Monday, September 28, 2009

கோலி வெளையாட சேத்திக்குங்கடா...!

1986. அரசு துவக்கப்பள்ளி. நான் முதல் வகுப்பு. என் பெரியப்பா பையன் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு. வீட்டிலிருந்து பள்ளிக்கு ஒரு கி.மீ தூரம். காலையும் மாலையும் நடந்து பள்ளிக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வருவோம். காலை பள்ளிக்கு வர 15 முதல் 20 நிமிடம் ஆகும், ஆனால் மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு வர, குறைந்தது 2 மணி நேரம் ஆகும். காரணம், கோலி. நான் ஆடவில்லை என்றாலும் ஆடுறவங்கள பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்க்கும் ஆட வேண்டும் என ஆசை. ஆனால் விளையாட‌ என்னிடம் கோலி குண்டுகள் இல்லை. அவற்றை வாங்க அப்பா அம்மாவிட‌ம் காசு கேட்கவோ பயம். எப்படியோ என் தாத்தா பாட்டியிடம் மிட்டாய் வாங்குவதாக பொய் சொல்லி 25 பைசாவாக வாங்கி வாங்கி ஓரிரு மாதத்திற்குள் ஒரு ரூபாய் சேர்த்துவிட்டேன்.

அது ஒரு திங்கள்கிழமை காலை. நானும் என் பெரியப்பா பையனும் வழக்கம்போல நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அவன் அண்ணன் முறை என்றாலும் நான் அவனை "வாடா போடா" என்றுதான் (இன்றும்) கூப்பிடுவேன்.

நான்: டேய், இன்னிக்கு சாங்காலம் என்னையும் கோரி (கோலி குண்டு) வெளையாட சேத்திக்குங்கடா.

அண்ணன்: கோரி குண்டு வெச்சிருக்கியா?

நான்: எங்கிட்ட ஒர்ருவா (ஒரு ரூபாய்) இருக்குது, எத்தன கோரி குண்டு வாங்கலாம்?

அண்ணன்: ஒர்ருவாயா.... தெரியில ஆனா நெறையா வரும். ஒரு கோரி குண்டு 5 காசு.

நான்: நீ வாங்குனப்ப எப்டி கணக்கு போட்ட‌?

அண்ணன்: ம்... செரி (சரி), பத்து வாங்கிக்க, அடிக்கிறதுக்கு பெருசா ஒரு கோரி வேணும், அதொண்ணு வாங்கிக்க, அது பத்து காசு.

நான்: நீ இன்னிக்கு எத்தன கோரி கொண்டாந்துருக்குற (கொண்டு வந்திருக்கிற)?

அண்ணன்: பன்னண்டு.

நான் (விரல்விட்டு): ஒன்னு, ரண்டு, மூனு, நாலு, அஞ்சு, ஆறு, ஏலு, எட்டு, ஒம்போது, பத்து.. ம்... பத்து.. பத்து.. பதினொண்ணு, பன்னண்டு. என்னோட‌ (என்ன விட) உங்கிட்ட ரண்டு கோரி சேத்திருக்குமா (அதிகமா இருக்குமா)? செரி, நான் பத்து வாங்கிக்கிறேன். மீதி காசு இருந்துச்சுன்னா முட்டாயீ (மிட்டாய்) வாங்குவேன்.

அண்ணன்: டே டே, எனுக்கு?

நான்: ம்... குடுப்பேன் வா. ஏன்டா, அன்னிக்கு உங்காத்தா (உங்க பாட்டி) உனுக்கு ஆறு முட்டாயீ குடுத்துச்சுன்னு சொன்ன‌, எனுக்கு குடுத்தியா?

அண்ணன்: ம்... உங்கப்பா கோடதான் அன்னிக்கு நெய் பிஸ்கேட்டு வாங்கிட்டு வந்தாங்கலாமா, நீ எங்கிட்ட சொல்லகோட இல்ல‌.

(சிறிது நேரம் இருவரும் மௌனம்...)

நான்: இன்னிக்கு என்னய‌ வெளயாட்டுல சேத்திக்கிறியா, ஒரு முட்டாயீ தாறேன்?

அண்ணன்: செரி, உனுக்கு கோரி குண்டு வெளயாடத் தெரியுமா?

நான்: ம்... தெரியுன்டா, நீங்க ஆடறத டெய்லி பாக்கறன்ல. நேத்தெல்லாம் அதே மாரி (மாதிரி) எங்கூட்டு (எங்க வீட்டு) வாசல்ல‌ கல்ல வச்சு இலுத்து இலுத்து அடிச்சு பாத்தேன்.

அண்ணன்: தோத்துகிது போயிட்டீன்னா அப்பறம் அழுவ கூடாது.

நான்: இல்ல இல்ல.... நல்லா அடிப்பன்டா. எப்டியாவுது அடிச்சு ஜெவிச்சுருவேன்.

அண்ணன்: அழுதுகிட்டு போயி ஊட்டுல வொளறீட்டின்னா (உளறிவிட்டால்) அப்பறம் கோரி வெளையாடறம்னு உங்கப்பாவுக்கு தெரிஞ்சுச்சுன்னா, ரண்டு பேரும் செத்தோம்.

நான்: (சிறிய நேர யோசனைக்குப் பிறகு) ஏன்டா, தோத்துட்டன்னா பத்து கோரியும் புடுங்கிவீங்களா?

அண்ணன்: அடிச்சு மண்ணு மேட்ட வுட்டு வெளில வந்த கோரிய‌ பூரா அடிச்சவன் எடுத்துக்கலாம்.

நான் (மனதுக்குள்): இர்ரா, இன்னிக்கு அப்பிடியே குறி பாத்து அடிச்சு எல்லா கோரியும் நான் ஜெவிக்கிறேன்.

மதியம் பள்ளி அருகிலிருந்த அந்த கட்டில்கடையில் நானும் அண்ணனும் கோலிகள் வாங்கினோம். மீதிக்கு மிட்டாயும் வாங்கினேன். இருவரும் முதல் முறையாக சண்டை இல்லாமல் மிட்டாய் சாப்பிட்டோம். அன்று வகுப்பு முழுவதும் எனக்கு கோலி விளையாடும் நினைப்புதான். எப்படா பள்ளி முடியும் என காத்திருந்தேன்.

அந்த மாலை வேலையும் வந்தது. "டேய், பெல்லடீ" ஆசிரியரின் குரல் தேனாக ஒலிக்கிறது. "டிங் டிங் டிங்". "ஓஓஓஓ........" என்று பீரிட்டுக்கொண்டு பள்ளியிலிருந்து எல்லோரும் பையை தோளில் போட்டுக்கொண்டு எதிலிருந்தோ தப்பித்தவர்கள் போல் ஓடுகிறார்கள்!!! குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் அங்கங்கே நிமிட தாமதம் இன்றி குழுக்களாக பிரிந்து கோலி விளையாட ஆரம்பிக்கின்றனர். கோலி விளையாட மிகச்சிறிய இடமே போதும் என்பதால், எங்கள் பள்ளியின் முன்புறமிருந்த‌ சற்றே பரந்த மணல் தரை போதுமானதாக இருந்தது. என் வேண்டுகோளும் எப்படியோ ஏற்றுக்கொள்ளப்பட்டு நானும் என் அண்ணன் இருந்த குழுவுடன் இணைகிறேன். அந்த குழுவில் (மட்டுமல்ல, மற்ற எல்லா குழுவிலும்) விளையாடுபவர்கள் எல்லாரும் இரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படிப்பவர்கள். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு புதுசு என்பதாலோ என்னவோ அவர்கள் யாரும் கோலி விளையாட வருவதில்லை. ஆனால் நான் ஒன்றாம் வகுப்பில் இரு ஆண்டுகள் படிப்ப‌வன் என்பதால், இரண்டாம் வகுப்பு படிக்கும் அனைவரும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள்தான் (ஒன்றாம் வகுப்பில் பெயில் எல்லாம் இல்லைங்க, 5 வயது ஆகாமலே பள்ளியில் சேர்ந்து விட்டேன், அவர்களும் ஒன்றாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள். பின் அடுத்த வருடம் 5 வயது ஆன பின்பு, மறுபடியும் ஒன்றாம் வகுப்பு படித்தேன் :( என்ன செய்ய?).

நானும் கோலி விளையாடுகிறேன். ம்... நான் எங்கோ குறி வைக்க, என் விரலில் இருந்து புறப்பட்ட கோலி வேறு எங்கோ செல்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் பணையம் வைக்கும் இரண்டு கோலிகளையும் இழந்து வருகிறேன். இயன்ற அளவு முயற்சி செய்தும் பத்து கோலிகளையும் இழந்தேன். எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் ஜெயித்தவன் அவற்றை திருப்பித் தர மறுத்துவிட்டான். ஜெயித்தவன் மேல் வந்த கோவம் அழுகையாக மாறியது. அழுதுகொண்டே எல்லாரையும் திட்டிக்கொண்டு அண்ணனை விட்டுவிட்டு தனியே வீட்டுக்கு வந்துவிட்டேன். அம்மாவிடமோ அப்பாவிடமோ இதை தெரியாமல் பார்த்துக் கொண்டேன். பின்னாளில் நாங்கள் கோலி விளையாடுவது அப்பாவுக்குத் தெரிந்து நன்றாக டோஸ் வாங்கியது வேறு கதை.

1 comment:

  1. //பின்னாளில் நாங்கள் கோலி விளையாடுவது அப்பாவுக்குத் தெரிந்து நன்றாக டோஸ் வாங்கியது வேறு கதை.//

    கோலி விளையாடுவது, அவ்வளவு பெரிய குற்றமா என்ன?
    அண்ணன் யார்? பிரபாகரனா?

    ReplyDelete