Sunday, October 11, 2009

எனது ஆசிரியர்கள்

ஆசிரியர் = குரு. பிள்ளைகள் மாணவர்களானபின் தன் பெற்றோரை அடுத்து தனக்கு ரோல்மாடலாக உருவகப்படுத்திக் கொள்வது (கொள்ள விரும்புவது) தன் ஆசிரியர்களைத்தான். அதிலும் தனக்கு பிடித்த, தன்னிடம் அக்கறை காட்டும் ஆசிரியர்களை பிடிக்காத மாணவன் இருக்க முடியாது.

பல ஆசிரியர்களிடம் நான் பயின்றிருந்தாலும் என்னை பாதித்த மற்றும் எனது திறமைகளை வெளிக்கொணற உதவிய என் வாழ்வில் மறக்க முடியாத என் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய பதிவு இது. எனது அப்பாவும் ஒரு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் என்ற முறையில் இந்த பகிர்வு அவர்களின் கல்விப்பணிக்கு ஓர் அர்த்தம் தரும் பதிவு என எண்ணி மகிழ்கிறேன்.

இன்று எவ்வளவோ பள்ளிகள், அதில் எவ்வளவோ ஆசிரியர்கள். ஆனால் எனது பள்ளிப்பருவத்தின்போது, இத்தனை பள்ளிகள் இருந்திருக்கவில்லை. இத்தனை வியாபாரம் சார்ந்ததாக இருக்கவில்லை. என் பெற்றோரின் கல்வித்தகுதியோ அல்லது அவர்களின் தொழிலோ பள்ளியில் என் சேர்க்கையை நிர்ணயிக்கவில்லை.


வீட்டிலிருந்து 1 கி. மீ. தூரத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பை நிர்மலா மேல் நிலைப்பள்ளியில் தொடர்ந்தேன். இங்கே இந்த பள்ளியைப்பற்றி சொல்லியாக வேண்டும். "இது என் பள்ளி, பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும், பள்ளியால் நான் பெருமை அடைய வேண்டும்" என்ற ஓர் அழகான, உணர்வுபூர்வமான அடைமொழி கொண்ட பள்ளி. என் வீட்டிலிருந்து 7 கி. மீ. தொலைவில் உள்ள இப்பள்ளி கொளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. கிறிஸ்தவ பாதிரியார்களால் 1950-களில் உருவாக்கப்பட்டு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அரசு உதவியும் கிடைக்கப்பெற்ற பள்ளி. 1990-களில் சேலம் மாவட்டத்திலிருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் இந்தப்பள்ளிக்கு தனி இடம் இருந்தது. என் தந்தையும் இதே பள்ளியில் படித்தவர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அற்புதசாமி ஐயா: இவர் ஒரு தமிழாசிரியர். ஏழாம் வகுப்பில் எனக்கு தமிழ் பாடம் எடுத்தார். கடு-கடு முகம் கொண்ட ஆசிரியர்களுக்கு மத்தியில் மிகவும் சாந்தமான முகமும் குரலும் உடையவர். தமிழ் செய்யுள்களை அழகாக ராகம் போட்டு பாடி, செய்யுளின் பொருளை ஒரு அழகான தற்கால நிகழ்வுடன் உதாரணமாக சொல்லி பாடம் நடத்துபவர். அவர் தமிழை நேசித்து நடத்தும் விதம் கண்டு எனக்கும் தமிழ் செய்யுள்களை அர்த்தம்கண்டு படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவரே அடுத்த ஆண்டும் த‌மிழ் பாடத்திற்கு ஆசிரியராக‌ வரமாட்டாரா என மாணவர்களை ஏங்க வைத்தவர். என் தந்தையும் ஒரு தமிழாசிரியர் என்பதால் என்னிடம் தமிழில் ரொம்ப எதிர்பார்த்தார் (Mark-தான்). தமிழில் நான் ஒரு முதல் மதிப்பெண் பெறும் மாணவன் இல்லைதான் என்றாலும் ஓரளவு மதிப்பெண் வாங்கி அவரது எதிர்பார்ப்பை சற்றே பூர்த்தி செய்தேன் எனலாம். மாணவர்களிடத்தில் தவிர வேறு யாரிடமும் எங்கேயும் பேசிராத என்னை, மேட்டூர் நகராட்சி அளவிளான பேச்சுப்போட்டி ஒன்றிற்கு எந்த தைரியத்தில் பள்ளி சார்பாக அவர் அனுப்பி வைத்தார் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. போட்டி நடக்குமிடத்திற்கு சென்று மற்ற போட்டியாளர்களின் திறமையை காதார கேட்ட பின் என் நிலை எனக்கு தெரிந்துவிட்டது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் மேடையேறி உளறிக் கொட்டினேன். வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அதற்குப்பின் எந்த மேடையிலும் (பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில்) எனக்கு நடுக்கமோ பதற்றமோ இன்றுவரை வந்ததில்லை, அதற்கு முக்கிய காரணம் இந்த அனுபவம்தான் என எண்ணுகிறேன்.

காமாட்சிப் பிள்ளை ஆசிரியர்: இவர் பள்ளியின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்றுனர். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவரிடம் பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் உண்டு. விளையாட்டு விழா சமயங்களில் சூறாவளியாகச் சுழல்வார். ஐம்பது வயதைத்தாண்டிய போதும் இருபது வயது இளைஞனைப் போல் வலம் வருவார். நான் எட்டாம் வகுப்பு பயிலும் போது அந்த வருட பெற்றோர் தின விழாவில் (பள்ளி ஆண்டு விழாவை பெற்றோர் தின விழாவாக கொண்டாடுவது பள்ளியின் வழக்கம்) ஆசிரியர்களால் நடத்தப்பட்ட ஒரு வரலாற்று நாடகத்தில் அவர் ஏற்று நடித்த நடிப்பில் அரங்கமே அதிர்ந்தது. தளர்ந்த, சோர்ந்த நிலையில் நான் அவரை பார்த்ததேயில்லை. அவர் முகமும் உடலமைப்பும் அவரைச்சுற்றி இருப்போருக்கும் உற்சாகத்தை பாய்ச்சுவதாக இருக்கும்.

முனுசாமி ஆசிரியர்: இவர் பள்ளியில் ஒரு முதுனிலை ஆசிரியர். இவருக்கு சற்றே பருத்த உருவம், அதுவே அவரை மிகவும் சாந்தமானவராக காட்டியது. அதுதான் அவரின் இயல்பும் கூட. பத்தாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலம் எடுத்தவர், எங்களுக்கு வகுப்பு ஆசிரியரும் அவரே. வந்த முதல் நாளே, ஏதோ ஓர் உந்துதலில் அல்லது நம்பிக்கையில் என்னை அந்த வகுப்பிற்கு மாணவத்தலைவன் ஆக்கினார். எனக்கு அந்த பொறுப்பில் எந்த நாட்டமும் இருந்திருக்கவில்லை, அப்படி எந்த பொறுப்பையும் அதுவரை ஏற்றிருக்கவும் இல்லை. சின்ன தயக்கம் காட்ட, தைரியம் கொடுத்து என்னை ஏற்க வைத்தார். போகப்போக நானும் விரும்பி அதன் பொறுப்புகளை செய்தேன். கடமைகளை சிறப்பாக செய்தேன் என்பதை அடுத்த ஆண்டுகளில் அந்தந்த வகுப்புகளில், மாணவத்தலைவன் பொறுப்பை மற்ற ஆசிரியர்களும் எனக்கே கொடுத்தபோது உணர்ந்தேன். அதுவே பள்ளியின் தேசிய மாணவ சமூக சேவைக் குழுவுக்கும் (NSS) தலைமை பொறுப்பை பெற்றுத் தந்தது என எண்ணுகிறேன். இன்று என் சொந்த வாழ்விலும் நண்பர்களிடத்திலும் இந்த அனுபவம் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கிறது என்றால் அந்தப் பெருமை முழுதும் இவரையே சாரும்.

மரியமைக்கேல் ஆசிரியர்: ஒரு முதுனிலை ஆசிரியர். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம் & கணக்கு பாடங்களுக்கான தனிப்பயிர்ச்சி இவரிடம்தான் கற்றேன். பள்ளியில் எனக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு பாடம் நடத்தினார். ஆங்கிலமும் கணிதமும் எளிமையாக பயில்வதற்கும் அவற்றில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கும் இவரே மிக முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் பயிற்சி முடிந்தவுடன் நேரத்திற்கு எனக்கு பேருந்து இல்லை என்பதால், சற்று நேரம் அவர் வீட்டிலேயே இருந்துவிட்டு கிளம்புவேன், அதனால் முதன்முதலாக ஒரு ஆசிரியரின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு இவர் வீட்டில் எனக்கு கிடைத்தது. சில சமயம் அவர்களின் சமையல் கட்டு வரை என்னை அழைத்து உணவளித்து உபசரித்ததும் உண்டு.

அமல்ராஜ் ஆசிரியர்: எனக்கு பத்தாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியராக வந்தார். பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் எங்களுக்கு இயற்பியல் பாட ஆசியராகவும் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். நான் பத்தாம் வகுப்பில் மாணவத்தலைவனாக ஆற்றிய செயல்களை அங்கீகரிக்கும் விதமாக பதினொன்றாம் வகுப்பிலும், தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பிலும் எனக்கு மாணவத்தலைவன் பொறுப்பைக் கொடுத்தார். அதில் எனக்கு கொஞ்சம் கர்வம் வந்ததும் அவர் அதை உடனே உணர்ந்து தகர்த்தவர் என்பதும் உண்மை. இயற்பியல் பாடத்துக்கான தனிப்பயிர்ச்சியை மொத்த வகுப்பும் இவரிடம் இவர் வீட்டில் கற்றோம். பாடம் சார்ந்த விஷயங்கள் அல்லாது எந்த பொது விஷயங்களையும் (அறிவியல், கலை, வரலாறு, எதிர்காலம் & அரசியல்) தன்னிடம் கேட்க மட்டுமல்ல நீண்ட நேரம் விவாதிக்கவும் இன்முகத்தோடு அனுமதித்தவர். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்பவர்.

பிச்சைமுத்து ஆசிரியர்: எங்களுக்கு பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடம் எடுத்தவர். நல்ல விஷயங்களைப் பார்த்தவுடன் பாராட்டுவது இவரது தனி குணம். பாடங்களை மிகவும் விளக்கமாக சந்தேகமின்றி நடத்த முயலும் குணமுடையவர். படங்களை ஏதோ பலகையில் நானும் வரைந்தேன் என்று இல்லாமல், மிக அழகாக பல்வேறு நிற பலகைப்பென்சில்களைப் பயன்படுத்தி விரைவாக வரைவார். தேர்வின்போது புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்தமாக அதே சமயம் கருத்து மாறாமல் எழுத தூண்டுவார். சில விஷயங்களை தனிமையில் விளக்குவதும், அந்த வயதின் தன்மைகள், அந்த வயதிற்கு தேவையான நெறிகளை ஒரு நல்ல நண்பனைப்போல் இதமாக உணர்த்துவதும் அனைத்து மாணவர்களுக்கும் இவரிடத்தில் பிடித்தமான ஒன்று. அமல்ராஜ் ஆசிரியரிடம் இருக்கும் மேலே சொன்ன அத்தனை பிடித்த குணங்கள் இவரிடமும் உண்டு (இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் கூட‌). அதுமட்டுமல்லாமல், இருவருக்குமே மாணவர்களிடத்தில் நல்ல புரிதல் உண்டு. தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாக இன்றும் இருந்து வருகின்றனர் என்பது இவர்களின் தனிச்சிறப்பு.

2 comments:

  1. நானும் இந்த பள்ளியில் பயின்ற மாணவன் என்ற முறையில், இந்த பதிவு என் பழைய நினைவுகளை சற்றே அசைபோட வைத்தது.
    மேற்ச் சொன்ன ஆசிரியர்கள் அனைவரிடமும் நானும் பயின்றிருக்கிறேன். ஊதியத்தையும் தாண்டி, இவர்களின் உண்மையான உழைப்பும், அர்ப்பணிப்புமே, இன்றுவரை இவர்களை மாணவர்களின் நினைவுகளில் நிற்கிறார்கள்.

    இந்த பள்ளியின் இன்னும் சில ஆசிரியர்களும் என்னை கவர்ந்த ஆசிரியர்கள் வரிசையில் வருபவர்களே..
    1. வள்ளி நாயகம்
    2. வாசுதேவன்

    ஆசிரியப் பணியில் முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பு உள்ளமும் கொண்ட அனைத்து ஆசிரியர்களுமே, நிச்சயம் மாணவர்களை கவரும் ஆசிரியர்களே!

    ReplyDelete
  2. //இந்த பள்ளியின் இன்னும் சில ஆசிரியர்களும் என்னை கவர்ந்த ஆசிரியர்கள் வரிசையில் வருபவர்களே..
    1. வள்ளி நாயகம்
    2. வாசுதேவன்//

    இவர்களும் எனக்குப் பிடித்தமான ஆசிரியர்களே!
    //ஆசிரியப் பணியில் முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பு உள்ளமும் கொண்ட அனைத்து ஆசிரியர்களுமே, நிச்சயம் மாணவர்களை கவரும் ஆசிரியர்களே!//
    முற்றிலும் உண்மை. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சீனி.

    ReplyDelete