Wednesday, December 1, 2010

சென்னையில் நானும் நண்பர்களும்

நாலு வருசத்துக்கு முன்னாடி திரும்பிப் பாக்குறேன். சென்னையில நண்பர்களோட கும்பலா பட்டைய கெளப்பிய நாட்கள்.

கோடம்பாக்கம், டிரஸ்ட்புறத்துலதான் நாங்க ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தோம். 2004-ம் வருட ஆரம்பத்துல 4 பேர் சேந்து அந்த வீட்ட வாடகைக்கு எடுத்தோம். அந்த வீட்டுல ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட் ரூம், ஒரு டாய்லெட்+பாத்ரூம் - அவ்ளோதான். அப்புறமா எங்க நண்பர்ங்க, அவங்க நண்பர்ங்கன்னு அப்புறம் அவங்க சகோதரர்னு வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. ஒவ்வொருத்தரும் படிப்ப முடிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வர்றவங்கதான். உண்மையிலேயே அவங்களால வெளியில தங்க வசதி பத்தாதுங்குற பட்சத்துலதான் அந்த வீட்டுல தங்கிக்க அனுமதிப்போம். இல்லன்னா ஒரு வாரத்துல வேற இடம் பாக்க சொல்லிடுவோம். வீட்டுக்கு வந்த புதுசுல வேலை கிடைக்கிற வரைக்கும் பணத்துக்கு கஷ்டப்படுற நண்பர்களுக்கு எல்லாருமா சேந்து உதவியும் பண்ணி இருக்கோம். வேலை தேடுறப்போ, அதே டெக்னாலஜில இருக்குற நண்பர்ங்க அந்த வேலை தேடும் நண்பர்க்கு சரியான பாதைய சொல்லிக்குடுத்து உதவி பண்ணுவோம். அந்த வீட்டுக்கு வந்து நினச்ச வேலை கிடைக்காம திரும்பினவங்க யாருமே இல்ல. இப்பிடியே ஒவ்வொருத்தரா சேந்து ஒரு கட்டத்துல மொத்தமா 22 பேர் அந்த வீட்டுல இருந்தோம். ஆனாலும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்ல (பிரச்சினையே இல்லை என்பதைவிட, பிரச்சினை என்று ஒன்று முளைத்தவுடன் கில்லி எரிவதை ஒரு வழக்கமாகவே வைத்தோம்).

இதை என்னோட ஆபிஸ் நண்பர்ங்ககிட்ட சொன்னப்ப யாருமே என்னை நம்பல. "22 பேர் எப்படி ஒண்ணா சண்டை சச்சரவு இல்லாம இருக்க முடியும்? அத்தனை பேரும் அந்த சின்ன வீட்டுல எங்க, எப்பிடி தூங்குறது? அட, காலையில பாத் ரூம் போகவே சண்டை வருமே?"-ன்னு கேட்டாங்க. ஆனா உண்மை என்னன்னா, எங்க யாருக்கும் அடிதடி, பிரச்சினை வந்ததே இல்ல. இவங்க கேட்ட பின்னாடிதான் யோசிச்சேன், எங்க 22 பேருக்கும் காலையில அந்த ஒத்த டாய்லெட்ட பயன்படுத்துறதுல கூட எந்த பிரச்சினையும் இருக்கல. 

அவங்க அவங்க கெடச்ச இடத்துல படுத்து தூங்கிடுவோம். ஹால்ல பாதி பேர், பெட் ரூம்ல கொஞ்சம் பேர், வராண்டால கொஞ்சம் பேர்ன்னு கெடச்ச எடத்துல தூங்கிடுவோம். பல சமயம் ஒருத்தன் மேல கால/கைய போட்டு படுத்திருப்போம். தூக்கத்துல சில சமயம் உதைச்சிருப்போம்/உதை வாங்கியிருப்போம், ஆனா யாரும் எதையும் சிரியஸா எடுத்துக்க மாட்டாங்க. லேட் நைட்-ல யாராவது வந்தாங்கன்னா லைட் இல்லாம நகர முடியாது. வீடு முழுக்க கேப் இல்லாம எல்லாரும் படுத்திருப்போம். கேப் பாத்து கால வச்சுதான் நடக்கணும்.

அந்த சமயத்துலதான் "ஆட்டோகிராப்" படம் வந்துச்சு. அதோட சிடி-ய ஒருத்தன் வாங்கிட்டு வந்து வீட்டுல போட்டுட்டான். தெனமும் நைட்டு ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போனா, ஒருத்தன் அந்த சிடி-ய போட்டு பாத்துட்டு இருப்பான். அப்படியே எல்லாரும் படத்துல உக்காந்துடுவோம். இன்டர்வல் வரைக்கும்தான் படத்த பாப்போம் (ரெண்டாம் பாதி சோகம், செண்டிமெண்ட் - அது எங்களுக்கு பிடிக்காது), அதுக்கும் மேல நேரா கிளைமேக்ஸ்தான் பாப்போம். அந்த மொத பாதி படத்தோட வசனம் எல்லாம் எங்க எல்லாருக்கும் அத்துப்படி.

தினமும் ஒருத்தன் மாட்டுவான். யாராவது அவன ஏதாவது ஒரு விஷயத்துல வம்புக்கு இழுப்பாங்க, அவனும் பதில் பேச முடியாம லேசா முழிச்சுட்டான்னா... அவ்ளோதான், அன்னிக்கு அவன் முடிஞ்சான். எல்லாருமா சேந்து அவன ஓட்டி தள்ளிடுவாங்க (உங்க வீட்டு கிண்டல் எங்க வீட்டு கிண்டல் இல்லங்க). மொத்தத்துல யாரையும் "டல்"லா இருக்கவோ / கவலையோட இருக்கவோ விட மாட்டாங்க.

வாரக்கடைசின்னா ஜாலியோ ஜாலிதான். சனிக்கிழம ஆளாளுக்கு ஊரு சுத்த கெளம்பிடுவோம். (பல சமயம்) சாயங்காலம் ஆச்சுன்னா ஒண்ணா சேந்து கிரிக்கெட் வெளையாட பக்கத்துல இருக்குற அரசு துவக்கப் பள்ளிக்கு போயிடுவோம். அங்க போனா, அந்த சின்ன கிரவுண்ட்ல ஏற்கனவே பத்து டீம் வெளையாடிட்டு இருக்கும். நாங்க பிட்ச்-க்கு எடம் பாத்து பதினோராவது டீமா அதுலயே வெளையாடுவோம். ஆனா அத்தனை டீம் ஆடினாலும் அவங்க அவங்க ஆடுற பந்த மட்டுந்தான் கரெக்ட்டா பீல்டு பண்ணுவாங்க. ஆடி களச்சு அப்படியே போயி பரோட்டா கடைல ஆளுக்கு 4 பரோட்டா கொட்டிகிட்டு வீட்டுக்கு போயிடுவோம்.

ஞாயித்துக்கெளம காலைல 2 பேர் போயி 3-4 கிலோ கோழி கறி வாங்கிட்டு வருவாங்க. 2 பேர் வெங்காயம், பூண்டு உரிக்க சொன்னா உரிப்பாங்க. 2 பேர பாத்திரம் கழுவ விடுவோம். அரிசி சோறு வச்சு ஒருத்தன் கோழிய சமைச்சுடுவான் (நானும் பல நாள் சமைச்சிருக்கேன்). எங்களோட கோழி கறி சமையல் ருசி தெரிஞ்ச நண்பர்ங்க, அன்னிக்கு கரெக்ட்டா டைமுக்கு வந்துடுவாங்க. எல்லாரும் ஒண்ணா வட்டமா உக்காந்து சோத்தையும் கோழியையும் ஒரு புடி புடிச்சுட்டு, அப்பிடியே உண்ட மயக்கத்துல ஒரு பகல் தூக்கத்த போடுவோம். சாங்காலம் அப்பிடியே மெல்ல எந்திரிச்சு, அத்தன பேரையும் கெளப்பி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயிடுவோம் (அதிகமா உதயம், மினி உதயம், காசி தியேட்டர்தான் போவோம்).

இதையெல்லாம் நெனைக்க நெனைக்க..... ஸ்ஸ்ஸ்ஸ்!!! என்னமா என்ஜாய் பண்ணியிருக்கோம் போங்க. அதெல்லாம் ஒரு காலம். இதுல இன்னும் ஆச்சரியம் என்னன்னா, எங்க யாருக்கும் தம் / தண்ணி அடிக்கிற பழக்கமே இல்லை (ஒன்றிரண்டு பேரத் தவிர, அவங்களும் அடிக்கடி தண்ணியடிக்கிற ஆளுங்க இல்ல. அப்படியே அடிச்சாலும் வீட்டுல அடிக்க மாட்டாங்க), அப்புறம் ஒருத்தனுக்கும் பொண்ணுங்க பழக்கமும் இல்ல ("சுத்தம், மொத்ததுல நீங்க யாரும் உருப்படவே இல்லை"ன்னு முனகுறது கேக்குது, விடுங்க.. நாங்க அப்பிடியே வளந்துட்டோம், என்ன பண்ண?).

இப்பிடி வாரக்கடைசியில நண்பர்களோட கிரிக்கெட் வெளையாடுறது, சமைக்கிறது - சாப்பிடுறது, ஊர் சுத்துறது, சினிமா போறது, அரட்டை அடிக்கிறது, கிரிக்கெட் பாக்குறது, தூங்குறது-ன்னு பட்டைய கெலப்புவோம். செய்றது எல்லாம் எதுவும் பிளான் பண்ணினதா இருக்காது, ஆனா நெனச்சவுடனே இருக்குறவங்க எல்லாரும் சேந்து கெளம்பிடுவோம். எந்த விஷயமானாலும் (300-400 கி.மீ. போறதுன்னா கூட) அப்படியே நெனச்ச நேரத்துல கெளம்ப வேண்டியதுதான் - போகும்போது அப்படியே போன் பண்ணி வீட்டுல அப்பா-அம்மாகிட்ட சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன். வீட்டுலயும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

மாயா ஜால் எதுத்தாப்புல இருக்குற பீச்சுல போயி பல தடவ ஆட்டம் போட்டது, பாண்டிச்சேரி டிரிப் போனது - அதுவும் அங்க போயி ஒரு பைட் சீன் சினிமா ரேஞ்சுக்கு எல்லாரும் சேந்து எடுத்தது, ரூம்மேட் சகோதரி கல்யாணத்துக்கு திருநெல்வேலி போனது இப்பிடி நாங்க எல்லாம் ஒண்ணா சேந்து போட்ட ஆட்டமெல்லாம் என்னிக்கும் மறக்கவே முடியாது. அதே மாதிரி அப்போ வந்த ஒரு படத்த கூட விட்டது கெடையாது - ரிலீஸ் ஆன வாரத்துலயே எப்படியும் பாத்துடுவோம். மொக்கை படத்த கூட விட்டதில்ல. வாரத்துல எப்படியும் ஒரு படம் பாத்துடுவோம் (சில சமயம் 2-3 படம் பாத்த வாரமெல்லாம் உண்டு).

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொறுப்ப சிறப்பா செஞ்சாங்க. ஒருத்தன் வீட்டுக்கு தேவையான பொருள பாத்து வாங்குறதுல கில்லாடி, ஒருத்தன் பணத்த தேவைக்கு மட்டும் சிக்கனமா செலவு பண்றதுல கில்லாடி. ஒருத்தன் எல்லாரையும் அரவனைக்கிரதுல கில்லாடி, ஒருத்தன் யாரும் கோபப்பட்டால் எளிதில் சமாதானப்படுத்துவதில் கில்லாடி, ஒருத்தன் டைம்-பாஸ் காமெடி பண்றதுல கில்லாடி, ஒருத்தன் ரெண்டு பேருக்கான பிரச்சினைய தீக்குறதுல கில்லாடி. ஒருத்தன் எதையும் பாசிட்டிவ்வா மட்டுந்தான் பேசுவான், ஒருத்தன் எல்லார்கிட்டயும் பாலிஷா பேசுறதுல கில்லாடி, ஒருத்தன் எல்லாரையும் ஒருங்கினைக்கிறதுல கில்லாடி, ஒருத்தன் சமையல்ல கில்லாடி. இப்பிடி ஆளாளுக்கு ஒரு விதத்துல "பலே"ன்னாலும், எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி சாப்பிடுறதுல கில்லாடிங்க, எவ்ளோ சமைச்சாலும் காலி ஆயிடும். :)  அதே மாதிரி நல்லத சொன்னா எல்லாரும் தட்டாம செய்வாங்க.

நாங்க இப்பிடி ஆட்டம் போட்ட அந்த வீட்டுக்கு எதேச்சையா ஒரு நாள் வர்ற யாருக்கும் அந்த வீட்டுலயே தங்கிக்கனும்னுதான் தோணும். வீட்டுக்கு வந்துட்டு போன பல நண்பர்கள் என்கிட்டே இத சொல்லி கேட்க சந்தோஷமா இருந்துச்சு. நான் சென்னை வந்த புதுசுல, நட்பு அடிப்படையில நண்பர்கள் எடுத்திருந்த ஒரு வாடகை வீட்டுல நானும் என் நண்பனும் தங்கவேண்டிய நிலை இருந்துச்சு, அப்ப "எதுக்குடா இங்க வந்தோம்"ன்னு நாங்க நினைக்கும்படி ஆயிடுச்சு. ஆனா, நாம இருந்த இந்த வீட்டுக்கு வந்த யாரையும் அப்படி நினைக்க வைக்கலங்குறதே பெரிய சந்தோஷமா இருக்குது - அதுக்கு அந்த வீட்டிலிருந்த அத்தனை நண்பர்களும் மிக முக்கிய காரணம்.

இப்போ ஆளாளுக்கு ஒரு பக்கம் போயாச்சு, அந்த வீட்டையும் காலி பண்ணியாச்சு. அந்த நண்பர்கள் கிட்ட பேசிக்கூட பல நாட்கள் ஆச்சு. ஆனா அந்த வீடும் அங்க எங்களுக்கு இருந்த மித மிஞ்சிய நட்பும் என்னிக்கும் எங்க யாருக்கும் மறக்காது.

-சமுத்ரன்

10 comments:

  1. Mudiyala nanbaa.. pinnara.. Really it was a fantastic experience in everyones life..

    ReplyDelete
  2. ம்ம்.. அது கனா காலம்.

    "ஆட்டோகிராப்" படம் (1 st part) மட்டும் நம் Room-ல் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்ததே...

    Sunday morning கட்டாயமாக cricket விளையாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து ஓவ்வொரு Sunday அதிகாலை தூக்கத்தை கெடுப்பாயே.. அதை மறக்க முடியுமா?

    இதற்கு பயந்தே சிலர்(?) Sunday கூட office போன கதையெல்லாம் உண்டு. J

    We never get those days again

    Regards,
    Seenivasan

    ReplyDelete
  3. Unfortunately i cld not take part in this house, i visited many times and know how good the environment was.. u captured fantastically..!!!!

    -Ram

    ReplyDelete
  4. Muthu,
    Really superb…. I travelled to those days when I read this…..

    -Arulpalaniraj Arunagirisamy

    ReplyDelete
  5. ஆனாலும்.. முத்துக்குமாருக்கு பந்து பொறுக்கி போட மட்டும்தான் தெரியும்னாலும்.. பெரிய பிளேயர் மாதிரி எல்லாரையும் கட்டாயபடுத்தி வெளையாட கூட்டிகிட்டு போறத யாராலையும் மறக்க முடியாது..

    ஆடற ரெண்டாவது இல்ல மூணாவது பால்ல அவுட் ஆயிட்டு, சௌந்தர்/சுப்பு அடிக்கிற six/four பாத்துகிட்டு, அந்த மண்ட காயிற வெயில்ல பந்து பொறுக்கி போடறதுதான் நம்ம பல பேரோட வேலையே..

    ஆனா Indor-ல அவங்க எல்லாரையும் (சிமெண்ட் தரையில) கூட மண்ண கவ்வ வைக்க முத்துக்குமாரால முடியும் - Shane warne கூட டிப்ஸ் கேட்குற அளவுக்கு spin ஆகும்.. அருணே ரொம்ப நேரம் தாக்கு புடிக்க முடியாதுன்னா பாத்துக்குங்க..

    i heard some where .. these lines..
    Whenever we recall times where we laughed ,we used to cry and when thinking of times when we cried ,we may sometimes laugh now..
    Yes.. it is true..
    We are missing all of them .. now.. wishing that we all meet and again play...

    :-(

    -Raja

    ReplyDelete
  6. அது ஒரு அருமையான அழகிய நிலா காலம். இனிமே வராது, ரொம்ப கஷ்டம். நீ சொன்ன பிறகுதான் நாம எவளோ ஜாலியா இருந்திருக்கோம்-ன்னு தெரியுது. உனது இந்த படைப்பு is dedicated to our friends.

    -சௌந்தர்

    ReplyDelete
  7. Great da Muthu.. You touch our heart (Nanbanda !!) ... While reading this email, my face was very bright and so happy and it put me to the old golden days..... You described most of things ... Even now we are staying in different location, but i am sure everyone still thinking Chennai house was good..... No one forgot our house...

    Anyway life has to change and now we are in different locations and email and phone call is the only options to share our thoughts (It is much better than writing letter :-) !! )... We can try to meet at least yearly once (Now everyone may be busy with their regular work but i am sure around after 10 years or later we will arrange get together to make this...)

    Do we have any old group photo :) !!...

    Best regards,
    Kumar Ananth S.

    ReplyDelete
  8. நாங்க ஒரு ஐந்து பேர் சென்னையில் ஒரே அறையில் இருந்தோம்... நான் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இருந்தேன் ..நான் தான் கடைசியாக அறையில் கிளம்பிய நபர். உங்களைபோல பல அனுபவங்கள் இருந்தது.

    //அட, காலையில பாத் ரூம் போகவே சண்டை வருமே?"-ன்னு கேட்டாங்க. ஆனா உண்மை என்னன்னா, எங்க யாருக்கும் அடிதடி, பிரச்சினை வந்ததே இல்ல. இவங்க கேட்ட பின்னாடிதான் யோசிச்சேன், எங்க 22 பேருக்கும் காலையில அந்த ஒத்த டாய்லெட்ட பயன்படுத்துறதுல கூட எந்த பிரச்சினையும் இருக்கல. //

    எங்க அறையில் தினமும் சண்டை தான் அது ஒருத்தன் கூட மட்டும். உள்ளே போய் தம்மடிச்சுட்டு வருவான்..அதுக்கு ஒரு பெரிய சண்டை நடக்கும் :-) சண்டை இல்லைனாலும் போர் தான்

    //அவங்க அவங்க கெடச்ச இடத்துல படுத்து தூங்கிடுவோம். ஹால்ல பாதி பேர், பெட் ரூம்ல கொஞ்சம் பேர், வராண்டால கொஞ்சம் பேர்ன்னு கெடச்ச எடத்துல தூங்கிடுவோம்//

    இது எங்களுக்கு புத்தாண்டு இரவு அன்று நடக்கும்.. அனைவருடைய நண்பர்களும் வருவார்கள் எல்லோரும் காலை மூன்று மணி வர சுற்றி விட்டு இங்கே வந்து தான் படுப்பார்கள்.மொத்தம் ஐந்து பேர் படுக்க கூடிய அறையில் 14 பேர் படுப்போம்.

    ReplyDelete
  9. //தினமும் ஒருத்தன் மாட்டுவான். யாராவது அவன ஏதாவது ஒரு விஷயத்துல வம்புக்கு இழுப்பாங்க, அவனும் பதில் பேச முடியாம லேசா முழிச்சுட்டான்னா... அவ்ளோதான், அன்னிக்கு அவன் முடிஞ்சான். எல்லாருமா சேந்து அவன ஓட்டி தள்ளிடுவாங்க //

    இது அனைவரின் அறையிலும் நடக்கும் போல இருக்கு.. ஆனால் எங்க அறையில் இருப்பவர்கள் அனைவரும் உஷார் எங்களுடைய மற்ற நண்பர்கள் யாராவது வந்தால் அவரை செமையா ஓட்டி அவன் அடுத்த வாட்டி எங்க அறைக்கு வருவது என்றால் ஓட்டக்கூடாது என்று கண்டிசன் போடும் அளவிற்கு ஆகி விடும்

    //எல்லாரும் ஒண்ணா வட்டமா உக்காந்து சோத்தையும் கோழியையும் ஒரு புடி புடிச்சுட்டு, அப்பிடியே உண்ட மயக்கத்துல ஒரு பகல் தூக்கத்த போடுவோம். சாங்காலம் அப்பிடியே மெல்ல எந்திரிச்சு, அத்தன பேரையும் கெளப்பி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயிடுவோம்//

    எங்க இடமும் அப்படித்தான் ..ஆனா நான் சமைக்க மாட்டேன் :-))

    //எங்க யாருக்கும் தம் / தண்ணி அடிக்கிற பழக்கமே இல்லை //

    நாங்க பாதி பாதி ..பாதி கோஷ்டி தண்ணி பாதி பெப்சி கோக்

    சினிமா என்றால் என்னுடைய நண்பன் ஒருத்தன் தான் எனக்கு கம்பெனி ..ஒரு படம் விட மாட்டோம். ஒரே நாள்ல நான்கு படம் எல்லாம் பார்த்து இருக்கோம்.

    என்னுடைய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்னுடைய குடும்பத்துடன் ரொம்ப நெருங்கி இருப்பவர்கள் என் அறை நண்பர்கள் மட்டுமே.இன்றும் அனைவரிடமும் தொடர்பு உண்டு.

    இன்று என் அறை நண்பனுக்கு பிறந்த நாள்.

    இது பற்றி நான் ஒரு பதிவு எழுதுகிறேன். முத்து ரொம்ப நன்றாக இயல்பாக எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  10. @கிரி நன்றிங்க, நிச்சயமா அதெல்லாம் மறக்க முடியாத நாட்கள். எழுதுங்க, உங்களோட எழுத்து நடையில படிக்க ஆவலா இருக்கேன்.

    ReplyDelete