல்லாம் நேரம்)

நானு, சுரேஷ், மோகனசுந்தரம், கனேஷ், விவேக், அருண், ராஜா இப்பிடி பல பேர் சேர்ந்து விளையாடுவோம். எத்தன பேர் வந்தாலும் no சொல்லாம எல்லாரையும் சேர்த்துகிட்டு ஜாம் ஜாம்னு களத்துல sorry roomல இறங்கிடுவோம். செளந்தர், சுப்பு, பாலமுருகன்-னு இவங்க எல்லாம் ஒரிஜினல் கிரிக்கெட் விளையாடுறவங்க, அவங்க அப்பப்ப எங்ககூட இப்பிடி விளையாடுறப்ப எங்ககிட்ட training எடுதுக்குவாங்க (சுப்பு, இதுக்கு போயி அருவாள தூக்கலாமா? உண்மை சில சமயம் கசக்கும்தான், விடு). Fielding setup எல்லாம் யார் வேணும்னாலும் பண்ணுவோம் (கண்ணுல வர்ற ரத்தத்த துடைச்சுட்டு மேல படிங்க). நான் Bowling பண்ணும்போது பந்து நல்லா spin ஆகுதுன்னு ராஜாவும் செள்ந்தரும் சொல்வாங்க ('அந்த பொண்ணு உன்னையே பாக்குறாடா'ன்னும் அவிங்கதான் சொன்னாய்ங்க, அதனால அவங்க சொன்னது எந்த அளவுக்கு உண்மைங்கறத உங்க சாய்ஸ்-க்கே உட்டுடறேன்).

சுரேஷ்: எப்பவுமே முதல் பந்துல அவுட் ஆவுறதே இவனுக்கு வழக்கம். ஆனா ரொம்ப ஸ்டைலிஷா விளையாடுவான். அதுவும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமா out ஆவான். out ஆன பின்னாடி சோகமா batஅ குடுத்துட்டு போவான் பாருங்க, எனக்கு century அடிச்சா மதிரி அப்பிடி இருக்கும் (ஏன்னு கேக்காதிங்க). ஆனா சில சமயம் ஆடுவான் ஆடுவான் அவுட் ஆகாம அடிகிட்டே இருப்பான்.

அருண்: இவன பத்தி சொல்லனும்னா ஒரு incident-அ சொல்லியே ஆகனும். 2nd yearல எங்களுக்கும் 1st yearக்கும் முக்கியமான கிரிக்கெட் போட்டி. ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கேன்னு இவன் சொன்னத நம்பி டீம்ல சேத்துகிட்டாங்க. 4, 5 விக்கெட் போயிடுச்சு. கடைசி ஓவர். win பண்ண இன்னும் 12 ரன் அடிக்கனும். இவந்தான் பேட்டிங் பண்றான். முதல் பந்து ட்ராவிட் டெஸ்ட் மேட்ச்-ல உள்ள வந்தவுடனே வைப்பார் பாருங்க அந்த மாதிரி ஒரு டொக். 2வது - இது 2வது பந்தா இல்ல முதல் பந்தோட replayவான்னு கூட-ஆடுன இன்னொரு batsmanக்கே சந்தேகம் வந்திருக்கும். 3வது பந்துல 2 ரன். இப்ப எல்லருக்கும் ஒரே tension. 4வது பந்து well left (இவனை recommend பண்ண VB நெலமைய யோசிச்சு பாருங்க). ஜெயிக்க 10 ரன் வேணும். கடைசி பந்து, அவன் கால்கிட்டயே அடிச்சுவுட்டுட்டு "yes... yes..."னு ஒரு ரன்னுக்காக partnerஐ இவன் கூப்பிட்டான், அவன் திருப்பி பார்த்த பார்வைல அதுக்கப்புறம் பேச்சுக்கு கூட கிரிக்கெட் கிரவுண்டு பக்கம் அவன் தல வச்சு படுக்கல. ஆனா இங்க indoor cricketல (அதாங்க நாங்க விளையாடுறது) இவன out பண்றதுக்குள்ள எங்களுக்கு போது போதும்னு ஆயிடும். பந்து அவன்கிட்ட போறது மட்டுந்தான் தெரியும், அவன் காலவிட்டு வெளில வராது. திடீர்னு ஒரு பந்துல அவுட் ஆயிடுவான், ஆனா அவுட்னு ஒத்துக்கவே மாட்டேன் "batல படவே இல்லடா"-ன்னு நின்னுக்குவான், நாங்களும் "ஆடித் தொல"-ன்னு பெருந்தன்மையா(?!) விட்டுகுடுப்போம். இவனுக்காகவே கொண்டு வந்ததுதான் rule # 2. (rulesஐ நாங்க அப்பிடி strict-ஆ follow பண்ணுவோம்).

செளந்தர்: ஒரிஜினல் கிரிக்கெட்-ல அப்ப அப்ப 4, 6-ன்னு அடிச்சு அசத்துவான். அடிக்க ஆரம்பிச்சுட்டான்னா பந்து பறக்கும் (அட, இது மெய்யாலுமே உண்மைங்க). அதனால இவனுக்கு எங்க காலேஜ் ராபின் சிங்-னு பேரு. இங்க indoor cricketலயும் அப்பிடிதான் அடிப்பான், பந்து பறக்கும். இவனுக்காகவே கொண்டு வந்ததுதான் rule#3. ஆனா பின்னாடி உஷாராயிட்டான். எங்களுக்கு இவன அவுட் பண்றதுக்கு வழியே தெரியாதப்போ, புதுசா இன்னொரு rule கொண்டு வந்தோம் - அதாவது ஒருத்தன் 3 ஓவருக்கு மேல bat பண்ண கூடாதுன்னு (வேற வழி?).

சுப்பு: எங்க காலேஜ் சச்சின். கிரிக்கெட்ல ஆல்ரெளண்டர். Opening bowler and opening batsman. நிதானமா நேர்த்தியா விளையாடுவான். சுப்புவோட கிரிக்கெட் பத்தி நான் இதுக்கு மேல கமெண்ட் பண்ணினா இந்த பதிவு அப்பறம் ஒரு சீரியஸ் பதிவாயிடும். [காத குடுங்க: உண்மை என்னன்னா, எங்ககூட கிரிக்கெட் விளையாடும்போது ரொம்ப தெனறுவான், அதுவும் குறிப்பா என்னோட பவுளிங்ல (முடியல)].

பாலமுருகன்: "என்னோட bowling-la 4 விக்கெட் எடுத்தேன்டா அப்புறம் battingல 35 ரன் அடிச்சேன், நீங்க பாக்காம போயிட்டீங்களேடா"-ன்னு எப்பல்லாம் நாங்க மேட்ச் பாக்கலியோ அப்பல்லாம் சொல்லுவான். சரிடா இன்னிக்கு நீ ஆடு, நாங்க பாக்குறோம்னு பார்த்தன்னிக்கெல்லாமே டக் அவுட்தான். ஆனாலும் நாங்க அடிக்கிற நக்கல கண்டுக்காம டக் அவுட் ஆனதுக்கு காரணம் சொல்லுவான் பாருங்க. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சரி அத வுடுங்க. இவன் கொஞ்சம் அதிரடி பிரியன்கிறதால அங்க காட்ட வேண்டியதெல்லாம் இங்க indoor cricketல காட்டி 6 அடிச்சு அவுட் ஆயிடுவான் (எப்புடீ எங்க ரூல்ஸ்?).

ராஜா: இவன் ஒரு பாராட்டு மன்னன். பந்து ஒரு பக்கம் போவும், நாம ஒரு பக்கம் batஅ காத்துல சுத்துவோம், அத கூட "யோவ் batting style கலக்குறய்யா"-ன்னு பாராட்டுவான். ஆனா அவன் உண்மையிலயே battingல கலக்குவான். ரொம்ப நேரம் அவுட் ஆகாம அவன் ஆடுறா மாதிரி நமக்கு தோன்றதுக்கு முன்னாடியே நம்ம மனச புரிஞ்சுகிட்டு அவனாவே அவுட் ஆயிட்டு வந்துடுவான். அவ்ளோ நல்லவன்.

அப்பறம் நானு: எதுக்குங்க என்னை பத்தி? எனக்கு தற்பெருமை எல்லாம் பிடிக்காதுங்க. என்னங்க? நம்பிக்கை இல்லன்னா, முதல் பாராவுல முதல் வரிய மறுபடியும் படிச்சு பாருங்க. சும்மாவா சொல்றோம்?

-சமுத்ரன்

Sunday, October 11, 2009

எனது ஆசிரியர்கள்

ஆசிரியர் = குரு. பிள்ளைகள் மாணவர்களானபின் தன் பெற்றோரை அடுத்து தனக்கு ரோல்மாடலாக உருவகப்படுத்திக் கொள்வது (கொள்ள விரும்புவது) தன் ஆசிரியர்களைத்தான். அதிலும் தனக்கு பிடித்த, தன்னிடம் அக்கறை காட்டும் ஆசிரியர்களை பிடிக்காத மாணவன் இருக்க முடியாது.

பல ஆசிரியர்களிடம் நான் பயின்றிருந்தாலும் என்னை பாதித்த மற்றும் எனது திறமைகளை வெளிக்கொணற உதவிய என் வாழ்வில் மறக்க முடியாத என் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய பதிவு இது. எனது அப்பாவும் ஒரு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் என்ற முறையில் இந்த பகிர்வு அவர்களின் கல்விப்பணிக்கு ஓர் அர்த்தம் தரும் பதிவு என எண்ணி மகிழ்கிறேன்.

இன்று எவ்வளவோ பள்ளிகள், அதில் எவ்வளவோ ஆசிரியர்கள். ஆனால் எனது பள்ளிப்பருவத்தின்போது, இத்தனை பள்ளிகள் இருந்திருக்கவில்லை. இத்தனை வியாபாரம் சார்ந்ததாக இருக்கவில்லை. என் பெற்றோரின் கல்வித்தகுதியோ அல்லது அவர்களின் தொழிலோ பள்ளியில் என் சேர்க்கையை நிர்ணயிக்கவில்லை.


வீட்டிலிருந்து 1 கி. மீ. தூரத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பை நிர்மலா மேல் நிலைப்பள்ளியில் தொடர்ந்தேன். இங்கே இந்த பள்ளியைப்பற்றி சொல்லியாக வேண்டும். "இது என் பள்ளி, பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும், பள்ளியால் நான் பெருமை அடைய வேண்டும்" என்ற ஓர் அழகான, உணர்வுபூர்வமான அடைமொழி கொண்ட பள்ளி. என் வீட்டிலிருந்து 7 கி. மீ. தொலைவில் உள்ள இப்பள்ளி கொளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. கிறிஸ்தவ பாதிரியார்களால் 1950-களில் உருவாக்கப்பட்டு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அரசு உதவியும் கிடைக்கப்பெற்ற பள்ளி. 1990-களில் சேலம் மாவட்டத்திலிருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் இந்தப்பள்ளிக்கு தனி இடம் இருந்தது. என் தந்தையும் இதே பள்ளியில் படித்தவர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அற்புதசாமி ஐயா: இவர் ஒரு தமிழாசிரியர். ஏழாம் வகுப்பில் எனக்கு தமிழ் பாடம் எடுத்தார். கடு-கடு முகம் கொண்ட ஆசிரியர்களுக்கு மத்தியில் மிகவும் சாந்தமான முகமும் குரலும் உடையவர். தமிழ் செய்யுள்களை அழகாக ராகம் போட்டு பாடி, செய்யுளின் பொருளை ஒரு அழகான தற்கால நிகழ்வுடன் உதாரணமாக சொல்லி பாடம் நடத்துபவர். அவர் தமிழை நேசித்து நடத்தும் விதம் கண்டு எனக்கும் தமிழ் செய்யுள்களை அர்த்தம்கண்டு படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவரே அடுத்த ஆண்டும் த‌மிழ் பாடத்திற்கு ஆசிரியராக‌ வரமாட்டாரா என மாணவர்களை ஏங்க வைத்தவர். என் தந்தையும் ஒரு தமிழாசிரியர் என்பதால் என்னிடம் தமிழில் ரொம்ப எதிர்பார்த்தார் (Mark-தான்). தமிழில் நான் ஒரு முதல் மதிப்பெண் பெறும் மாணவன் இல்லைதான் என்றாலும் ஓரளவு மதிப்பெண் வாங்கி அவரது எதிர்பார்ப்பை சற்றே பூர்த்தி செய்தேன் எனலாம். மாணவர்களிடத்தில் தவிர வேறு யாரிடமும் எங்கேயும் பேசிராத என்னை, மேட்டூர் நகராட்சி அளவிளான பேச்சுப்போட்டி ஒன்றிற்கு எந்த தைரியத்தில் பள்ளி சார்பாக அவர் அனுப்பி வைத்தார் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. போட்டி நடக்குமிடத்திற்கு சென்று மற்ற போட்டியாளர்களின் திறமையை காதார கேட்ட பின் என் நிலை எனக்கு தெரிந்துவிட்டது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் மேடையேறி உளறிக் கொட்டினேன். வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அதற்குப்பின் எந்த மேடையிலும் (பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில்) எனக்கு நடுக்கமோ பதற்றமோ இன்றுவரை வந்ததில்லை, அதற்கு முக்கிய காரணம் இந்த அனுபவம்தான் என எண்ணுகிறேன்.

காமாட்சிப் பிள்ளை ஆசிரியர்: இவர் பள்ளியின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்றுனர். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவரிடம் பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் உண்டு. விளையாட்டு விழா சமயங்களில் சூறாவளியாகச் சுழல்வார். ஐம்பது வயதைத்தாண்டிய போதும் இருபது வயது இளைஞனைப் போல் வலம் வருவார். நான் எட்டாம் வகுப்பு பயிலும் போது அந்த வருட பெற்றோர் தின விழாவில் (பள்ளி ஆண்டு விழாவை பெற்றோர் தின விழாவாக கொண்டாடுவது பள்ளியின் வழக்கம்) ஆசிரியர்களால் நடத்தப்பட்ட ஒரு வரலாற்று நாடகத்தில் அவர் ஏற்று நடித்த நடிப்பில் அரங்கமே அதிர்ந்தது. தளர்ந்த, சோர்ந்த நிலையில் நான் அவரை பார்த்ததேயில்லை. அவர் முகமும் உடலமைப்பும் அவரைச்சுற்றி இருப்போருக்கும் உற்சாகத்தை பாய்ச்சுவதாக இருக்கும்.

முனுசாமி ஆசிரியர்: இவர் பள்ளியில் ஒரு முதுனிலை ஆசிரியர். இவருக்கு சற்றே பருத்த உருவம், அதுவே அவரை மிகவும் சாந்தமானவராக காட்டியது. அதுதான் அவரின் இயல்பும் கூட. பத்தாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலம் எடுத்தவர், எங்களுக்கு வகுப்பு ஆசிரியரும் அவரே. வந்த முதல் நாளே, ஏதோ ஓர் உந்துதலில் அல்லது நம்பிக்கையில் என்னை அந்த வகுப்பிற்கு மாணவத்தலைவன் ஆக்கினார். எனக்கு அந்த பொறுப்பில் எந்த நாட்டமும் இருந்திருக்கவில்லை, அப்படி எந்த பொறுப்பையும் அதுவரை ஏற்றிருக்கவும் இல்லை. சின்ன தயக்கம் காட்ட, தைரியம் கொடுத்து என்னை ஏற்க வைத்தார். போகப்போக நானும் விரும்பி அதன் பொறுப்புகளை செய்தேன். கடமைகளை சிறப்பாக செய்தேன் என்பதை அடுத்த ஆண்டுகளில் அந்தந்த வகுப்புகளில், மாணவத்தலைவன் பொறுப்பை மற்ற ஆசிரியர்களும் எனக்கே கொடுத்தபோது உணர்ந்தேன். அதுவே பள்ளியின் தேசிய மாணவ சமூக சேவைக் குழுவுக்கும் (NSS) தலைமை பொறுப்பை பெற்றுத் தந்தது என எண்ணுகிறேன். இன்று என் சொந்த வாழ்விலும் நண்பர்களிடத்திலும் இந்த அனுபவம் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கிறது என்றால் அந்தப் பெருமை முழுதும் இவரையே சாரும்.

மரியமைக்கேல் ஆசிரியர்: ஒரு முதுனிலை ஆசிரியர். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம் & கணக்கு பாடங்களுக்கான தனிப்பயிர்ச்சி இவரிடம்தான் கற்றேன். பள்ளியில் எனக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு பாடம் நடத்தினார். ஆங்கிலமும் கணிதமும் எளிமையாக பயில்வதற்கும் அவற்றில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கும் இவரே மிக முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் பயிற்சி முடிந்தவுடன் நேரத்திற்கு எனக்கு பேருந்து இல்லை என்பதால், சற்று நேரம் அவர் வீட்டிலேயே இருந்துவிட்டு கிளம்புவேன், அதனால் முதன்முதலாக ஒரு ஆசிரியரின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு இவர் வீட்டில் எனக்கு கிடைத்தது. சில சமயம் அவர்களின் சமையல் கட்டு வரை என்னை அழைத்து உணவளித்து உபசரித்ததும் உண்டு.

அமல்ராஜ் ஆசிரியர்: எனக்கு பத்தாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியராக வந்தார். பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் எங்களுக்கு இயற்பியல் பாட ஆசியராகவும் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். நான் பத்தாம் வகுப்பில் மாணவத்தலைவனாக ஆற்றிய செயல்களை அங்கீகரிக்கும் விதமாக பதினொன்றாம் வகுப்பிலும், தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பிலும் எனக்கு மாணவத்தலைவன் பொறுப்பைக் கொடுத்தார். அதில் எனக்கு கொஞ்சம் கர்வம் வந்ததும் அவர் அதை உடனே உணர்ந்து தகர்த்தவர் என்பதும் உண்மை. இயற்பியல் பாடத்துக்கான தனிப்பயிர்ச்சியை மொத்த வகுப்பும் இவரிடம் இவர் வீட்டில் கற்றோம். பாடம் சார்ந்த விஷயங்கள் அல்லாது எந்த பொது விஷயங்களையும் (அறிவியல், கலை, வரலாறு, எதிர்காலம் & அரசியல்) தன்னிடம் கேட்க மட்டுமல்ல நீண்ட நேரம் விவாதிக்கவும் இன்முகத்தோடு அனுமதித்தவர். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்பவர்.

பிச்சைமுத்து ஆசிரியர்: எங்களுக்கு பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடம் எடுத்தவர். நல்ல விஷயங்களைப் பார்த்தவுடன் பாராட்டுவது இவரது தனி குணம். பாடங்களை மிகவும் விளக்கமாக சந்தேகமின்றி நடத்த முயலும் குணமுடையவர். படங்களை ஏதோ பலகையில் நானும் வரைந்தேன் என்று இல்லாமல், மிக அழகாக பல்வேறு நிற பலகைப்பென்சில்களைப் பயன்படுத்தி விரைவாக வரைவார். தேர்வின்போது புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்தமாக அதே சமயம் கருத்து மாறாமல் எழுத தூண்டுவார். சில விஷயங்களை தனிமையில் விளக்குவதும், அந்த வயதின் தன்மைகள், அந்த வயதிற்கு தேவையான நெறிகளை ஒரு நல்ல நண்பனைப்போல் இதமாக உணர்த்துவதும் அனைத்து மாணவர்களுக்கும் இவரிடத்தில் பிடித்தமான ஒன்று. அமல்ராஜ் ஆசிரியரிடம் இருக்கும் மேலே சொன்ன அத்தனை பிடித்த குணங்கள் இவரிடமும் உண்டு (இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் கூட‌). அதுமட்டுமல்லாமல், இருவருக்குமே மாணவர்களிடத்தில் நல்ல புரிதல் உண்டு. தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாக இன்றும் இருந்து வருகின்றனர் என்பது இவர்களின் தனிச்சிறப்பு.