Tuesday, November 10, 2009

ஆங்கிலமும் நானும்...

அப்பல்லாம் துவக்கப்பள்ளிகள்ல, மூனாங்கிளாஸ்லதான் A B C D மொத மொத சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கும் எங்கூட படிக்கிறவங்களுக்கும் இரண்டாங்கிளாஸ் முடியும்போதே கிலி புடிச்சுருச்சு. அடுத்த வருஷம் A B C D எல்லாம் படிக்கனுமே! அத கேக்கும்போதே எங்களுக்கு பயம். இப்ப Appraisal meetingல மேனேஜர பாக்குற மாதிரியே மூனாங்கிளாஸ் போனப்புறம் எங்க வாத்தியார பார்த்தோம். ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குஷி இருந்துச்சு, நாமலும் இங்கிலீஷ் கத்துக்க போறோம்னு.

வாத்தியாரும் அந்த 26 எழுத்த அடிச்சு உருட்டி மெரட்டி எங்கள கத்துக்க வச்சாரு. கொஞ்ச நாள்ல 26 எழுத்தையும் எழுதத் தெரிஞ்சுகிட்டேன். சில பேருக்கு என்ன முட்டினாலும் எல்லா எழுத்தையும் எழுத வரல, அப்படியே எழுதினாலும் எது எந்த எழுத்துன்னு சரியா கண்டுபுடிக்க தெரியல (A for Apple எல்லாம் நான் படிக்கும் போது சொல்லித்தரலை). 'முத்துக்குமார், A B C D எழுதி அத எல்லாருக்கும் படிக்க சொல்லிக்குடு'ன்னு வாத்தியார் எங்கிட்ட சொல்லிட்டார், எனக்கு கை கால் புரியல. 'இங்கிலீஷ்ல நாந்தான் பெரிய ஆள் தெரியுமில்ல?'ன்னு திரிஞ்சேன். சிலேட்டுல எழுதிக்காட்டி எல்லாருக்கும் சொல்லியும் குடுத்தேன்.

அப்பிடியே அஞ்சாங்கிளாஸ் போயாச்சு. எங்க பெரியப்பா பையன் அப்ப ஆறாங்கிளாஸ் போனான். அவன் வந்து ஒரு நாள் சொன்னான் 'ஆறாவதுல இருந்து running A B C D -ன்னு புதுசு புதுசா எழுதச் சொல்றாங்கடா'ன்னு ஒரு குண்ட தூக்கி போட்டான். 'அது என்ன மாதிரி A B C D டா, எழுத்தெல்லாம் எப்பிடிடா இருக்கும்?'னு கேட்டா, 'அது எல்லாமே புதுசு புதுசா இருக்குதுடா, எதுவுமே அஞ்சாவதுல படிச்ச மாதிரி இல்ல'ன்னு அவன் எழுதியிருந்த நோட்ட காட்டினான். 'அப்பறம் எதுக்குடா அஞ்சாவது வரைக்கும் இத சொல்லி குடுக்குறாங்க?'-ன்னு எனக்கு ஏகப்பட்ட டென்ஷன், கூடவே பயம்.

அஞ்சாங்கிளாஸ் முடிச்சவுடனே நோட்டு பேனா எல்லாம் மொத மொதல்ல எனக்கு அப்பா வாங்கிக் குடுத்தப்ப எனக்குள்ள அப்படி ஒரு feeling இருந்துச்சு. அந்த புது நோட்டு, புது புத்தகத்த தெறந்து முகர்ந்து பார்த்தா ஒரு அருமையான smell வருமே, அதையெல்லாம் ரசிச்சுகிட்டு பயமும் சந்தோஷமும் கலந்து ஆறாவதும் போயாச்சு. மொதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போகப்போக எல்லாருமே ஈஸியா running a b c d ய கத்துகிட்டோம். அப்பாடான்னு சந்தோஷப்படுறதுக்குள்ள dictation, spelling, grammarனு வரிசையா புதுசு புதுசா சொல்லி குடுத்தாங்க. இருந்த சந்தோஷம் எல்லாம் போயே போச். இங்கிலீஷ் கிளாஸ்னாலே வெறுப்பா இருக்கும். மண்டையெல்லாம் ஒரு மாதிரி 'திம்'னு ஆயிடும்.

எப்படியோ ஒரு வழியா ஆறாவது, ஏழாவது முடிச்சு எட்டாவது போயாச்சு. அங்க இருக்குறது போதாதுன்னு இங்கிலீஷ் புத்தகத்துல கதைன்னு புதுசா சேத்திருந்தாங்க (அது கதைன்னு எனக்கு பத்தாவது வந்த பின்னாடிதான் தெரியும்). அந்த கதைல இருந்து பரீட்சையில கேள்வி வேற கேப்பாங்க. அப்ப இங்கிலீஷ்னாலே எல்லாருக்கும் master notesதான். அந்த புத்தகத்த வாங்கி அதுல இருக்குற short questions, essay, grammarனு எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சோம். அஞ்சு பாடம் இருக்கும் இங்கிலீஷ் புத்தகத்துல. சில சமயம் ஒரே கேள்விதான் மொத பாடத்துலயும் நாலாம் பாடத்துலயும் இருக்கும் ஆனா ரெண்டுக்கும் வேற வேற பதில் (ஏன்னா, ரெண்டும் வேற topic).

அஞ்சு பாடத்துல இருந்தும் வரிசையாதான் பரீட்சையில கேள்வி கேப்பாங்க. ரெண்டாம் பாடத்துக்கான இடத்துல அந்த கேள்வி வந்துச்சுன்னா ரெண்டாம் பாடத்துக்கு கீழ master notesல என்ன போட்டிருக்கானோ அதை எழுதனும், அதே மாதிரிதான் நாலாம் பாடத்துக்கான இடத்துல அந்த கேள்வி கேட்டிருந்தா master notesல நாலம் பாடத்துக்கு கீழ அந்த கேள்விக்கு என்ன பதில் போட்டிருக்கானோ அத எழுதனும்.

இப்பிடியே எந்தவித முன்னேற்றங்களும் இல்லாமலேயேதான் பன்னிரெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சோம். master notes-ஐ எப்படி மனப்பாடம் பண்றது, அதுக்கு குறுக்கு வழி என்ன அப்படிங்கிறதுதான் எங்களுக்கு எல்லா ஆசிரியர்களுமே சொல்லிக் குடுத்தாங்க (ஒண்ணு ரெண்டு பேரத் தவிர). master notesதான் பிரதானம், எவனுக்கும் இங்கிலீஷ் புத்தகத்த வச்சும் பரீட்சைக்கு படிக்கலாம்னே தெரியாது. master notesல இல்லாத ஒரு கேள்வி பரீட்சையில வந்துட்டா அது out off syllabusனு (வாத்தியார் உட்பட) சத்தியம் பண்ணுவோம்.

அப்படியே காலத்தை ஓட்டி காலேஜ் வரைக்கும் வந்தாச்சு. இங்கதான் பெரிய பிரச்சினை. இது வரைக்கும் எப்பிடியோ நல்லா படிக்கிற பையன்னு(?!) பேரு வாங்கியாச்சு. இப்போதான் நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏற போவுது. இத்தன நாளா அந்த ஒரு இங்கிலீஷ் பாடத்த, பரீட்சை எழுதி முடிச்சவுடனே 'அப்பாடா, ஒழிஞ்சதுடா'ன்னு தூக்கி போடுவோம். இங்க பரீட்சைக்கு எல்லா பாடத்தையும் இங்கிலீஷ்ல இல்ல எழுதனும்? நடத்துறவங்களும் இங்கிலீஷ்ல இல்ல நடத்துவாங்க? என்னதான் 'காலேஜ் வந்துட்டோம்டா'ன்னு ஒரு சந்தோஷம் இருந்தாலும் இதுதான் அப்ப என் மண்டைய போட்டு கொடஞ்சுட்டு இருந்துச்சு.

அந்த தீக்குள்ள எண்ணைய ஊத்துனா மாதிரி காலேஜ்ல மொத நாள் மொத கிளாஸே படம் படமா வரைஞ்சி (engineering drawing) ஒரு வாத்தியார் இங்கிலீஷ்ல சொற்பொழிவு ஆத்து ஆத்துனு ஆத்துனார். அதுவும் மூச்சுகூட விடாம தொடர்ந்து 3 மணி நேரம். எனக்கு ஒண்ணுமே புரியல. எதாவது பொறுமையா கவனிக்கலாம்னு கவனிக்க பாத்தா தூக்கம் தூக்கமா வந்துச்சு. இதுல அவரு கேக்குற கேள்விக்கு படார் படார்னு பல பேர் இங்லீஷ்ல பதில் சொல்றாங்க, பல பேர் பதில் சொல்ல கை தூக்குறாங்க. எனக்கு கேள்வியே புரியாது. அப்பப்ப இங்கிலீஷ்லயே வத்தியார் ஜோக் அடிப்பார், பல பேர் சிரிப்பாங்க. எனக்கு அங்க எதுவுமே பிடிக்கல.

நமக்கு மட்டுந்தான் இப்பிடியா இல்ல கம்பெனிக்கு ஆள் இருக்குதான்னு பாக்கலாம்னு பக்கத்துல இருக்குறவங்கிட்ட 'ஏங்க, சார் பேசறதெல்லாம் உங்களுக்கு புரியுதா?' கேட்டேன். 'ம்... எனக்கு நல்லா புரியுதுங்க'ங்குறான். 'அய்யோ, எங்கப்பா என்னைய teacher training போக சொன்னங்க, நாந்தான் இப்பிடி விவரந்தெரியாம engineering எடுத்துட்டோம்டா'ன்னு நெனச்சி அழுவாச்சி அழுவாச்சியா வந்துச்சு. உட்டுட்டு ஊருக்கு ஓடிப் போயிடலாமான்னும் தோனுச்சு. ஆனா பக்கத்துல அழகழகா வித விதமான கலர்ல பொண்ணுங்க வேற உக்காந்துட்டு இருந்தாங்க, அதனால விட்டுட்டு போறதுக்கும் மனசு வரல (ஹி ஹி).

மொத நாள் சாய்ங்காலம் hostelல போயி அப்பிடியே உக்காந்திருந்தேன். ஆனா 'எனக்கு கிளாஸ்ல இங்கிலீஷ்ல நடத்துறது ஒண்ணுமே புரியலை'ன்னு  யார்கிட்டயும் சொல்லல (ஈகோதான் பிரச்சினை). இங்கிலீஷ் கத்துக்கலாம்னு அப்பா வாங்கிக் குடுத்த டிக்ஷனரிய எடுத்து பார்த்தேன். 'இத்தனை வார்த்தைங்க இருக்குது, என்னிக்கு நாம இதெல்லாம் படிச்சு, அது புரிஞ்சு, அப்புறம் நெனப்பு வச்சு... செத்தோம் போ'-ன்னு தோனுச்சு. வீட்டு நெனப்பு வேற வந்து அப்பிடியே உக்காந்திருந்தேன்.

Hostelல என்னோட roomல இருக்குறவங்க அப்பிடியே ஒவ்வொருத்தரா அறிமுகப்படுத்திகிட்டு பேச ஆரம்பிச்சோம். அதுல பல பேர் என்னை மாதிரி தமிழ் மீடியம்ல இருந்து வந்தவங்கதான், சில பேர் மட்டும் இங்கிலீஷ் மீடியம் (அந்த roomல மொத்தம் 21 பேர், இருந்தாலும் எல்லாருமே தாராளமா தங்குற மாதிரி ரொம்ப பெரிய room). ஆனா, என்னோட மனக்கஷ்டத்த அவங்ககிட்ட சொல்லிக்கலை. ஈகோன்னு மட்டுமில்ல, 'இங்கிலீஷ்ல பாடம் நடத்துறது எங்களுக்கெல்லாம் புரியுதே'ன்னு அவங்க சொல்லிட்டா அப்புறம் நான் என்ன ஆவேன்னே தெரியாது. ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டிருக்கும்போது ஒரே வரில சௌந்தர் இதுக்கெல்லாம் மருந்து போட்டான் 'ஏங்க இன்னிக்கு கிளாஸ்ல நடத்துனது சுத்தமா புரியல இல்ல?'ன்னு சிரிச்சுகிட்டே 'அந்த படம் நல்லா இருந்துச்சுல்ல?'ன்னு சொல்றா மதிரி ரொம்ப casualஆ சொல்லிட்டான். எனக்கு தலையில இருந்த பாரமெல்லாம் நொடியில போயே போச்சு . 'ஆமாங்க, எனக்குந்தாங்க... சுத்தமா புரியல போங்க'ன்னேன். அப்பிடியே அங்க இருந்த 5-6 பேரும் இதையே சொல்ல, எனக்கு ஒரே ஜாலி. நாங்க அப்பிடியே ஒண்ணா சேர்ந்து பிளான் பண்ணினோம் - இதுக்கு என்ன பண்ணலாம்னு. அதுக்கும் சௌந்தர்தான் வழி சொன்னான். ஒரு நாளைக்கு ஆளுக்கு 5 வார்த்தை டிக்ஷனரில அர்த்தம் படிச்சு அதை ஒரு நோட்டுல எழுதி வச்சு மத்தவங்களுக்கும் சொல்லி குடுக்கனும். மாத்தி மாத்தி கேள்வி கேக்கனும். இப்பிடி பல பிளான் பண்ணினோம்.

2 நாள் கழிச்சு கிளாஸ்ல மறுபடியும் புயலடிச்சுச்சு. மொத நாள் 3 மணி நேரம் இங்கிலீஷ்லயே கத்துன வாத்தியார் திரும்பவும் வந்தார். இன்னிக்கும் அவர் தொடர்ந்து 3 மணி நேரம் பேசப் போறேன்னு வந்தவுடனேயே சொல்லிட்டார் (இதையெல்லாம் தமிழ்ல சொல்றார், ஆனா பாடம் மட்டும்?). 'கிழிஞ்சுது போ'ன்னு உக்காந்துட்டேன். என்ன என்னமோ பேசினார், போர்டுல வரைஞ்சார், கேள்வி கேட்டார், ஜோக் அடிச்சார், அதுக்கு சிரிச்சாங்க...

நான் அப்பிடியே உக்காந்துட்டு இதை எல்லாம் பாத்துட்டு இருக்கேன், ஆனா மனசு வேற எங்கியோ இருக்கு (பக்கத்துல பொண்ணுங்க வேற, ச்ச... அது ஒரு மாதிரி இருக்கும்பா - இதுக்கு ஒரு பதிவு தனியா போடுறேன்). திடீர்னு நெனப்பு வந்து பாத்தா, வாத்தியார் எதோ கேள்வி கேட்டிருப்பார் போல அதுக்கு பதில் தெரிஞ்சவங்க கையை தூக்கி பதில் சொல்லிட்டு இருந்தாங்க. எல்லாத்தையும் 'தப்பு தப்பு'ன்னு சொல்லிட்டு வந்தார்- எல்லாமே இங்கிலீஷ்தான்.

ஒரு ஸ்டேஜ்ல யாருமே கையை தூக்கல, அதனால 'நீங்க சொல்லுங்க'ன்னு அவரா கை காட்டி கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டார். எனக்கு 'பக்'ன்னுது. எனக்கு கேள்வி என்னான்னே தெரியல. பக்கத்துல இருக்குறவன்கிட்ட கேள்வி என்னான்னு கேட்டேன் 'define straight line'-ன்னான்.  கேள்விய குறிச்சு வச்சுகிட்டேன்.

பதில் சொல்லாதவங்களை அப்படியே நிக்க வச்சுட்டே வந்தார். இன்னும் யாருமே சரியான பதில் சொல்லல, இப்போ யாரும் கையும் தூக்கல. அதனால அவருக்கு கோபம் வேற. 'நம்மல கேட்டா எதாவது சொல்லனும், சொல்லாம நிக்கக் கூடது'ன்னு யோசிக்கும்போதே எனக்கு பதில் தெரிஞ்சுடுச்சு, அதாவது 'இரு புள்ளிகளை மிகக்குறைந்த துரத்தில் இணைக்கும் பாதைதான் நேர்க்கோடு'-ன்னு. அவர் என்னை இன்னும் கேக்கல. நானே கை தூக்கி பதில் சொல்லனும்னு எனக்கு ஆசை, ஆனா இத இங்கிலீஷ்ல சொல்லனுமே. இதுக்கு இங்கிலீஷ்ல என்னான்னு பக்கத்துல இருக்குறவங்கிட்ட கேட்டா அவன் எந்திரிச்சு அவன் சொன்னா மாதிரி சொல்லிட்டான்னா என்னா பண்றதுன்னு அவன்கிட்டயும் கேக்கல.

இன்னும் யாரும் சரியான பதிலும் சொல்லல. நானே ஒரு தைரியத்துல கையை தூக்கிட்டேன். 'yes, tell me'-ன்னார். 'two points short distance connecting'-ன்னு சொல்லி கைல சைகையும் பண்ணேன் (எப்படியும் அவருக்கு என்னோட இங்கிலீஷ் புரியாது, சைகை பண்ணியாவது சொல்ல வந்ததை புரிய வைக்கலாமேன்னுதான்). 'நீங்க தமிழ்லயே சொல்லுங்க'-ன்னு அவரை தமிழ் பேச வச்சேன். சொன்னேன். கிளாஸ்ல மேடைக்கு வரவச்சு பராட்டினார். 'டேய், நானும் பதில் சொல்லியிருக்கேன் பாருங்கடா...'-ன்னு தோனுச்சு (பொண்ணுங்க எல்லாம் என்னை ரொமான்டிக்கா பாக்குறதா எனக்கு தோனுச்சு, கொஞ்சம் ஓவரா போறனோ? சரி சரி உடுங்கப்பா).

அன்னிக்கு சாய்ங்காலம், hostelல சௌந்தர் சொன்னான் - 'ஏங்க இன்னிக்கு அந்த இங்கிலீஷ் மீடியம் பசங்களுக்கு செருப்பால அடிச்சா மாதிரி இருந்திருக்குங்க, ஓவராதான் ஆடுனாய்ங்க. வச்சீங்கல்ல ஆப்பு. கலக்கிட்டீங்க. தமிழ் மீடியம் பசங்கன்னா சும்மாவா? கை குடுங்க'-ன்னு பாராட்டினான். உண்மையில இப்போ நெனைக்கும்போது அந்த பதில்ல எனக்கு மட்டுமில்லாம கிளாஸ்ல இருந்த தமிழ் மீடியம் பசங்க அத்தனை பேருக்கும் ஒரு நம்பிக்கை, தைரியம் வந்திருக்குன்னு தெரியுது. அப்பறம் அதுவரைக்கும் வெறுப்பா இருந்த engineering drawing, எனக்கு ரொம்ப புடிச்ச பாடமாச்சுங்கறது வேற கதை.

அதுக்கப்புறம் முட்டி, மோதி, கொத்தி, கொதறி இப்போ அதுல பொழப்பையே ஓட்டுற அளவுக்கு வளந்துட்டாலும், இந்த வளர்ச்சிக்கான விதை எனக்குள்ள விதைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியிலதான். மனதளவுல தயாரானதும் அதுக்கப்புறம்தான்.

இதுல எனக்கான இன்னொரு முக்கியமான பாடம் என்னான்னா, முன்னாடி மனசு ஒடஞ்சு உக்காந்திருந்தப்போவும், இப்ப குஷியா இருக்குறப்போவும் சௌந்தரோட அந்த வெளிப்படையான பேச்சாலதான் இரண்டையும்விட்டு என்னால ஈஸியா வெளிய வர முடிஞ்சுது. எதையுமே freeஆ பேசிட்டா பாதி பிரச்சினை முடிஞ்சுது. இப்பிடி பல நல்ல விஷயங்கள இன்னிக்கும் சௌந்தர் எனக்கு சொல்லாம சொல்லிக்குடுத்துட்டுதான் இருக்கான்.

-சமுத்ரன்

2 comments:

  1. >அதுக்கப்புறம் முட்டி, மோதி, கொத்தி, கொதறி இப்போ அதுல பொழப்பையே ஓட்டுற அளவுக்கு வளந்துட்டாலும்

    மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. are you using engineering drawing now? :)
    --------------------------------

    > அந்த roomல மொத்தம் 21 பேர், இருந்தாலும் எல்லாருமே தாராளமா தங்குற மாதிரி ரொம்ப பெரிய room

    அதுக்கு பேரு ரூம் இல்ல.. ஹால் :) இல்லேன்னா கல்யாண மண்டபம்

    ReplyDelete
  2. //மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. are you using engineering drawing now? :)//
    நான் "முட்டி, மோதி, கொத்தி, கொதறி இப்போ அதுல பொழப்பையே ஓட்டுற"-ன்னு சொன்னது ஆங்கிலத்துல பேசுறத சொன்னேன் மாதேஸ் :)

    //அதுக்கு பேரு ரூம் இல்ல.. ஹால் :) இல்லேன்னா கல்யாண மண்டபம்//
    ஹாஹா... கேக்குறதுக்கு அப்படி தோனலாம். ஆனா எங்க காலேஜ் வாழ்க்கையிலயே 21 பேரும் சேர்ந்து அந்த முதல் வருஷம் என்ஜாய் பண்ணின மாதிரி இதுவரைக்கும் எங்கயும் என்ஜாய் பண்ணல. கேலி, கிண்டல், பாட்டு, மியூசிக், டான்ஸ்னு தினமும் பட்டய கெளப்புனோம். அய்யோ, அதை இப்போ நினைச்சாலும் சூப்பரா இருக்கு. சௌந்தர் அடிக்கடி சொல்லுவான், "டேய், நாம first yearல 21 பேரும் சேந்து ஜாலியா டெய்லி அடிச்ச லூட்டிதான்டா நம்ம காலேஜ் lifeலயே பெஸ்ட்"-ன்னு.

    ReplyDelete