Friday, September 18, 2009

உறவுகளும் உணர்வுகளும்...

உறவுகளும் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஏதோ ஒருவருக்கு நடக்கும் ஒரு நிகழ்வும், நம் உணர்வுகளுடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு நடக்கும் நிகழ்வும் உண்டாக்கும் பாதிப்புகளின் வேறுபாட்டை எல்லோருமே மிக‌ எளிமையாக உணரலாம். அதிலும் சம்பந்தப்பட்டவர் த‌ன் அம்மாவோ, அப்பாவோ, ச‌கோதரனோ, சகோதரியோ, துணையோ அல்லது நம் குழ்ந்தையோ எனும்போது அதன் தாக்கம் மிக வலுவானதாக இருக்கும். அதனை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் நம்மை ஒரு எதிர்பார்ப்புடன் வாழவைக்கின்றன.

அந்த வகையில், குழந்தை எனும் புது உறவின் வருகையும் அதனால் எனக்கு ஏற்பட்ட‌ உணர்வுக‌ளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததன் விளைவு, இந்த பதிவு.

உறவிலும் நட்பு வட்டத்திலும் பலருடைய குழந்தை பேற்றின் மகிழ்ச்சியை ஏற்கனவே பகிர்ந்திருந்தாலும், என் குழந்தை என்று வரும்போது அந்த மகிழ்ச்சியின் தாக்கம் அளவிட முடியாததாக இருந்தது.

ஒருமாதிரியான‌ சந்தோஷ உணர்வு என் மனைவி கர்ப்பமான‌து உறுதியான‌ அன்றே ஆட்கொண்டது. பிரசவ நாள் நெருங்க நெருங்க.......... அந்த‌ உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதன் வெளிப்பாடுதான் பிரவசத்திற்கு 10 நாட்கள் முன்னதாகவே விடுமுறை வாங்கி எனது மனைவியை கூடவே இருந்து கவனித்துக்கொண்டது.

2008-ம் ஆண்டு, அக்டோபர் 26 ம் நாள். அடுத்த நாள் தீபாவளி. பண்டிகைக்காக வாங்கிய பட்டாசுகளை முந்தின நாள் மாலையே வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தோம். திடீரென தோன்றிய பிரசவ அறிகுறிகள் எங்களை அடுத்த 45 நிமிடங்களில் மருத்துவமனையில் நிறுத்தியிருந்தது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு காலை வரை காத்திருக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதுவரை இருந்த exitement காணாமல் போய் ஒருவித பயம் வந்தது (அதற்கு முக்கிய காரணம், எல்லோரும் சொல்லும் அந்த பிரசவ வலி). இருந்தும் அதை வெளிக்காட்டாமல், என் மனைவிக்கு தெம்பூட்டுவதே என் குறிக்கோளாக இருந்தது. அந்த இரவு, தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 12 மணி நேரத்தை விட மிக‌ நீ....ண்ட‌ நேரம் எடுத்துக்கொண்டது. பின்னர் மருத்துவமனை வராண்டா பெஞ்சில் சாய்ந்து அப்படியே தூங்கியும் விட்டேன். ஆனால் என் மனைவி தூங்கவேயில்லை.

ஒரு வழியாக விடிந்தது. அக்டோபர் 27. தீபாவளி. எங்கள் வாழ்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய‌ நாள்.

மருத்துவர் பரிசோதித்தார். ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியத்தை தனியாக‌ என்னிடமும் என் மனைவியிடமும் விளக்கினார். ஏற்றுக்கொண்டு நான் கையொப்பமிட்ட‌ பின், ஆபரேஷன் அறைக்கு என் மனைவியை அழைத்து சென்றனர். என் மனைவி ஓரக் கண்ணில் மகிழ்ச்சியையும் பயத்தையும் கலந்து ஒரு பார்வை என்னை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். கடவுள் மற்றும் மருத்துவரின் மேல் இருந்த அபார நம்பிக்கையாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தையை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பாலும், இப்போது பயம் போய் முழுமையான சந்தோஷம் என்னை ஆட்கொண்டது.


என் வாரிசைக் காண அப்போது என் நெருங்கிய நண்பனும் அங்கு வந்தான். 4, 5 மணி நேரம் ஆனாலும் அவனுடன் நிற்காமல் அரட்டை அடிப்பேன். ஆனால் அன்று எதுவுமே பேசாமல் அந்த நிமிடங்களை சந்தோஷம் கலந்த ஆவலுடன் கழித்தேன். அவனும் அதை உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். 30 நிமிடம் நொடியில் போனது. இதோ எனக்கே எனக்கான ஒரு பிஞ்சு வரப்போகிறது. "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்" - என யாரையாவது கேட்க வேண்டும் என தோன்றியது. அப்பா, அம்மா, அத்தை, மாமா, சித்தப்பா என அங்கு நின்றிருந்த‌ எல்லோருக்கும் இதே உணர்வுதான் அப்போது இருந்திருக்குமா, தெரியவில்லை. 30 நிமிடத்திற்கு மேல் ஆனவுடன் மீண்டும் பயம் வந்தது. ஏன் இவ்வளவு லேட் ஆகுது? வழக்கமா இவ்வளவு நேரம் ஆகுமா இல்ல ஏதும் பிரச்சினையா? லேசான கண்ணீர்! சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்கிறேன். எல்லோரும் அவரவர் நினைவுகளில். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. எல்லாரும் தாமதம் ஆவதை எண்ணித்தான் இப்படி இருக்கிறார்களா, இல்லை ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் இருக்கிறார்களா? 30 நிமிஷமா நான் யாரையும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்திருக்கவில்லை. முதல் 30 நிமிடத்தை தாண்டிய பின், ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் தோன்றியது. வெளியில் பட்டாசு வெடிக்கும் சத்தம் (தீபாவளி). அவர்கள் மேல் கோபம், மருத்துவமனை அருகில் இப்படி வெடி வெடிக்கிறர்களே என்று.

45 நிமிடம் கடந்து நர்ஸ் ஒருவர் வருவதும் அவரது கையில் ஒரு குழந்தை இருப்பதும் அந்த அறைகுறை கண்ணாடியில் பார்த்தவுடன், என் மனம் பறப்பதற்கு ஆயத்தமான‌து. அந்த நர்ஸ் வெளியில் வந்து குழந்தையைக் காட்டி "பையன்" என்று பிறந்த நேரத்தைச் சொன்னார். நான், "சவி எப்படி இருக்கு?" - ன்னு நர்ஸிடம் கேட்டேன். "அவங்க நல்லா இருக்காங்க சார், நீங்க முதல்ல உங்க குழந்தைய பாருங்க" என்றார். அம்மா, அத்தை உள்பட எல்லோருக்கும் முகத்தில் பெரும் புன்னகை!


குழந்தை "வீல் வீல்" என நிற்காமல் அழுது கொண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் "அழாதடா செல்லம்... புஜ்ஜீ... ராஜா..." என கொஞ்ச ஆரம்பித்தனர். அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. நானும் கொஞ்சினேன். என் கொஞ்சலைக் கேட்டு அழுகையை நிறுத்த வேண்டும் என மனம் விரும்பியது. ம்ம்ம்ம்ம்ம்ம். நடக்கவில்லை. குழந்தையின் பிஞ்சு விரல்களை தொட்டுப் பார்த்து மகிழ்ந்தேன். இப்போது எனக்கு ச‌வியை பார்க்க வேண்டும்... சுமார் 45 வினாடிகள் கழித்து, நர்ஸ் குழந்தையுடன் உள்ளே சென்று விட்டார். அப்பா, மாமா, மற்றும் செல்போன் வைத்திருந்த அனைவரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருந்தனர். பெண் உறவினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர் - குழந்தை நல்லா கலரு, முகம் அவங்க ஜாடை, கை - கால் இவங்க ஜாடை, மூக்கு அவங்க மாதிரி என ஒவ்வொரு கோணத்தில் ரசித்தனர். நண்பனுடன் இப்போதுதான் பேசுகிறேன், அவனும் வழக்கமான ச்ந்தோஷமும் கிண்டலும் கலந்து வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினான். நானும் என் நண்பர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பினேன். வாழ்த்துக்கள் call-களாகவும், SMS-களாகவும் வந்த வண்ணம் இருந்தன. call செய்த எல்லோரிடமும், "thanks... நல்லா இருக்காங்க, அப்புறம் பேசுறேன்" என சொல்லி வைத்து விடுகிறேன்.

15 நிமிடம் கழித்து சவியை பார்க்கிறேன். மயக்கமாக இருந்தாள். மயக்கம் தெளிய 2, 3 மணி நேரம் ஆகும் என்றனர். தனி அறை ஒதுக்கப்பட்டு படுக்கையில் தாயையும் சேயையும் அருகருகே படுக்க வைத்தனர். 3 மணி நேரம் கடந்தவுடன் கண் விழித்தாள். பாதி மயக்கம் (உறவினர்கள் வேறு வேலைகளில் மும்முரமாய் இருந்தனர்)... அவளுக்கு பக்கத்தில் குழந்தை, நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. குழந்தையை கொஞ்சியபடி அதன் அருகில் நான். என்னை பார்த்தார். புன்னகை மூலம் எனது மகிழ்ச்சியை சொன்னேன். அவளும் பதிலுக்கு புன்னகை செய்துவிட்டு, "பையன் யார் மாதிரி இருக்கான்?" ன்னு கேட்க (குழந்தையை கண்டிப்பாக பிறந்தவுடன் பார்த்திருப்பாள்), "என்னை மாதிரின்னு எல்லாரும் சொல்றாங்க..." என்றேன் நான். சிரித்துவிட்டு "சந்தோஷமா?" என்றாள், "ஆமாம்" என தலை ஆட்டிவிட்டு, "உனக்கு?" என சைகையில் கேட்டேன், "எனக்கும்தான்" என பதில் சைகை செய்தாள். சில வினாடிகளில் மீண்டும் மயக்கமானாள்.

வெளியில் வந்து அமர்கிறேன். பக்கத்தில் அப்பா. அவரது முகத்தில் மகிழ்சியின் தாண்டவம். ஏனோ, அப்பாவையும் அம்மாவையும் இதே தருணத்தில் பின்னோக்கி பார்க்கிறேன். இதே மாதிரிதானே நான் பிறந்த போதும் அவர்கள் இருந்திருப்பார்கள். பலமுறை என் அப்பாவையும் அம்மாவையும் படுத்தி இருக்கிறேன். அவர்கள் மீது கோபப்பட்டும் இருக்கிறேன். இப்போது அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கவில்லை. அப்பாவும் அம்மவும் என் கண்களுக்கு புதுமையாக தெரிகிறர்கள். அதற்குப் பிறகும் என் அம்மா அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறேன், சண்டை போடுகிறேன், ஆனால் உடனே நானே போய் சமரசம் செய்துகொள்வேன்...

இப்போதும் வெளியில் அதே பட்டாசு வெடிக்கும் சத்தம். ஆனால் இப்போது "கொண்டாடுங்க, எல்லாரும் ஜாலியா தீபாவளிய கொண்டாடுங்க" என்கிறது மனசு. "உலகமே உன் மகன் பொறந்த நாள கொண்டாடுது" என்றார் அங்கிருந்த ஓர் உறவினர். "ஆமாம்" என சிரித்தேன். அன்று இரவு அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வண்ண‌ வெடி வெடித்து மகிழ்ந்தனர். இரவு 12 மணியைத் தாண்டியும் வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அன்று இரவு முழுவதும் ஈரோடு நகரமே வண்ண மயமாக காட்சி அளித்தது, எங்கள் மனமும்தான்.

இப்போது என் மகனுக்கு 11 வது மாதம். குடும்பத்தை பிரிந்து அமெரிக்காவில் 3 மாதம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். ஊர் திரும்பும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனக்கும் என் மகனுக்குமான நிகழ்வுகளை பிரிதொரு முறை சொல்கிறேன்.

குறிப்பு: இது எனது கன்னிப் பதிவு

2 comments:

  1. முத்து ரொம்ப நல்லா இருந்தது பதிவு. நானும் என் மகன் பிறந்த போது இது பற்றி எழுதி இருக்கிறேன்..

    நீங்கள் கூறியது போல அது தனி அனுபவம். குழந்தைகள் உலகம் தனி உலகம்.. அவர்களுடன் நேரம் செலவிடுவது என்பது ஒரு இனிமையான விஷயம்.

    ReplyDelete