Sunday, September 27, 2009

"கனவு தேசம்"

"Onsite". சம்பளத்துக்கு கணினித்தொழில் செய்றவுங்களுக்கு இது ஒரு மந்திர சொல். அதுவும் "அமெரிக்கா" என்றால் சொர்க்கத்துக்கே போறா மாதிரி... அப்பிடி என்ன அமெரிக்காவுல இருக்குது? இந்த "கனவு தேச"த்தில எல்லாருமே கால் பதிக்க விரும்பும் காரணம் என்ன? அங்கே போனவர்களில் பலர் திரும்பி இந்தியா வரமாட்டேன்னு அடம் பிடிக்கும் மர்மம் என்ன? நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண‌ர்வுப்பற்றும் உறவுப்பற்றும் அதிகமாக இருக்கும் எந்த இந்தியனுக்கும் மேற்சொன்ன "கனவு தேச" கருத்துக்களில் மாறுபாடு இருந்தாலும், அந்த நாடு பிற நாட்டு மக்களை தன் வசம் ஈர்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் என்னவாக இருக்கலாம்?


1. முழு முதற் காரணம் "பணம்":
இந்தியாவில் செய்யும் அதே வேலையை அங்கே செய்தால் கிடைக்கும் பன்மடங்கு அதிகமான‌ பணம்.


2. மிகவும் சீர்படுத்தப்பட்ட தூய்மையான கட்டமைப்பு:
சாலைகளில் ஆரம்பித்து, பொதுக் கழிப்பிட அறைகள் வரை சீரானவை, ஒழுங்குபடுத்தப் பட்டவை மற்றும் மிக முக்கியமாக சுத்தமானவை. மேலும் ஒரு இடத்தின் சீதோஷ்ண நிலையில் இருந்து இன்னொரு இடத்துக்கான பாதையுடன் கூடிய தொலைவை கணக்கிட்டு காட்டும் கருவிகள் வரை மக்களுக்கு பயனுள்ள, மக்களுடன் ஒன்றி இருக்கும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி.


3. கட்டுப்பாடற்ற ஆனால் சட்டத்திற்குட்பட்ட சுதந்திரம்:
"இந்தியாவுல இல்லாத சுதந்திரமா?"ன்னு கேட்க நினைச்சாலும், இந்தியாவில் சாத்தியப்படாத "அனைவருக்கும் ஒரே சட்டம்" அங்கு 95% அமலில் இருக்குது. அமெரிக்காவின் சட்டங்களை ஒரு வரியில சொல்லனும்னா "மத்தவங்கள தொந்தரவு செய்யாம 'யாரும்' 'எதுவும்' செய்யலாம்".

4. பிரபலமான சுற்றுலா தளங்கள்:
மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு வகையான கேளிக்கை மையங்களும் கலை-விளையாட்டு அரங்குகளும் அருங்காட்சியகங்களும் விற்பன்ன அரங்குகளும் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளங்களாக‌ ஏராளமாக‌ அந்நாடு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.


5. பண்பாக‌ பேசும் மக்கள்:
அமைதியாக பண்பாக‌ பேசும் மக்கள் (பழகும் மக்கள்னு சொல்ல முடியாது, ஏன்னா யாரும் புதியவர்களிடம் அவ்வளவு சீக்கிர‌மா ஒன்றிப் பழக மாட்டங்க). மேலதிகாரிகளின் கனிவான பேச்சு, நாம் சொல்லும் காரணங்களை வாய் பிளந்து கேட்டுவிட்டு "சரி" என்று சொல்லும் பாங்கு - இவை இந்தியாவில் தன் மேலதிகாரியிடம் சுத்தமாக எதிர்பார்க்க முடியாதது. குடுத்த வேலையை 'முடிக்க முடியல', 'தப்பா செஞ்சுட்டேன்' போன்ற விஷயங்கள அழகான வார்த்தைகள போட்டு (மேலதிகாரியாவே இருந்தாலும்) ரொம்ப சுலபமா சமாளிக்கலாம் / தப்பிச்சுகலாம்.

குறிப்பு: அப்புற‌ம் எதையுமே மறைக்காத அந்த பொண்ணுங்க (இதுக்கும் மேல இந்த பாயிண்ட் பத்தி வேண்டாம் :)).

6. தரமான எலக்ட்ரானிக் பொருட்கள்:
விலை குறைவான, தரமான எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் அதற்கான மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை. எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளையும் வாங்கிய பின் பிடிக்கலைன்னா ஒரு மாதத்திற்குள் திருப்பித்தந்துவிட்டு மாற்றுப்பொருளையோ அல்லது பணத்தையோ எந்த பிரச்சினையுமின்றி வாங்கிச்செல்லலாம்.

7. சீரான அரசு நிர்வாகம்:
மக்களின் அனைத்து வகையான‌ தேவைகளையும் அதற்கான வழிமுறைகளையும் எளிமைப்படுத்திய அரசு நிர்வாகம் - உதாரணமாக‌ பேருந்து, ரயில், விமானம் போன்ற கனரக போக்குவரத்து மற்றும் அதன் நேர மற்றும் விலைகளின் அட்டவணையில் தொடங்கி ஒவ்வொரு இடத்தின் முகவரி-வரைபடத்துடனான‌ ஒருங்கிணைக்கப்பு வரை யாரும் எங்கிருந்தும் துல்லியமாக‌ அறியும் வகையிலானவை.


8. சொகுசு வாழ்க்கை:
மேலே இருக்குற காரணங்களே ஒருத்தனோட சொகுசு வாழ்க்கைக்கு போதுமானது, ஆனா அங்க சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க எந்த அடிதடியோ போட்டியோ இல்ல. ஏன்னா, அவங்கவங்க தன்னோட தனிமையை அனுபவிக்கிறதோட இல்லாம, அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை தொந்தரவு செய்யிறதில்ல‌.

சொகுசுதான்! எல்லாமே சொகுசுதான். சரி சரி... இவை எல்லாமே அமெரிக்காவில் மட்டும் கொட்டி கிடக்க காரணங்கள் என்ன, அதையும் பார்க்கலாம்:

1. அவர்களின் கலாச்சாரம்:
எந்த நேரத்திலும் யாரும் யாரையும் (ஆண் பெண் வித்தியாசமில்லாம) சார்ந்து இருக்குற‌தில்ல... அடுத்தவரின் விருப்பு வெருப்புக்கு முழு மரியாதை கொடுக்குறாங்க... இறந்த காலத்திலயோ இல்ல எதிர் காலத்திலயோ வாழாம அப்போ இருக்குற இடத்தையும் மனதையும் பணத்தையும் அங்கயே அப்போவே (நிகழ்காலத்துல) அனுபவிக்கிறாங்க... சேமிக்கிறேன்னு சொல்லி பணம்-பொருளை யாரும் பதுக்குறது இல்லை, அதனால தாராளமா எல்லா பணமும், பொருளும் பொதுமக்கள் வர்த்தகத்துலயே இருக்கு.

2. மக்கள் தொகை:
ரொம்ப ரொம்ப கம்மியான மக்கள் தொகை. அதுவும் 90%-க்கும் மேல் நல்ல வசதி படைத்தவர்கள். மிகப்பெரிய நிலப்பரப்பு.

3. அமெரிக்கா மற்ற நாடுகள் மேல செலுத்தும் ஆதிக்கத்தால கிடைக்கும் முதலீடுகளும், அதனால் மலிவான விலையில் கிடைக்கும் பல அத்தியாவசிய‌ பொருட்களும்.

4. எல்லாவற்றிற்க்கும் மேலாக‌, தன் கடமையை இயன்ற அளவு நேர்மையாக செய்யும் அரசாங்கம்.

சரி... அமெரிக்காவுல நீண்ட நாள் இருக்குறதால என்ன மாதிரியான எண்ணங்கள் ஒரு தமிழனுக்கு தோணும்னு பாக்கலாம்:

1. எது செய்தாலும் சட்ட திட்டங்களை பாக்கனும் (எதுக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல?), அதனால வாழ்க்கையே ஒரு எந்திரம் மாதிரி இருக்குற‌தா தோணும். போகப்போக அதுவே பழகிட்டாலும், ஒரு கட்டத்துல வெறுமையா மாறிடும். உதாரணத்துக்கு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கனும்னு ஆசை இருந்தா நாம நம்ம வீட்டு முன்னாடியோ இல்ல நாம நெனைகிற இடத்துலயோ அத பண்ண முடியாது. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு 10-20 மைல் தள்ளி ஏதாவது ஒரு இடத்துல ஒன்னுகூடி வெடி வெடிச்சுக்கலாம் அதுவும் தீபாவளி அன்னிக்கேன்னா முடியாது. அதுக்கும் கூட அனுமதி வாங்கனும், இல்லைன்னா கண்ணாடி எண்ணனும் (அங்க எல்லாம் கம்பி கிடையாது கண்ணாடி அறைதான்). இவனுங்க அனியாயத்துக்கு ரூல்ஸ் (rules) பாக்குறனுங்கடான்னு தோணும். இத்தனை நாளா சொகுசு வாழ்க்கையா இருந்தது திடீர்னு 'இது எனக்கு பிடிக்கல விடு நான் எங்க‌ ஊருக்கே போறேன்'னு தோண ஆரம்பிச்சுடும்.

2. நாம நம்மலோட வருங்கால சேமிப்பை மனசுல வச்சு வச்சு ஒவ்வொரு இடத்துலயும் செலவு பண்றதால அமெரிக்கர்கள்ட்ட இருந்து ஒரு அன்னியமாவே வாழ்ந்துட்டு இருப்போம் (மனதளவிலும் சரி, வெளி இடங்களிலும் சரி).

3. கவர்ச்சிப் பொண்ணுங்கள பாத்தா, பொது இடம்னு கூட பக்காம வச்ச கண்ணு வாங்காம பாக்குறதால (கூடவே பொறந்தது என்னிக்கும் போகாது) சுத்தி இருக்குறவங்களோட ஏளனப் பார்வைக்கு ஆளாகனும்.

4. என்னதான் சொகுசா வாழ்ந்தாலும் 'இது ஒரு அன்னிய நாடு, இவங்கெல்லாம் அன்னிய மக்கள்' என்ற எண்ணம் மனசுல இருந்துட்டே இருக்கும்.

5. சொந்தம் நட்பு வட்டங்களின் முக்கிய நிகழ்வுகளான திருமண‌ம், குழந்தை பிறப்பு மாதிரி விஷேஷங்கள்ல கலந்துக்க முடியாம போறப்போ, ஏதும் துக்க நிகழ்ச்சிகள்ள பங்கேற்க முடியலங்குறப்போவும், ஒரு குற்ற உணர்ச்சி வரும். சிலருக்கு அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் முக்கிய நண்பர்கள பிரிஞ்சு ரொம்ப நாள் இருக்க முடியாதுங்கறது புரியும்.

6. இந்த மாதிரி கட்டமைப்பு இந்தியாவுல எப்போ வரும்க‌ற ஏக்கம் கண்டிப்பா மேலொங்கி நிக்கும். ("நீங்கல்லாம் அமெரிக்கா அமெரிக்கான்னு அங்க போயி அமெரிக்கனுக்கு வேலை செஞ்சுட்டு, இந்தியாவ குற்றம் சொல்றியா"ன்னு யாரும் கேட்டாங்கன்னா அவங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லைங்க‌றதையும் தாண்டி, இப்பிடியா மூஞ்சில அடிச்சா மாதிரி கேக்குறதுன்னு அவங்க மேல கோபம் வரும்).

7. எதுவும் எதிர்பாராத பிரச்சினை என்று வந்து, அப்ப கை கொடுக்க கூட‌ யாருமில்லங்குற ஒரு இக்கட்டான‌ நிலை வரும்போது 'என் இந்தியாவை விட மிகச்சிறந்த நாடு உலகத்துலயே இல்ல'-ன்னு தோணும்.

8. நண்பர்கள் யாராவது இந்தியாவில் எடுத்த புகைப்படமோ இல்ல வீடியோவோ இமெயில்ல‌ அனுப்புனா, 'இதெல்லாம் இல்லாம எவ்ளோ கஷ்டம இருக்கு தெரியுமா?'‍ன்னு மனசு அழும்.

9. முக்கியமா சோறு. என்னதான் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், மனைவி சமச்சு போட்டாலும் (திருமணமானவங்க), ஊருக்கு போயி பழைய சாப்பாட்டயாவது அம்மா கையால‌ சாப்பிடனும்னு மனசு ஏங்கும்.

மொத்தத்துல, பொருளை ஈட்டும் நோக்கத்தோட‌ ஒரு குறிப்பிட்ட காலம் அமெரிக்கா போகலாம், தங்கலாம், அதன் சுகங்கள அனுபவிக்கலாம், ஆனால் சம்பாதித்துவிட்டு சொந்த நாட்டில்தான் நிரந்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். எவருக்கும் அவரோட‌ சொந்த நாட்டுல வாழ்ற‌துல இருக்குற திருப்தியும் நிம்மதியும் அந்நிய நாட்டுல‌ முழுமையா கிடைக்காதுங்கறது மட்டும் உறுதி. இதையெல்லாம் தாண்டி அங்கேயே தன் எஞ்சிய‌ வாழ்க்கையை வாழ‌ நினைத்து இந்தியா திரும்ப மறுக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அது அவர்களுடைய‍ விருப்பம். அவர்கள் மேல் என்னால் பரிதாபப் பட மட்டுமே முடிகிறது.

மீண்டும் சந்திப்போம்!

2 comments:

  1. "OnSite"- ஓர் மாய உலகம்
    வெளியே இருப்பவன், உள்ளே வர துடிக்கிறான்
    உள்ளே இருப்பவன், வெளியே வர துடிக்கிறான்

    ReplyDelete
  2. கலக்கல்.. எனக்கும் ரொம்ப நாளா அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது ஆசை.. நீங்க சொன்ன மாதிரி அப்படி அங்கே என்ன தான் இருக்கு என்று பார்க்கணும்.

    அடுத்த வருடம் செல்லலாம் என்று முடிவு செய்து வைத்து இருக்கிறேன் பார்ப்போம்.

    ரொம்ப நல்லா எழுதறீங்க நீங்க திரட்டிகளில் இணைத்தால் இன்னும் பலரை சென்று சேரும். ஏன் கூறுகிறேன் என்றால் நன்றாக எழுதும் உங்கள் எழுத்து கவனிக்கப்படாமல் போய் விடக்கூடாது என்பதற்காக தான். மொக்கையா இருந்தா சொல்லி இருக்கவே மாட்டேன் :-)

    ReplyDelete